சனி, செப்டம்பர் 24, 2005

சிந்தனைச் சிறகு

என் தந்தையார் கதைகள் மட்டுமல்லாது கவிதைகளும் எழுதியுள்ளார். இந்தக் கவிதை பத்து வருடங்களுக்கு முன் வங்கியில் பணியாற்றும் போது எழுதியது - மாதத்தில் ஒரு சனிக்கிழமை நடக்கும் 'கவிதை மாலை' என்னும் நிகழ்ச்சிக்காக. சிந்தனை எவ்வளவு முக்கியமானது - அதுவும் ஒரு ஒழுங்கோடு கூடிய, நல்ல சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது.

சிந்தனைச் சிறகு

காக்கை சிறகினிலே
கண்ணன் கார்வண்ணம்
கண்டான் மாகவி தன்
சிந்தனை சிறகாலே.

நம்புங்கள்
நிந்தனை இல்லாத சிந்தனை
நிம்மதி தரும்
வஞ்சனை இல்லாத சிந்தனை
வாழ்வில் வளம் தரும்
தூய சிந்தனை
துயர் தீர்க்கும்.

சிறகடிக்கும் வானத்து
பறவைகளைப் பாருங்கள்
பார்த்தால் அவை காற்றில்
மிதக்கவும் இல்லை
மூழ்கவும் இல்லை.

ஆ! அதுவே ப்ரம்மத்தின் பிரதிபிம்பம்!!
உள்ளும் அதுவே! வெளியும் அதுவே!!
சிந்தனை சிறகை விரித்திடுவீர்
உண்மை உலகை உணர்ந்திடுவீர்.