திங்கள், ஜூன் 20, 2005

பாதுகா தரிசனம்

இந்தக் கதை என் தந்தையாருக்கு உண்மையாகவே ஏற்பட்ட அனுபவம். அப்போது நான் மன்னார்குடியில் எட்டாவது படித்தாக ஞாபகம் (1979). என் தந்தையார் இக்கதையை அப்போதே எழுதினாலும், 2003ல்தான் 'தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்' என்ற புத்தகத்தில் முதன் முறையாக பதிப்பேறியது.

மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள விரும்பினால், முகவரி: பார்த்தசாரதி


பாதுகா தரிசனம்

நான் மன்னார்குடி வாசி.

ஊரின் பெயரைக் கேட்டதும் மன்னார்குடி மன்னன் அழகு என்று ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியைத்தான் நினைக்கத் தோன்றும். அந்த கோபாலனை ஒரு நாள் மாலை தரிசனம் செய்த போது கிடைத்த அபூர்வ அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதற்கு முன் மன்னார்குடியைப் பற்றி ஒரு வார்த்தை.

தஞ்ஞாவூர் அல்லது கும்பகோணத்திலிருந்து பஸ்ஸைப் பிடித்தால் ஒரு மணி நேரத்தில் மன்னார்குடியை அடையலாம். ஊரின் பெருமையை 'ஊர்பாதி குளம்பாதி' என்ற வழக்கிலிருந்து அறியலாம். பாம்பணியாறு ஊரை வலமாக வரும் அழகோடு கூட, மற்றும் ஒன்பது நீர் நிலைகள் பல்வேறு பெயர்களில் புராணகாலம் தொட்டு இன்று வரை இருந்து வந்து ஊருக்கு அழகூட்டுகின்றன.

ஹரித்ரா நதி என்ற பெரிய குளம் கோயிலின் வடக்கு பக்கம் உள்ளது. 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோபிகைகள் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமண பூச்சுகள் இந்த தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா நதி எனப் பெயர் பெற்றது எனக் கூறுவர். குளத்தின் நடுவே வேணுகோபாலன் சந்நிதி; இந்த பெரிய குளத்தை சுற்றிலும் செங்கல் சுண்ணாம்பு காரையுடன் கூடிய கரைக்கட்டு. இன்றும் ஒரு சேதமும் இல்லது பளிச்சென தெரியும் தோற்றம். கருங்கல்லினால் ஆன படித்துறைகள் எந்த நூற்றாண்டில் எந்த மன்னன் கட்டியதோ!

இன்று பல பொறியாளர்கள், பல நகரங்களிலும், குளம் குட்டைகளின், மழைநீரையோ, நதி நீரையோ, தேக்கி வைப்பதின் மூலம், நிலத்தடி நீரை காப்பாற்றி நல்ல முறையில் பெறலாம் என கூறுகிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் பல தீர்த்தங்கள் என்ற பெயரில் புனிதமான பல நீர்நிலைகளை கட்டிப் பாதுகாத்து, பராமரித்து, நல்ல நிலையில் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஹரித்ரா நதி இன்றும் நல்ல நிலையில் பளிங்கு போல் நீருடன் பராமரிக்கப்படுவதற்கு ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தீர்த்த தரிசனம் செய்து கோயில் முன் வந்தால் கண்ணில் முதலில் படுவது 54 அடி உயரமுள்ள ஒற்றைக்கல் கருட ஸ்தம்பம்தான். கம்பீரமான அதன் உச்சியின் மேல் கருடனுக்கு என ஒரு சிறு அழகிய கோயில். ஆச்சரியமான அமைப்பு. அடுத்து பதினாறு கால் மண்டபத்தை தாண்டி ராஜகோபுரத்தை அடைகிறோம்.

கோயில் வாயிலை அடைந்ததும் நமது முதல் எண்ணம் கால் செருப்புகளை எங்கு விட்டுச் செல்வது என்பதுதான். இருபுறமும் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆமாம் - எல்லோரும் செருப்புக் காலுடன் தான் ராஜகோபுரத்தில் நுழைகிறார்கள். 'எல்லோரும் எவ்வழி அவ்வழியே நம்வழி' என நாமும் செல்ல வேண்டியதுதான். நூறு அடிக்கு மேல் கருங்கல் தளத்தில் நடந்து சென்றால் இரண்டாம் கோபுரவாயிலின் மண்டபத்தை அடையலாம். தென்புற திண்ணையில் காலணிகளை விட்டுச் செல்ல 'பாதணிகள் பாதுகாக்குமிடம்' என்று சிறு பலகையில் சாக்கட்டியால் எழுதிய விபரத்தைக் காணலாம்.

எந்தக் கோயிலிலும் இல்லாத இந்த சலுகை ஏன்? என்று நான் பலமுறை நினத்தது உண்டு.

ஆமாம்! கோபாலனின் எண்ணத்தை புரிந்து கொள்வது சுலபமா? பாதை தவறாமல் வழிப்படுத்த கூடவே ஒரு கோல். தவிற காடுமேடு சுற்றி, மேய்க்க அவன் செல்லும் போது அவன் பாதங்களைப் பாதுகாக்க பாதரக்ஷை. அவன் பணி செய்யும் பாதரக்ஷையை கோபுர வாயிலுக்கு வெளியே என்று வைக்காமல் உள்ளே என்று இடம் கொடுக்க எண்ணினானோ என்னவோ!

ஒருமுறை முதியவர் ஒருவர் ராஜகோபுரத்தை தாண்டி காலில் செருப்பு இல்லாமல் முன் மண்டபத்தை அடையுமுன் வெய்யில் சூட்டில் 'கோபாலா! கோபாலா!' என்று தவித்ததைப் பார்த்தேன். ராஜகோபுரத்திற்கு வெளியே காலணிகளை விட்டுவிட்டு வரும் பக்தர்கள், அவன் கோயில் உள்ளே கால்சூடு பொறுக்கமாட்டாமல் 'கோபாலா' எனக் கூப்பிட்டால் என்ன செய்வது? பக்தர்கள் வசதிக்காகவோ என்னவோ கோபுரவாயிலைக் கடந்து சில நூறு அடி தூரம் தாண்டி இரண்டாம் கோபுரவாயில் பக்கம் பாதணிகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவன் திருவுளம் போலும். பாதணிகளைப் பாதுகாக்கும் பெரியவர் அங்கு திண்ணையில் அமர்ந்திருப்பார்.

பல இடங்களில் காணப்படுவது போல், மரக்கூண்டுகள் கட்டி அதில் செருப்புகளை வைக்கும் நடைமுறை கோபாலன் சந்நிதியில் கிடையாது. பெயருக்கு மூங்கில் பிளாச்சுகளினால் ஆன தடுப்பு இடத்தில் தரையில் அமர்ந்திருப்பார் பெரியவர். அவரச் சுற்றி பல ஜோடி செருப்புகள். அவரே ஒரு புதிர்! பொறுமையாக இருக்கும் அவர், ஏதாவது காரணத்தால் அவர் பொறுமையை யாரவது சோதித்தால், அமர்ந்த படியே கம்பீரமான குரலில் தாண்டிக்குதிப்பார். யாராலும் அவரைப் பிடிக்க முடியாது. இதுவரை யாரும் எதிர்த்து பேசியது இல்லை. வயது முதிர்ந்தவர் என்ற மரியாதை காரணமாய்க் கூட இருக்கலாம்.

அவர் செருப்புகளை நம்மிடமிருந்து வாங்கும் விதம், அவற்றை வைக்கும் முறை எல்லாமே விசித்திரமாய் இருக்கும். கால் செருப்புகள் தானே என சிலர் அலட்சியமாய் அவர் முன் வைத்தாலும், ஏதோ தன் பொறுப்பில் விட்டுச் செல்லப்படும் பொக்கிஷத்தை எடுத்து பத்திரப் படுத்துவது போல், இரு கைகளாலும் ஜோடியை எடுத்து வைப்பார்.

மற்றும் பல சேவார்த்திகள், முதியவர் முகத்துக்கு முன் கால் செருப்பை கழற்றாமல், முன்பாகவே கழற்றி, கையில் எடுத்துக் கொண்டு வந்து தாங்களே மூங்கில் தடுப்பிற்குள் வைத்து விடுகிறோம் என்பார்கள். அதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். தன் முன்னால் வைக்க வேண்டும்; தான் மட்டும் தான் அவற்றை உள்ளே எடுத்து வைக்க வேண்டும் எனத் தீர்மானாய் கூறி விடுவார்.

என்னைப் பொறுத்தவரையில், கோபாலனின் சந்நிதியில் கிடைக்கும் ஆனந்தத்தைப்போல், மாலை நேரத்தில் சிறிது நேரம் இந்த பெரியவர் நடவடிக்கைகளை கவனிப்பதில் ஒரு வித மகிழ்ச்சி; மன அமைதி.

இரண்டாம் கோபுர வாயிலைத்தாண்டி உட்புறம், ஆயிரங்கால் மண்டபத்தையும் கடந்து, அடுத்த கோபுர வாயிலையும் தாண்டி வந்தால் துவஜஸ்தம்பமும் பலிபீடமும் காணலாம். தெற்கு பக்கம் முற்ற வெளியை கடந்து தாயார் சந்நிதியை அடையலாம்.

ஸ்ரீ செங்கமல தாயார் சந்நிதியை அடந்ததும், நாம் தாயாரின் கடாக்ஷத்தில் மன அமைதி பெற்று, ஆனந்ததை அடைவதை உடனேயே உணரலாம். வீற்றிருந்த திருக்கோலம். அங்கு உள்ள பட்டர் அனாவசியமாய் பேசமாட்டார். பார்க்கப் போனால் பேசவேமாட்டார்தான். அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தால் நம் காதுக்கு மட்டும் கேட்கும் படி, 'பெயர், நக்ஷத்திரம்' எனக் கேட்டு அர்ச்சனையை ஆரம்பிப்பார். மதுரமான குரல். அவர் ஒதுங்கி நின்று பணிவுடன் அர்ச்சனை செய்யும் போது, நம்முடைய சிந்தனைக்கும், தாயாரின் கருணைப் பார்வைக்கும் துளியும் இடையூறு இல்லது, தாய்க்கும் மகவிற்கும் நடுவில் நான் ஏன்? என்ற தோரணையில் நடந்து கொள்கிறாரோ என நினைக்கத் தோன்றும்.

தரிசனம் முடிந்ததும் மிக அழகான, அகலமான தாயார் பிரகாரத்தை வலம் வந்து, பெருமாள் சந்நிதிக்கு வரும் வழியில் உள்ள அனுமாரையும் வணங்கி விட்டு கோபாலனின் சந்நிதியை அடையலாம்.

ராஜகோபாலனின் சந்நிதியில் இருக்கும் பட்டரின், பேச்சு செயல் எல்லாமே வேறு விதமானது. கருவறையில் இருப்பவன் ராஜா என்றால் இவரோ அவன் மதிமந்திரி போல். குடிமக்கள் மந்திரி மூலம் அரச அவையில் முறையீடு செய்வது போல, பட்டர் நடுவில் நான் இருக்கிறேன் என ராஜபயம் இல்லாது செய்துவிடுவார்.

கருடன் சந்நிதியைத் தாண்டி வாயில்படி ஏறி இறங்க வேண்டும். கோபாலனின் சந்நிதிக்கு முன் மகாமண்டபமான சபை. தூண்கள் எல்லாம் பித்தளைத் தகடுகள் வேயப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில்தான் ஸ்ரீ கோபலனுக்கு உற்சவ காலங்களில் அலங்காரம் நடைபெறும். நாம் படி ஏறும்போதே மகாமண்டபத்தில் மேற்புறம் இருக்கும் பட்டர் 'வாங்கோ! வாங்கோ!' எனக் கம்பீரமாக குரல் கொடுப்பார். சற்று வெளிச்சக் குறைவான இடம். தவிர வெளியிலிருந்து வருபவர்களுக்கு இன்னும் இருட்டாய் தெரியும்.

அந்த இடத்தில் பட்டரின் குரல்தான் முதலில் நம்மை வரவேற்கும். 'நிதானமாய் பார்த்து வாங்கோ; கீழே படியில் நன்றாக பார்த்து வாங்கோ' என்ற வார்த்தைகள். படியின் கீழே கோயில் திருப்பணி செய்த அரச தம்பதிகள், எந்த அரசரோ நமக்குத் தெரியாது, விழுந்து வணங்கும் முறையில் செதுக்கப்பட்டிருக்கும் கருங்கல் சிலை. 'தடுக்கி விழுந்து விடாதீர்கள்' என சொல்ல மாட்டார். அவர் எச்சரிக்கை வேறு விதமாய் இருக்கும். அதே போல் மகாமண்டபத்தில் குறுக்கே போகும் வழக்கம் கிடையாது. அதற்காக 'குறுக்கே வராதீர்கள்' எனக் கூற மாட்டார்; 'பிரதஷணமாய் வாருங்கள்' என்று தான் கூறுவார். எதையுமே 'இல்லை; கூடாது' என எதிர்ப்பதமாய்க் கூறாமல், 'எப்படி செய்ய வேண்டும்' என பாந்தமாய்க் கூறுவார்.

வரும் பக்தர்களை உபசாரமாய் வரவேற்று, அவர்கள் மனத்தில் ஒரு நொடியில் சந்தோஷத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி விடுவார். 'எந்த ஊரோ?' என்ற அவர் கேள்விக்கு வந்தவர்கள் இவருக்குத் தெரிந்திருக்குமோ என்ற தயக்கத்துடன் தொலைவிலுள்ள 'இராமநாதபுரம் பக்கம்' என்று பதில் சொன்னால் உடனே, 'அடடே! நம்ம இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்தவர்களா? சேதுபதிகள் பல கோயில்களை கட்டி, நிர்வகித்து ஆண்ட புண்ணிய பூமியல்லவா? ரொம்ப சந்தோஷம். கோபாலனின் கடாக்ஷம் எல்லோருக்கும் குறைவில்லாமல் உண்டு. வாருங்கள்!' என்று ஆரம்பிப்பார். வந்தவருக்கு நாம் பிறந்த பூமியைப் பற்றி இவ்வளவு அறிந்திருக்கிறாறே என்ற சந்தோஷத்தில் இராமநாதபுரம் சேதுபதிக்கு கொடுக்கும் வரவேற்பு மாதிரி தனக்கும் பலத்த உபசாரம் செய்யப்படுவது போல உணர்வார்.

சற்று வழுக்கை விழுந்ததால் வயதான தோற்றமுடையவரும், ஒப்பனை கூடுதலான அவர் சகதர்மணியும் வந்தால் 'யார் இது, தங்கள் பெண்ணா?' இன்று இங்கிதம் இல்லாமல் கேள்விகள் கேட்க மாட்டார் இந்த பட்டர். வருபவர்கள், ஒருவருக்கு ஒருவர் என்ன உறவு, என்ன வரம் வேண்டி கோபாலனை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள், என்பதையெல்லாம் ஒன்றிரண்டு தூண்டுதல் கேள்வி கேட்டு, பல விபரங்களை நொடியில் தெரிந்து கொண்டு விடுவார். வந்தவர் தேவைக்கு தகுந்தபடி, சேவை நடத்தி வைப்பதில் கெட்டிக்காரர்.

அப்படித்தான், எனது நெருங்கிய உறவினர், தம்பதிகளாய் ஒருமுறை சென்னையிலிருந்து கோபாலனை சேவிக்க வந்தபோது, ஒரு சில நிமிடங்களில், அவர்கள் தங்களின் இரண்டாவது பெண் கல்யாணம் நல்லபடியாக நிச்சயம் ஆக வேண்டும் என்ற அபிலாஷையுடன் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, ஸ்ரீகோபாலன் சேவை முடிந்ததும், 'திருவண்ணாழி பிரகாரத்தை வலமாக வாருங்கள்' என்று கூறினார். நாங்கள் வலம் வரும் முன்பு வடக்கு பக்கம் பிரசன்னமானார் பட்டர். அங்கு வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, குங்குமம் பிரசாதம் கொடுத்து, 'வெகு சீக்கிரத்தில் நல்ல வரன் அமையும். கல்யாணத்திற்கு பிறகு துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, உங்கள் செளகரியப்படி மஞ்சள் அரக்கு கலர் வஸ்திரம் சாத்துங்களேன்', என்று சொன்னார்.

ஊர் போய்ச் சேர்ந்த உறவினரின் தகவல் கடிதத்தை எதிர் பார்த்த எனக்கு மணியார்டர் வந்திருப்பதாக தபால்காரர் சொன்னதும் ஆச்சர்யம். சென்னைக்கு திரும்பியவுடனேயே அவர் பெண் கல்யாணம் நிச்சயமானதால் பதில் உடனே எழுத முடியவில்லை என்றும், ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு அபிஷேகம் செய்வதற்காக ரூபாய் அனுப்பியிருப்பதாய் எழுதியிருந்தார்.

இப்படிப் பல அனுபவங்களைப் பெற்ற எனக்கு, மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் மாலை நாலு மணியளவில், நானும் எனது தாயார், மனைவி, மக்களுடனும், வெளியூரிலிருந்து வந்திருந்த எனது சித்தி, சித்தப்பாவுடன் கோபாலனை தரிசிக்கப் புறப்பட்டு கோயில் வாயிலை அடைந்தோம்.

கோயிலின் முன்னால் வீட்டு மற்றும் விவசாய உபயோகத்திற்கு என இரும்பு சாமான்கள் செய்யும், ராமலக்ஷ்மணர் கடை என எல்லோராலும் அழைக்கப்படும் கடை உள்ளது. நான் மட்டும் தனியாகப் போனால் செருப்போடு உள்ளே போகாமல், அந்த நண்பர்கள் கடை வாசலில் ஓரமாக என் செருப்புகளை விட்டுச் செல்வது வழக்கம். சகோதரர்கள் இருவரும் அருமையான நண்பர்கள். பல ஜோடி செருப்புகளை கடைவாயிலில் விட்டுச் செல்வது அவ்வளவு மரியாதை இல்லை என நினைத்து, செருப்போடு கோயில் வாசலை கடந்து இரண்டாம் கோபுர வாயிலை அடைந்தோம். நல்ல சகுனம்; பெரியவர் அப்போது தான் வந்தார் போலும். அவர் ஆசனமான மடித்த சாக்கை பரப்பிவிட்டு பக்கத்தில் டோக்கன் பெட்டியை வைத்துவிட்டு கோபாலனின் சந்நிதியை நோக்கி ஒரு முறை கைகூப்பி வணங்கிவிட்டு வந்து உட்கார்ந்தார்.

எங்கள் எல்லொருடைய செருப்புகளையும் அவர் வழக்கப்படி வரிசையாக வாங்கி வைத்துவிட்டு ஜோடி டோக்கன்களில் ஒன்றை செருப்புகளின் மேல் வைத்துவிட்டு, மற்றொரு டோக்கனைக் கொடுத்தார். அவர் நடந்து கொள்ளும் முறையை புதிதாக ஒருவர் பார்த்தால், ஏதோ செருப்புகளுக்கு செய்ய வேண்டிய உபசாரங்களை செய்துவிட்டு பிறகு பிரசாதமாய் டோக்கனை தருவது போல தோன்றும். அவ்வளவு மரியாதையாக இரு கைகளாலும் அந்த டோக்கனை அவர் தரும் போது அப்படித்தான் தோன்றும்.

இவ்வளவு நிதானமாய் அவர் செய்யும் காரியத்தின் விளைவு, சில நேரம் சில மனிதர்களுடைய பொறுமையின்மையுடன் கூடிய வாதங்கள், அதன் முடிவு பெரியவரின் கோபம். சிறுவர்கள் 'சிடுசிடுப்பு தாத்தா' எனப் பெயர் சூட்டி, பின்பு அதுவே மருவி 'சிரிசிரிப்பு தாத்தா' என்றாகி அதுவே நவீனமாய் 'புன்னகை மன்னன்' என்ற பட்டப் பெயராகி விட்டது. பெரியவருக்கு இது தெரியுமோ தெரியாதோ. அவர் ஒரு கர்ம யோகி. அவர் வழிதான் நடப்பார்.

டோக்கனை பெரியவரிடமிருந்து பெற்றுக் கொண்டு முதலில் தாயார் சந்நிதியை அடந்தோம். வேறு யாரும் வ்ராததால் ஏகாந்த சேவை. அது முடிந்து கோபாலன் சந்நிதிக்கு வந்தவுடன் உள்ளே பார்த்தால் ஏக கூட்டம். சற்று காத்திருந்து, சந்நிதியை அடைந்தோம். அன்று விசேஷமாய் பச்சை பட்டாடை உடுத்தி, பாரிஜாத புஷ்பங்களால் ஆன மாலைகளை நிறைய அணிந்து கோபாலன் குதூகலமாய் இருந்தான். அவன் புன்னகையைப் பார்த்ததும் ஏனோ தெரியவில்லை, வாயிலின் செருப்பை பாதுகாக்கும் பெரியவர் நினைவு வந்தது. அவரின் பட்டப் பெயர் 'புன்னகை மன்னன்' என்ற காரணமோ என்னவோ! கோபாலனை சேவிக்க எந்த கெடுபிடியும் இல்லாமல் வந்து போகும் நம்மையெல்லாம், செருப்பை போடும் போதோ அல்லது எடுத்துக் கொள்ளும் போதோ, ஏக கெடுபிடி செய்யும் அந்த பெரியவரை மறுபடி நினைக்க தோன்றியது.

இவ்வளவு தூரம் கடந்து வந்து, கோபாலனை அவர் சேவித்திருப்பாரா, அல்லது கோபாலன் பல வாயில்களை கடந்து, அந்த இரண்டாம் வாயிலை அடையும் போதாவது தன் செருப்பு குவியல்களிலிருந்து, விழி உயர்த்தி கோபாலனை பார்த்திருப்பாரா என்ற எண்ணமும் தோன்றியது.

மனம் இவ்வாறு ஒரு நிலைப்படாது, ஒரு நொடி வாயிலில் உள்ள செருப்புக் குவியல்களைப் பற்றியும், அந்தப் பெரியவரைப் பற்றியும் மறுகணம் கோபாலனையும், அவன் பின்னிருந்து முன்நோக்கும் பசுவையும் பற்றி நினைத்தது. இந்த கோபாலன் தன் பசுவையும் கன்றையும் கர்பகிரகம் வரை அழைத்து வந்ததோடு அல்லாது பசுவின் மீது ஒய்யாரமாய் சாய்ந்து நின்று புன்னகை புரிகிறானோ என்றும் தோன்றியது. இதற்கு நடுவில் பட்டர் மூலவருக்கு மாலை சாற்றுவதற்காக, செளகரியத்தை உத்தேசித்து, கோபாலனின் பின்னால் நின்ற வெள்ளிப் பசுவை சற்று பின்னிருந்து முன்னோக்கி நகர்த்தி, பசு கோபாலனை இன்னம் அருகில் வந்து பார்ப்பது போல நிறுத்தினார். என் கவனம் பசுவின் மேல் சென்றது.

பசு தன் முன்னங்கால் இரண்டையும் தூக்குவது போல் பிரமை. அவை கைகளாய் மாறி கோபாலனை தொழுதது. பசுவின் முகத்தைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு இரண்டாம் வாயிலில் உள்ள புன்னகை மன்னன் முக மலர்ச்சியுடன் தொழுத கையுடன் கோபாலனின் கடைக்கண் பார்வையில் நிற்பது போல தோற்றம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் அந்த கிழவரைப் பற்றி நினைத்ததன் விளைவா இந்த பிரமை அல்லது கோபாலனின் திருவிளையாடல்களில் ஒன்றா இந்த காட்சி. 'என் பரம பக்தன் என்றாவது கருவறை வந்து சேவித்திருப்பாரா என்றா எண்ணினாய்? இதோ என்னுடன் இருப்பதைப் பார்' என எனக்குக் காட்டினானோ என்னவோ! ஏதும் தெரியவில்லை.

மனத்தை கட்டுப்படுத்தி கோபாலனை சேவிக்க முயன்று, ஒன்றும் புரியாத நிலையில் கோயிலில் இருந்து தரிசனம் முடிந்து வெளியே வந்தேன்.

இரண்டாம் கோபுர வாயிலை அடையும் போது மணி ஆறு. டோக்கனையும், இரண்டு ரூபாயும் கொடுத்து, மொத்தம் ஏழு ஜோடி என கணக்கு சொல்லி மீதி சில்லரையை வாங்கி, செருப்புகளையெல்லாம் பெரியவர் அவர் முறைப்படி தனித்தனி ஜோடியாக எடுத்துக் கொடுக்க, என் சித்தப்பா செருப்பு மட்டும் காணவில்லை. பின்னால் வந்த கூட்டத்தில் இடம் மாறி விட்டது போலும். பெரியவரின் அனுமதியுடனவர் எல்லைக்குள் நுழைந்து செருப்பை தேட ஆரம்பித்தேன். கையில் கோபாலனுக்கு அர்ச்சனை செய்த தட்டு – அதில் தேங்காய் பழத்துடன், கோபாலன் சூடிக்களைந்த பாரிஜாத மலர் மாலை ஒன்றும் உதிரிப் புஷ்பங்களும். ஒரு வழியாகத் தேடி, செருப்பை கண்டுபிடித்தேன். பெரியவரின் அனுமதியுடன் எடுப்பது தான் முறை என்ற எண்ணத்துடன் 'பெரியவரே, செருப்பு இதோ இருக்கிறது. எடுத்துக் கொள்ளட்டுமா' என ஆரம்பித்தேன்.

'நீங்க எடுக்காதீங்க சாமி, இதோ நான் வருகிறேன்' என்று பதில் வர, நான் சற்று தயங்கினேன். அதற்குள் இன்னம் சில சேவார்த்திகள் வர பெரியவர் கவனம் அங்கே சில நிமிடங்கள் சென்றது.

வெகு வினயமாய் பேசுவதாக நினைத்து 'ஐயா பெரியவரே! இவை எனது சித்தப்பா செருப்புதான். அவர் செருப்பை எடுத்துப் போடுவது தவறில்லை' என்றேன்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் பெரியவர். மிகக் கூர்மையான பார்வை.

"ஐயா சாமி! தப்புப் பண்ணிட்டீங்களே! செருப்பை நீங்க எடுத்துப் போடுவது கேவலம் என நினைத்து, நீங்க எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களே! கோபாலன் சந்நிதிக்கு வருபவர்களே புண்யாத்மாக்கள். இதில் யார் யார் மகாத்மாக்கள் என்று எனக்குத் தெரியாது. கோபாலனை சேவித்த மகாத்மாக்கள் பாதரக்ஷையைத் தொட்ட புண்ணியமாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்றல்லவா இங்கு உட்கார்ந்திருக்கிறேன். உங்களை மாதிரி ஓரிருவர் பாதரக்ஷையை எடுத்துப் போட்டால் வெட்டியாய் இருந்து விட்டேன் என்றல்லவா போய்விடும் ஐயா! கேவலம் என நினைத்து நீங்கள் எடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. என் புண்ணியத்தை நீங்க கொண்டு போயிடாதீங்க என்று தான் சொன்னேன்."

பெரியவரின் ஒவ்வொறு வார்த்தையும் என்னை என்னவோ செய்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கண்கள் இருள ஆரம்பித்தன. என் கண்களில் பெரியவரின் முகமும், பல ஜோடி செருப்புகளும் மட்டும் தான் தெரிந்தன. மயங்கி விழப் போகிறாய் என உள்மனம் எச்சரித்தது. எங்கிருந்தோ வந்தது சுகமான சுகந்தத்துடன் கூடிய தென்றல். கருவறையில் கோபாலனை சேவித்துவிட்டு, பல புஷ்பங்களின் சுகந்தம் மிக மிக அருகில் வருவது போல் உணர்ந்தேன்.

கண்கள் தெளிவாக தெரிகிறது. உடல் இலேசாகி மிதப்பது போல் உணர்வு. செருப்புகளைப் பார்க்கிறேன். அந்த பெரிய பெரிய செருப்புகளில் கருவறையில் பார்த்த அதே கோபாலன் பச்சை பட்டாடையுடன் பாரிஜாத மாலைகளுடன் நடனமாடுகிறான். ஒவ்வொரு செருப்பிலும் அவன் தன் பிஞ்சு கால்களை வைத்து தாண்டி குதித்து குதிநடனம் போடுவதைப் பார்க்கிறேன். 'இந்த செருப்பு அடுத்து என் பக்தன் எடுத்து போடப்போகும் செருப்பு', என்று சொல்லி குதிப்பது போல தெரிகிறது. அவன் ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் ஒன்றிரண்டு பாரிஜாத மலர்கள் அந்த செருப்புகளில் விழுகின்றன. அவற்றை மிதிக்காமல் அடுத்த செருப்பில் லாவகமாய் குதிக்கிறான், புன்னகை பூக்கிறான்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென மறைந்து விட்டான். திரும்பி பெரியவரைப் பார்க்கிறேன். தொழுத கைகளுடன் 'கோபாலா! கோபாலா!' என்று வாய்விட்டு அழைத்தவாறே ஒவ்வொரு பூவையும் செருப்புகளிலிருந்து எடுக்கிறார். அவர் கை நிறைய பூக்கள். ஏதும் புரியாத நிலை.

'சாமி உங்க புண்ணியத்தில் கோபாலன் பிரசாதம் கிடைத்தது. போய் வாருங்கள் ஐயா!' - பெரியவரின் குரல் என்னை நிதானப் படுத்தியது. அதற்குள் என் மனைவி கையில் இருந்த அர்ச்சனைத் தட்டை வந்து பெற்றுக் கொள்ள, அந்த பாதுகா சிரோன்மணியை, கைகூப்பி தொழுதேனோ என்னவோ தெரியாது, கையில் ஜோடி செருப்பை எடுத்துக் கோண்டு வெளியே வந்தேன்.

மனத்தின் எண்ண ஓட்டத்தின் வேகம், நடை தானாகவே தடைப்பட்டது.

'என்ன?' மனைவியின் குரல்.

திரும்பிப் பார்க்கிறேன்.

'என்ன யோசனை என்று கேட்கிறேன்' மனைவி விழைகிறாள்.

'ஒன்றுமில்லை'.

'என்ன ஒன்றுமில்லை? எதோ தீவிர யோசனை. சித்தப்பா இரண்டு தடவை ஞாபகப் படுத்திய பிறகு தான், அவர் செருப்பை கீழே போட்டிருக்கிறீர்கள். முதலில் கையில் செருப்புடன் யோசனை. இப்போது என்னடாவென்றால் இங்கு மண்டபத்திலேயே நின்று விட்டீர்கள். அதோ பாருங்கள், எல்லோரும் முன்னால் கோபுரவாயில் வரை போயாகி விட்டது. உங்களை காணவில்லையே எனத் திரும்பி வந்தால் இங்கேயே நின்று விட்டீர்கள்.'

'ம்...' என்னுடைய பதில்.

'என்ன 'ம்...'. கோவிலுக்கு வந்தால் பெருமாளை சேவிக்க வேண்டும். சேவிப்பது முன்னே பின்னே இருந்தாலும் அபசாரப்படக்கூடாது.'

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நான் பெரியவரிடம் அபசாரப்பட்டது தெரிந்து சொல்கிறாளா?

'என்ன சொல்கிறாய்?'

'ஆமாம். அர்ச்சனை தட்டுடன் செருப்பைத் தேடப் போனதே சரியில்லை. தட்டை என்னிடம் கொடுத்துவிட்டு தேடியிருக்கலாம். அங்கு காற்றில் ஒவ்வொரு பூவாக பறந்து செருப்பில் விழுவதைப் பார்க்கவில்லை. அப்போதும் ஏதோ யோசனை.

பெருமாள் சூடிய புஷ்பம் செருப்புகள் மேல் விழுவது அபசாரமாய் படவில்லை உங்களுக்கு. நல்ல வேளை, அந்தப் பெரியவர் பக்திமான். ஒரு பூவையும் விடாது எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு தன் பெட்டியில் போட்டுக் கொண்டார். இல்லாவிட்டால் வருவார் கால்பட்டு அந்த அபசாரம் வேறு வேண்டுமா நமக்கு.'

மனைவி யதார்த்தவாதி. நான் கனவுலக சஞ்சாரி என நினைக்கிறாள். நல்லவேளை நான் பெரியவரிடம் அபசாரப்பட்டது இவளுக்குத் தெரியாது.

நான் செய்தது அபசாரமில்லை. கோபாலன் பெரியவருக்கு செய்த உபசாரத்திற்கு, பூத்தட்டுடன் நின்றேன். அவ்வளவுதான். ஒருக்கால் நான் அபசாரமும் செய்யவில்லை - உபசாரமும் செய்யவில்லையோ என்னமோ. யாருக்குத் தெரியும். எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு புதுவிதமான பாதுகா தரிசனம்!

எல்லாம் கண்ணனுக்கே! எல்லாம் கண்ணனே!

8 Comments:

Blogger துளசி கோபால் said...

அன்புள்ள ரங்கா,

உங்க 'பாதுகா தரிசனம்' பதிவை இன்னைக்குத்தான் பார்த்தேன். அதுவும் ஒரு நண்பர் சுட்டி கொடுத்திருந்தார்.

படிச்சு முடிச்சவுடனே மனசே லேசாகி விட்டது. அந்தக் கோபாலனைக்காணவும், அப்படியே அந்தப் பெரியவரை அதான் 'புன்னகை மன்னன்'காணவும் கட்டாயம் மன்னார்குடிக்குப் போகணும்.

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
என்றும் அன்புடன்,
துளசி.

10:43 PM  
Blogger ரங்கா - Ranga said...

நன்றி துளசி கோபால்! இந்தக் கதையை எழுதியது என் தந்தையார்; தங்கள் பாராட்டுகளைத் அவரிடம் தெரிவிக்கிறேன். இன்னும் பத்து நாட்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருகிறார் - மேலும் சில கதைகளை அவர் இங்கு வந்தபின் பதிய எண்ணம்.

பின்குறிப்பு: புன்னகை மன்னன் இப்போது இல்லை ;-( செருப்புகள் வெளி கோபுர வாசலுக்கு வெளியே தான் விடப்படுகிறது.

2:10 PM  
Blogger rv said...

ரங்கா அவர்களே,
இந்த காலத்திலும் அடியார் சேவை ஆண்டவன் சேவை என்று நினைத்து தொண்டு புரியும் மனிதர்களா? ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நான் தஞ்சாவூர்க்காரன்.. மன்னார்குடியில் தற்போது உள்ள இராஜகோபாலன், முன்னொரு காலத்தில் தஞ்சையில் வடக்குவீதியில் உள்ள இராஜகோபால சுவாமி (தற்போது சிவேந்திரர் கோயில் எனவும் சக்கரத்தாழ்வார் கோயில் எனவும் அழைக்கப்படும்) திருக்கோயிலிருந்து மன்னார்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று சொல்லக்கேட்டேன். தங்கள் தந்தையார் போன்ற பெரியோர் விளக்கக் கேட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி

2:36 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

ரங்கா
நான் அடிக்கடி அந்த கோவிலுகு போயிருக்கிறேன். ஹரித்ராநதியை நினைவு படுத்தியமைக்கு நன்றி

3:40 PM  
Blogger ரங்கா - Ranga said...

ராமனாதன், பத்மா,
பின்னூட்டத்திற்கு நன்றி.

ராமனாதன் - என் தந்தையார் இன்னும் சில நாட்களில் இங்கு (நியு ஜெர்ஸி) வருகிறார். அவரிடம் கேட்டு உங்கள் கேள்விக்கு பதில் பதிகிறேன்.

ரங்கா

9:41 AM  
Blogger ரங்கா - Ranga said...

ராமநாதன்,
என் தந்தையாரிடம் தங்கள் கேள்வியைக் கேட்டேன். தாங்கள் எழுதியது போல் மன்னார்குடியில் உள்ள இராஜகோபால ஸ்வாமி தஞ்ஞாவூரில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலிருந்து தான் வந்ததாகச் சொன்னார்.

ரங்கா.

9:21 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

ரங்கா:உங்கள் தந்தையிடம் KRMestate இல் மானேஜராக இருந்த கிருஷ்ணமாச்சாரியாரை தெரியுமா என்று கேளுங்கள்.

11:20 AM  
Blogger ரங்கா - Ranga said...

பத்மா - என் தந்தையாருக்கு எஸ்டேட், முக்கியமாக அங்கு நடந்து வந்த வேத பாட சாலை நினைவிருக்கிறது; ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திரு. கிருஷ்ணமாச்சாரியாரை நினைவில்லை.

1:05 PM  

கருத்துரையிடுக

<< Home