புதன், செப்டம்பர் 02, 2015

மாங்கொட்டையும் மகான்களும்


மாங்கொட்டையும் மகான்களும்

காஞ்சி முனிவர், பெரியவர், மகா பெரியவர் என்றெல்லாம் நாம் அன்புடன் வணங்கும், காஞ்சி சங்கராச்சாரியார் பலரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி வேதாந்தக் கருத்துக்களை சிறு சிறு கதைகள் மூலமாகவோ, அல்லது நாம் தினமும் காணும் காட்சிகளை அவர் வார்த்தைகளில் அன்றுதான் நாம் புதிதாகப் பார்ப்பது போல புதிய கோணத்தில் விளக்கிப் புரிய வைப்பார். 'கல்கி' இதழில் அவர் அருள் வாக்கு சிந்தையில் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய தேன் அமுதுகள். நான் சமீபத்தில் 'Everyday Inspirations' என்ற 2012 ம் வருட தினசரி நாட்குறிப்பு (டைரி) புத்தகத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். ஒரு பக்கம் பெரியவாளின் படம், பல்வேறு சமயங்களில் எடுத்தது, அதன் கீழே ஆங்கிலத்தில் இரண்டு அல்லது முன்று வாக்கியங்களில் அவர் அவ்வப்போது சொன்ன விஷயங்கள். எதிர்புறம் நாட்குறிப்புக்கு என முழுப் பக்கம் என 800 பக்க அளவினாலான கனமான புத்தகத்தைப் பார்த்தேன், படித்தேன். அதில் July 17, 18, 19 நாட்குறிப்புக்கு எதிர்புறம் பெரியவாள் சொன்னவற்றை படித்ததின் பிரதிபலிப்புதான் இந்த எழுத்துகள், எண்ணங்கள்.

அவர் மாங்கொட்டையைச் சொல்லி மகான்களை உணர வைத்திருக்கிறார். இரண்டுக்கும் நடுவில் நமது இந்தப் பிறவியையும் உணரச் சொல்லியிருக்கிறார். என்ன இது! மாங்கொட்டைக்கும் மகான்களுக்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா! என்ற பழமொழி நினைப்புக்கு வரலாம். முதலில் நான் உணர்ந்தபடி கூறுகிறேன். பின் பெரியவரின் வார்த்தைகள். பிறகு உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்.

முக்கனிகள் என்ன என்று தெரியும்; வாழை - மா - பலா. அதில் மாம்பழத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார், முன்றில் நடுவாக இருப்பதினாலோ என்னவோ. வேறு விதமாகவும் யோசிக்கலாம், மாங்கொட்டையை விதை என்று எடுத்தாள்வதினால் . வாழைக்கு விதை கிடையாது. வாழையடி வாழையென தாய் மரத்தின் அருகிலேயே கன்றுகள் வளர்ந்து பலன் தரும். பலாவை எடுத்துக் கொள்வோம். ஒரு மரத்தில் பல பழங்கள்; ஒரு பழத்தில் பல விதைகள். மொத்தத்தில் ஒரு மரத்தில் ஏகப்பட்ட விதைகள். மாம்பழம் என்று வரும் போது எவ்வளவு பெரிய பழமானாலும் நடுநாயகமாக உள்ளே ஒரு விதைதான். மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு பாதை ஓரம் கோட்டையை வீசி எறிந்துவிட்டு செல்வது பலரின் வழக்கம். யாரோ எறிந்த கொட்டை செடியாகி, மரமாகி, பின்னொரு நாள் அதே பாதையில் வரும் மனிதர்களுக்குப் பழம் தரும். அதே போல் கை தேர்ந்த தோட்டக்காரர்கள் மாங் கன்றுகளை வளர்த்து, வெட்டி, ஒட்டி, புது விதமான ஒட்டு மாம்பழம் என்று உண்டாக்குகிறார்கள். மனிதர்களுக்கு வருவோம். ஆண், பெண் என ஜோடி சேர்ந்து தம்பதிகளாகி, தாம்பத்திய வாழ்க்கை தொடங்கி மகன், மகளைப் பெறுகிறார்கள். வம்சம் விருத்தியாக வேண்டும் என்ற ஆவல் அந்த தம்பதிகளின் தாய் தந்தையற்குக்கு இன்னமும் அதிகம். அதே சமயம் அபூர்வமாக லக்ஷத்தில் ஒருவர், கோடியில் ஒருவர் என, ஒரு ஆணோ, பெண்ணோ தனித்திருந்து, தவமிருந்து, ஆன்ம விசாரம் செய்து, பலராலும் வணங்கப்பட்டு, வழிகாட்டியாய், மகான்களாய்ப் போற்றப்படுகிறார்கள். ஆக மாங்கொட்டைக்கும் மகான்களுக்கும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இருப்பதாகத் தோன்றுகிறது அல்லவா? மேலே தொடர்வதற்கு முன் காஞ்சி முனிவர் வார்த்தைகளுக்கு வருவோம்.

ஜூலை 17, 2012: "ஒரு மாமரம் ஏராளமான பழங்கள் தருகிறது. பழத்தின் நோக்கம் அதனுடைய விதையிலிருந்து ஒரு மரம் வளர வேண்டும் என்பது தான். ஆனால் மாம்பழங்கள் எல்லாவற்றின் கொட்டைகளும் முளைத்து மரங்களானால் வேறு எந்த மரத்திற்கும் உலகில் இடம் கிடைக்காது. அதே சமயத்தில் பல நூறு பழங்களிலிருந்து ஏதோ ஒரு மாங்கொட்டை மரமானால் அதுவே நமக்கு திருப்தி தருவதில்லையா?"

அடுத்து மனிதர்களைப் பற்றி அவர் சொன்னது, ஜூலை 19, 2012: "நம்மில் பல லக்ஷம் அல்லது கோடி நபர்கள் சுயமாக ஆன்ம ஞானம் அடையாமல் வாழ்க்கையை நடத்தினாலும் பரவாயில்லை. கொடானுகொடியில் யாரோ ஒருவர் முழுமையை, பூரணத்துவத்தை அடைந்தால் அது போதும். படைப்பின் பலன் அது தான். அந்த ஒரு பூரணாத்மா நம் எல்லோருக்கும் எல்லா சுகத்தையும் கொடுப்பார்."

மாம்பழம் முழுவதுமாக உபயோகமாகிறது. அதன் கதுப்புப் பகுதிகள் மனிதர்கள், பறவைகள், அணில் போன்ற சிறு பிராணிகள் முதலாய், ஆடு மாடு வரை, எல்லோருக்கும் உணவாகிறது. கொட்டையும் அதே போல உணவாகிறது. ஏதோ ஒரு மாங்கொட்டை மட்டும் சிறு செடியாக வளர்ந்து, பெரிய மரமாக உயர்கிறது. அதே போல் மனிதர்களும், அவரவர் செய்யும் தொழிலினாலோ, அல்லது மற்றவர்களுக்கு செய்யும் சேவையினாலோ, பிறவியின் பலனைப் பெறுகிறார்கள். அதே போல் மகான்களும் தனக்கு என குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும் உலக சமூகத்தையே தன் குடும்பமாகக் கொண்டு வழி காட்டுகிறார்கள். மாங்கொட்டை தன்னை மறைத்து மரமாவது போல.

அடுத்து, மனிதர்களான நம்முடைய வினை, விதை என்பது பற்றி அவர் கூறுவது: ஜூலை 18, 2012: "ஜகன் மாதா, அம்பாளின் கட்டளை, சங்கல்பம்: ஒரு மரத்தின் விதையை விதைக்க, அந்த மரம் தான் விளையும். ஆனால் மனிதர்கள் முன் ஜன்ம வினைகளே விதையாக ஆகி, இந்தப் பிறவியில் பலன் அனுபவிக்கிறோம்." இந்த மூன்று விஷயங்களை நன்கு அசை போட, மனத் தெளிவு உண்டாகும். இப்பிறவியின் நல்ல செயல்கள், நல்ல பிறவியைத் தரும். கரும வினை, செய்யும் செயல்கள் - இவைதான் விதை. நல்ல விதை விதைக்க வேண்டும்; நல்ல மனிதர்களாக வளர வேண்டும். ஈஸ்வர கிருபை வேண்டும்; மகான்கள் கடாட்சம் வேண்டும் .

திருமலை

திருமலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

அரசர்கள் ஆண்ட காலம். திருமலைக்கு வடஇந்தியாவிலிருந்து பைராகி ஒருவர் வந்தார். சுவாமி தரிசனம் செய்ய கோயில் வாசலை அடைந்தபோது, காவலர்கள் தடுத்தார்கள். காரணம்? உடல் முழுவதும் ஒரே புழுதி. இடுப்பில் கட்டிய வேட்டியோ அழுக்கு மயம். போய் கோயில் திருக்குளத்தில் குளித்து முழுகி வந்தால் கோயில் உள்ளே அனுமதிக்கிறோம் என்ற பதில்.

‘சரி’ என சொல்லி ஸ்நானம் செய்து வந்தவரைப் பார்த்தால், இன்னும் மோசம். உடல் சுத்தம், உடையும் பரவாயில்லை. ஆனால், தலையிலிருந்து கால் வரை தொங்கும் சடையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. ஒருவித நாற்றம். மறுபடியும் காவலர்கள் கூறினார்கள். தயவு செய்து, தலை, முகம் முழுவதுமாக மழித்துவிட்டு வாருங்கள். இந்த கோலத்தில் கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது.

பைராகி மறுத்தார். என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் யாரையும் தொடுவதில்லை. என்னை மற்றவர் யாரும் தொடுவதையும் அனுமதிப்பதும் இல்லை. என்னால் முடி துறக்க முடியாது. காவலர்கள் கூறினார்கள், அப்படியானால் எங்களாலும் உங்களை கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது.

மேலும் பேச்சு எதற்கு, என்ற நினைவுடன் பைராகி திரும்ப நடந்தார். மலை மீது ஏறி, தனியான ஒரு இடத்தில் அமர்ந்து கண்மூடி பகவானை பிரார்த்தித்தார். ‘நான் இதுவரை பல தலங்களுக்கும் கால்நடையாக சென்று இமயமலை முதல் ஆரம்பித்து, பல பிரதேசங்களில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறேன். திருமலைவாசா! எனக்கு ஏன் இந்த சோதனை? உன் தரிசனம் கிடைக்குமா?' ஒரு நாள் போயிற்று. மறுநாள் என காலம் கடந்தது. அசையாது அமர்ந்திருந்தார்.

வேங்கடவன் பொறுப்பானா? மனித உருவுடன் பக்தன் முன் நின்று, ‘அன்பனே! கண் திறந்து பார்’ என கூற, பைராகி பார்த்தார். தன் முன் ஒரு மனிதன் நிற்பதை. நல்ல களையான முகம். பளபளவென கருமையான சுருள் கேசம். தூய உடைகள். மெத்த படித்த மேதை, பண்டிதன் போல் தோற்றம்.

"ஐயா! வணக்கம். நான் திருமலையப்பனை நினைத்து கண்மூடி தியானம் செய்து கொண்டிருக்கிறேன். மனித வாடை இல்லாத இடமாக, நான் தனித்து இருந்து தியானம் செய்கிறேன். இந்த இடம் எனக்கு நிம்மதி தருகிறது. தொந்தரவு செய்யாதீர்கள். தங்கள் கேசம் மிக அழகாக இருக்கிறது. உடையோ பளிச்சென மின்னுகிறது. உங்கள் முக வசீகரம் என்னை மயக்குகிறது. பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை கோயில் காவலர்கள் தடையில்லாமல் உள்ளே அனுமதிப்பார்கள். நிம்மதியாக இரவு ஓய்வெடுத்து விட்டு, காலையில் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வாருங்கள். என்னை தொந்திரவு செய்யாதீர்கள்."

 மறுபடியும்  கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார். பகவானும் மகிழ்ந்து, ‘அன்பனே!’ என மறுமுறை கூப்பிட, பைராகி "என்ன வேண்டும்? ஐயா!" என சலிப்படைந்தார். "காலையில் கோயிலுக்கு சென்று வாருங்கள், என சொன்னேனே. உங்களை தடையேதும் சொல்லாமல் அனுமதிப்பார்கள். போய் வாருங்கள்", படபடத்தார் பைராகி.

வந்தவரோ, ‘கண்மூடி என்னை கூப்பிடுகிறாய். கண் முன் வந்தால் ‘போ’ என விரட்டுகிறாயே. கண் மூடி என்னை கூப்பிடாமல் இருந்தால் நான் போய்விடுகிறேன்’, என சொல்லிவிட்டு தெய்வமே, என நின்றார்.

பைராகி மூளை மட்டும் வேலை செய்தது. நான் கண் மூடி பகவானை கூப்பிடுகிறேன். என் முன் நிற்பது ஒரு மனிதர். மேலும் தொடர்ந்தார். "என் சடையையும் உடையையும் பார்த்து கோயில் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். உங்களுடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து, தடையேதும் சொல்லாமல் கோயில் உள்ளே அனுமதிப்பார்கள், என நினைத்து தான், காலையில் கோயிலுக்கு சென்று வாருங்கள் என கூறினேன். உங்களை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பகவானை தியானிக்க வேண்டும். என்னை மன்னியுங்கள்".

 ‘நான் தான் திருமலை தெய்வம், என நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்’.

"பகவான் என்றால் இன்னும் இரண்டு கைகள் இருக்க வேண்டும். சங்கு சக்கரம் வேண்டும், சுவர்ண கிரீடம் தரித்து, ஆபரணங்கள் மின்ன, பீதாம்பரதாரியாய் அல்லவோ காட்சி தர வேண்டும்". பைராகி படபடத்தார்.
'வா! வா! என மனதுள் துதித்து, வந்தவுடன் போ! போ! என வாயால் சொன்னால் எனக்கு உன் குறை என்னவென்று எப்படி தெரியும். பீதாம்பரதாரியாக காட்சி தர வேண்டும். இதோ இப்போதே பார்'. பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க உடன் சங்கு சக்கரதாரியாய், பீதாம்பரம் பளபளக்க காட்சியளிக்க பைராகி விழுந்து வணங்கி, தன் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டி நின்றார்.

‘அது போகட்டும். இப்போது என்ன வேண்டும். என்னால் முடிந்தால் செய்கிறேன்’. இது பகவானின் பேச்சு.

பைராகி இப்போது சிநேகபாவத்துடன் பேச ஆரம்பித்தார். "பகவானே! உன்னால் முடியாதது உண்டா? ஏன் இப்படி நாடகம் ஆடுகிறாய்?"

 ‘அன்பனே! உன்னிடம் உண்மையாகத்தான் பேசுகிறேன். உனக்கு பொய்யாமொழி புலவன், வள்ளுவன் குறள் ஒன்று சொல்லுகிறேன். கேள். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’. பக்தனின் முயற்சிக்கு உழைப்புக்கு பலன் உண்டு. சிலசமயம் சிலவற்றை என்னாலும் முடியாது என விட்டுவிடுவேன். அது பற்றி விவாதம் வேண்டாம், இப்போது ஏதாவது கேள். மறுபடியும் சொல்கிறேன். என்னால் முடிந்தால் செய்கிறேன்’.

 பைராகிக்கு புதிர் புரியவில்லை.

 ‘பகவானே! உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு ஏதும் தேவையில்லை. இந்த பிறவியின் பலன் கிடைத்துவிட்டது. மறுபடியும் கேட்பதனால் ஒன்று கேட்கிறேன். இப்போது என்னை கோயிலுக்குள் அழைத்துச் செல். அங்கே உன் அர்ச்சாவதார அழகை காணவேண்டும். பக்தர்கள் புடைசூழ உன் அழகை காண வேண்டும். இது சுலபமானது ஒன்றுதானே!’

பகவான் சிரித்தார். 'இப்போதுதானே சொன்னேன். என்னால் முடிந்தால் என்று. இப்போது கேட்டது என்னால் முடியாத ஒன்றுதான். இந்த இரவு நேரத்தில், கோயில் நடை சாத்தியபிறகு பக்தர்கள் கூட்டத்திற்கு என்ன செய்வது? சரி, நாளை காலை என்றாலும் யோசித்துப் பார். நான், உன் முன் சாதாரண மனிதனாய் தோன்றியபோது உடன் நீ நம்பவில்லை. சங்கு சக்கரதாரியாய் காட்சி அளித்ததும் நம்பிக்கை வந்தது. நான் சாதாரண மனிதனாய் கோயில் காவலாளிகளிடம் சென்றால், நிச்சயம் என்னை நம்ப மாட்டார்கள். சங்கு சக்கரத்துடன் சென்றாலும், அப்போதுகூட நாடக வேடத்துடன் வந்திருக்கும் நாடக மனிதன் என என்னை ஏசி விரட்டுவார்கள். ஏச்சும் பேச்சும் எனக்கு தேவையா? நான் இப்போது உனக்கு ஒரு வழி சொல்லுகிறேன். அது சம்மதமானால் அதன்படி நடக்கலாம்.'

"பகவானே! சரி என சொல்வதைத் தவிர எனக்கு ஏதும் தோன்றவில்லை."

'சரி, இனி தினமும் இரவு பூஜை முடிந்தபிறகு, நடை சாத்திய பிறகு, இங்கு மலையில் நீ எங்கிருந்தாலும் அங்கு வந்துவிடுகிறேன். இரவு முழுவதும் உன்னுடன் இருக்க சம்மதிக்கிறேன். விடியற்காலை, நடை திறப்பதற்கு முன் நான் திரும்பிவிட வேண்டும். உன் சம்மதம் என்ன?'

"பூரண சம்மதம். இந்த மலையை விட்டு நான் ஏன் இறங்க வேணும்."

 மறுநாள் இரவு வந்தது. பகவானும் சங்கு சக்கரத்துடன், சுவர்ண கிரீடத்துடன் வந்தார். வரும்போதே ஒரு நாடகத்தை நடத்தும் முடிவுடன் வந்தார்.

'அன்பனே! நேற்று இரவு முழுவதும் என் முன்னால் அமர்ந்து, என்னைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் இருந்தாய்! இன்றும் அப்படி என்றால் எனக்கு சலிப்பாகவும், சுறுசுறுப்பு என்பதே இல்லாமல் போகும். நான் வரும்போதே இரவு காவலாளிகள், தூங்காமல் இருக்க, விழித்திருந்து விளையாட வைத்திருந்த சதுரங்க காய்களை எடுத்து வந்திருக்கிறேன். நாம் இருவரும் இந்த பெரிய பாறையில் அமர்ந்து விளையாடலாம்’ என கூறி பகவான் நாடகத்தை ஆரம்பித்தார்.

பைராகியும் மகிழ்ச்சியுடன், "நான் இதுவரை காய் விளையாடியது இல்லை. ஆனாலும் பல கோயில் மண்டபங்களிலும், நதிக்கரை தங்குமிடங்களிலும் காய் விளையாடுவதைப் பார்த்து மனத்தளவில் பழகியிருக்கிறேன். பகவானே! வாருங்கள் விளையாடலாம். உங்கள் விருப்பமே என் பாக்கியம்."

சில நாழிகைகள் கடந்ததும், தான் நடத்த வந்த நாடகத்தின் அடுத்த பகுதியை ஆரம்பித்தார். ‘அன்பனே! உன் சடை உனக்கு பாரமில்லை. என்னைப் பார் சொர்ண கிரீடம் என்றாலும் அதற்கும் ஒரு எடை உண்டல்லவா? அதன் சுமை தலையை அழுத்துகிறது. ஆபரணங்கள் சுமையும் கூடுகிறது. இவைகளை களைந்து, பக்கத்தில் வைத்திருந்து, பிறகு காலையில் புறப்படும்போது, எடுத்துக் கொள்கிறேன்’, என கூறியவாறு மேல் அங்கவஸ்திரத்தை இரண்டாக மடித்துப் போட்டு, கிரீடம் முதல் எல்லா ஆபரணங்களையும் களைந்து வைக்க, பைராகியும் "இதை நானே சொல்லலாம் என நினைத்தேன். பகவானே! தாங்களே செய்துவிட்டீர்கள். தங்கள் விசாலமான முன்நெற்றியும், கருமையான கூந்தல் கற்றையும் கண்டு மகிழ வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. கேட்டால், நீ மட்டும் உன்னுடைய முடியை சடையை களையமாட்டேன் எனக்கூறி, கோயில் வாசலிலிருந்து வந்து, வேகமாய் மலையேறினாயே, நான் மட்டும் ஏன் சுவர்ண கிரீடத்தை துறக்க வேண்டும் என எதிர்க்கேள்வி கேட்டால் என்ன சொல்லுவது என பயந்தேன். இப்போது எனக்கு மிகவும் சந்தோஷம் தான்."
 தான் நடத்தும் நாடகத்தில் பக்தனும் தன்னை மறந்து ஈடுபடுவதில் பகவானும் திருப்தி கொண்டு பொழுது புலரும் நேரம் வந்ததும், ‘ஆகா! நேரம் ஆகிவிட்டதே. கோயில் நடைதிறப்பதற்கு முன் போகவேண்டும்’ என எழுந்து நின்றவுடன் மறைந்து போனார்.

பைராகியும் அரைநொடி பிரமிப்புக்கு பிறகு, நிலைமையை  உணர்ந்தார். கோயில் நடை திறந்ததும், பகவான் இடுப்பு வேட்டியுடன், எந்த ஆபரணமும், கிரீடமும் கூட இல்லாமல், ஏன் மேல் அங்கவஸ்திரம் கூட இல்லாமல் காட்சி தருவார். பெரிய குழப்பம் ஏற்படும், என உணர்ந்து, அவசரமாய் அந்த அங்கவஸ்திரத்திலேயே எல்லா ஆபரணங்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, கீழே இறங்கி கோயில் வாசலை அடைய விரைந்தார். அதுசமயம் கோயில் நடைதிறக்க, பெருமாள் கிரீடம், ஆபரணம் அனைத்தும் காணவில்லை. மேல் அங்கவஸ்திரம் கூட காணவில்லை. அதிலேயே அனைத்தையும் கட்டி எடுத்துப் போயிருக்க வேண்டும். ஒரே குழப்பம். அரச காவலாளிகள் பல திசையிலும் விரைந்தார்கள். முக்கியமான வீரர்கள் இருவர் குதிரையில் விரைந்து அரசரிடம் தெரிவிக்க பறந்தார்கள். பொதுமக்கள், பக்தர்கள் எவருக்கும் இந்த செய்தி தெரியாமல் இந்த தேடுதல் வேட்டையை தீவிரமாக்கினார்கள்.

கோயில் வாசலில்பெருமாள் வஸ்திர மூட்டையுடன் பைராகியை பார்த்ததும், காவலாளிகள் விரைந்து சூழ்ந்து கொண்டார்கள். கையும் களவுமாக பிடித்துவிட்டோம் என அவர்கள் சந்தோஷப்பட பைராகி பாடு திண்டாட்டமாகி விட்டது. பெருமாள் அவசரத்தில் விட்டுவிட்டு வந்த ஆபரணங்களை கொண்டு வந்து கொடுக்க வந்தேன், என எல்லா விபரங்களையும் பைராகி சொல்ல, காது கொடுத்து கேட்க ஆளில்லை.

பெருமாளாவது நேரில் வருவதாவது. ஏதோ மாய மந்திரம் செய்து திருடிவிட்டு, அகப்பட்டுக் கொண்டவுடன் கதை சொல்லுகிறார். பெருமாள் தன் ஆபரணங்களை பத்திரமாக இவரிடம் கொடுத்தது போலும், இவர் காலையில் திரும்பக் கொடுக்க வந்தது போலவும் பேசுகிறாரே! பல பல கூக்குரல்கள் காவலாளிகள் மத்தியில். பைராகியின் வார்த்தையை கேட்க ஆளில்லை. ஆபரணங்களை சரிபார்த்து, கோயில் உள்ளே சேர்த்த பிறகு, பைராகியை கோயில் முன் இருந்த பண்டார அறை ஒன்றை காலி செய்து சிறை வைத்தார்கள். இரவு வந்ததும், காவலாளிகள் இருவர் மட்டும் பைராகியின் வார்த்தைகளை கேட்டு, இவர் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். பல வருடங்கள் எல்லாவற்றையும் துறந்து, சடைமுடியுடன் திரியும் இவர் ஏன் திருடப்போகிறார்? இவரால் எப்படி பல காவல்களை மீறி, கோயில் உள்ளே செல்ல முடியும்? அந்த இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பைராகி மீது அனுதாபம் ஏற்பட்ட பின் இரவில் பைராகியுடன் பேச்சுக் கொடுத்து, ‘பெரியவரே! நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். ஆனால், பல காவலாளிகள் உங்கள் கையில் இருந்த ஆபரண மூட்டையை பார்த்து, கையும் களவுமாக பிடித்ததாக சொல்லி வருகிறார்கள். அரசர் நாளை வந்ததும், சந்தர்ப்ப சாட்சிகள் உங்களுக்கு பாதகமாக இருப்பதால், அரச தண்டனை, அநேகமாக மரண தண்டனையாகக் கூட இருக்கலாம். பெருமாள் நேரில் வந்து சாட்சி சொல்வாரா என தெரியாது. ஏதும் புரியவில்லை. நீங்கள் சொன்னது போல், இன்று இரவு நிச்சயம் உங்களை தேடி பெருமாள் வருவார். ‘பெருமாள் வந்ததும் இதோ இருக்கும் கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள். பார்ப்போம், உங்கள் பெருமாள் சாப்பிடுகிறாரா’ என்று. கோபமாக சத்தமிட்டு சென்றாரே தலைமை காவலர், அவர் அதட்டலுக்காக, பெருமாள் ஏதும் செய்யப் போவதில்லை. ஆனால், நீங்கள் கேட்டுக் கொண்டால் ஏதும் நடக்கலாம். நாங்கள் இருவர் மட்டும்தான் இரவு காவல். பெருமாள் வரும்போது கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள். நாங்கள் சாட்சி சொல்கிறோம். பெருமாள் எல்லோர் முன்பாக வருவார் என எதிர்பார்ப்பது சரியில்லை. புண்யபலன் இருந்தால் தரிசனம் கிடைக்கும். நீங்கள் ஆகாரம் ஏதும் வேண்டாம் என கூறிவிட்டீர்கள். நாங்கள் வாயிலில் காவல் தொடர்கிறோம்’. காவலர்கள் சென்றார்கள்.

இரவு வந்தது. பைராகி முன் பெருமாள் பிரசன்னமானார். பைராகி வணங்கி வரவேற்றார். நடந்ததை முழுவதுமாக விபரித்துவிட்டு, "பகவானே! நான் இவர்களிடம் ஏதும் வாதம் செய்யப்போவது இல்லை. மரணத்தைப் பற்றி கவலை இல்லை. உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு ஏதும் தேவையில்லை. ஒரு வருத்தம் மட்டும் உண்டு. பகவான் பிரசன்னமாவார் என்பதை யாரும் நம்பவில்லை. கோயில் விக்ரகத்தில் மட்டும் தான் உன்னை காண முடியும் என்றும், மற்றபடி உன்னை உணர முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். உன் தரிசனம் கிடைக்கப்பெற்ற எனக்கு ஏன் திருடன், பொய்யன் என பெயர் வருகிறது. மரண தண்டனை நிறைவேற்றினால் திருடன் என்ற பெயர் மட்டும் நிலைபெற்று விடும். என்ன தவறு செய்தேன் இந்த அவப்பெயர் வருவதற்கு?"

'அன்பனே! அனாவசியமாக கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே. இப்போது, நேற்று போல் முதலில் சொக்கட்டான் விளையாடுவோம்.'

பைராகிக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு ஈடுபாடும் இல்லாமல் காய்களை நகர்த்தினார்.  பெருமாள் நடுசாமத்தில் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார். 'உனக்கு நான் ஏதாவது செய்யவேண்டுமானால் சொல். என்னால் முடிந்தால் செய்கிறேன்.'

பைராகி விரக்தியாய் சிரித்தார். "பகவானே! உன்னை தரிசித்த பிறகு எனக்கு ஏதும் வேண்டாம் என முன்பு சொன்னேன். ஏதாவது கேள் என சொல்லி, நான் கோயில் உள்ளே வந்து உன் அர்ச்சாவதார உருவை காண வேண்டும் என்றேன். அவர்களிடம் போய் நான் ஏதும் கேட்கமுடியாது என ஏதோ காரணங்களை கூறி மறுத்து விட்டாய். பிறகு நடந்ததெல்லாம் தெரிந்த விஷயம்தானே. நான் எதை கேட்பது? அது உன்னால் முடியும், முடியாது என எனக்கு ஏதும் தெரியாது. உன்னை மறுமுறையும் சங்கடத்தில் ஆழ்த்த என் மனம் சம்மதிக்கவில்லை."

'கேட்பது உன் உரிமை. முடியும் முடியாது என்பதை தெரிவு செய்வது என் கடமை. உன் முயற்சியை ஏன் நிறுத்த வேண்டும். எது வேண்டுமோ அதை கேள்.'

காவலர்கள் சொன்னது ஞாபகம் வர, "இங்கு காவல் புரியும் இரண்டு காவலர்கள் மட்டும் உன்னையும், கூடவே என் வார்த்தைகளையும் நம்புகிறார்கள். இதோ அறைக்கு வெளியே இருக்கும் கட்டு கரும்புகளை பகவானை சாப்பிடச் சொல். நாங்கள் உனக்காக சாட்சி சொல்கிறோம், என்றார்கள். உனக்கு பக்குவமாக தோல் சீவி, சிறு துண்டுகளாக ஏதோ கொஞ்சம் கரும்பு கொடுத்தால், அது சரி. அதை விடுத்து கட்டு கரும்பை சாப்பிடு என சொல்ல எனக்கு நா எழவில்லை. எனக்கு தண்டனை எது கிடைத்தாலும் பரவாயில்லை. உன்னை சிரமப்படுத்த எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ‘கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’ எனச் சொன்ன உனக்கு எது சரியோ, அதுவே எனக்கும் சரி."

‘கட்டு கரும்பை சாப்பிட வேண்டும். இது சுலபமானதுதானே. மறுபடியும் சொல்கிறென். கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’.  பொழுது புலரும் நேரம். அறைக்கு வெளியே வந்த பகவான் பெரிய யானை உருவம் எடுத்தார். கரும்பு கட்டுகளை லாவகமாக துதிக்கையால் அவிழ்த்து, கரும்புகளை முறித்து சாப்பிட ஆரம்பித்தார். பைராகி மெய்மறந்து, கைகூப்பி நின்றார். சிறிது நேரத்தில் கரும்பு கட்டுகள் காலி. சந்தோஷத்தில் யானை வேகமாய் பிளிறியது. காவலர்கள் எழுந்து பார்த்தார்கள். பூட்டிய கம்பிக்கதவுகளுக்கு பின் யானை நிற்பதையும், கரும்பு கழிவுகள் சிதறியிருப்பதையும் பார்த்து, பகவான் தான் யானை உருவில் வந்து கரும்புகளை சாப்பிடுகிறார், என உணர்ந்து அப்படியே கீழே விழுந்து வணங்கினார்கள்.

அரசர் மலை ஏறி வரும் ஆரவாரம் தெரிந்தது, உடனே ஓடி, அரசரிடம், 'பிடித்து வைக்கப்பட்டவர் திருடர் இல்லை. பகவானின் பரம பக்தர். பகவான் அவர் வேண்டுகோளுக்கு இணங்க, யானை உருவம் எடுத்து கரும்பு கட்டுகளை சாப்பிடுகிறார். உடனே வாருங்கள்', என முழு விபரமும் தெரிவித்தனர்.

அரசரும் அவசரமாய் ஓடி வந்து பைராகி சிறை வைத்திருக்கும் இடம் வந்து பார்த்தார். அங்கு யானையைக் காணோம். ஆனால், கரும்பு கழிவுகளும், யானை லத்தியும் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன.  எல்லாவற்றையும் நொடியில் புரிந்து கொண்டு பைராகியை பார்த்து, தன்னை மன்னிக்கும்படியும், தானே அவரை கோயில் உள்ளே பெருமாளை தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாய் கூறினார்.  பொழுது புலர்ந்த நேரத்தில், ராஜமரியாதையுடன் அரசர், அவர் பரிவாரம் சூழ பைராகி கோயில் வாசல் வந்ததும் அசரீரி ஒலித்தது.

'மன்னனே! உன் காவலர்கள் இருவர் மட்டும் நான் நேரில் வருவேன் என நம்பி, என் பரம பக்தனின் வார்த்தைகளையும் நம்பினார்கள். அவர்களுக்கு யானை உருவில் தரிசனம் தந்தேன்.   மன்னனே! என் கட்டளைகள். முதலாவது, என் பக்தன் இனி காலை கோயில் நடை திறந்ததும், இரவு அர்த்தசாமம் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் தங்கு தடையில்லாமல் வந்து என்னை தரிசனம் செய்யலாம். அடுத்து, அரசு நைவேத்தியம் காலையில் முதலில் எனக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. அதற்கு முன் இந்த பக்தன் எது கொடுத்தாலும், அது காயோ, கிழங்கோ, பாலோ, பழமோ அதுதான் முதல் நிவேதனம்.  முடிவாக, என் சந்நிதி முன்பாக வலதுபுறம் இருக்கும் மேட்டில் இந்த பக்தன் தங்க வசதி உன்னால் செய்து தரப்பட வேண்டும்.'

மன்னனும், கூடியிருந்தவர்கள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் சொன்னான்.  ‘பகவானே! உன் தரிசனம் கிடைக்கவில்லை. வருத்தம்தான். ஆனாலும் உன் கட்டளைகளை காதால் கேட்டு நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததில் மிக மிக சந்தோஷம்’.  உடன் நடைமுறைப்படுத்தினான், அரசன்.

இன்றும் ‘ஹாதிராம் பாபா மடம்’ என்ற பெயரில் பெரிய கட்டிடத்தை கோயிலின் வலது பக்க மேட்டில் காணலாம். பல பசுக்கள் அங்கு கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன. இன்றும் விடியற்காலை திருமலையப்பனுக்கு முதல் நிவேதனமாக அந்த மடத்திலிருந்து ‘பசுவெண்ணை’ தினமும் மேள, தீப (தீவட்டி) மரியாதையுடன், சமர்ப்பிக்கப்படுகிறது.

நிறைவாக இந்த வரலாறு எனக்கு கிடைத்த விபரம் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் நன்றி மறந்தவனாவேன். என் நிலையிலிருந்து ஆரம்பித்து, திருவேங்கடவன் பக்தர் யார் ஒருவர் வாயிலாக இவற்றை அறிந்தேனோ, அவரைப் பற்றியும், நடந்த சூழ்நிலை பற்றியும் கீழே தருகிறேன்.

எனது அறுபது வயது பூர்த்தியானதும், ஒரு வருடம் தீட்சை வளர்த்து, வருட முடிவில் திருமலை சென்று முடிகாணிக்கை கொடுப்பதாக பல வருடங்களுக்கு முன் எடுத்த பிரார்த்தனைப்படி, சரியாக ஆங்கில தேதி 14, அக்டோபர் 2000 அன்று எதிர்பாராதவிதமாக, என் மனைவி, எனது மூத்த மகன், அவன் மனைவி, அவள் தாய், தந்தையுடன் திருமலையை அடைந்தேன். கல்யாண உற்சவத்தில் அமர்ந்திருந்தபோது, யாரோ ‘இன்று தேதி அக்டோபர் 14’ எனக் கூற, என் பிரார்த்தனை உடன் ஞாபகம் வர, அன்றிலிருந்து தீட்சை வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு வருட பூர்த்தியில், அக்டோபர் கடைசியில் திருமலை யாத்திரை தொடங்குவதற்கு பதில், உறவினர் சிலர் யோசனையின் பேரில், புது வருடம் பிப்ரவரி 2002-ல் திருப்பதி செல்லலாம் என முடிவெடுத்தோம். காரணம் அக்டோபர், நவம்பர் மழைக்காலம். டீசம்பர், ஜனவரி குளிர்காலம்.

ஆனால், நவம்பர் (2001) வாக்கில், கைசிக ஏகாதசிக்கு முன் ஞாயிறு அன்று, என் உள்மனம் ‘இன்று புறப்பட்டு திருப்பதி செல். உன் பிரார்த்தiயை உடன் செலுத்து’ என கூற, அன்று மதியம் புறப்பட்டேன்.  திருச்சியிலிருந்து புறப்பட்ட திருப்பதி விரைவு ரயிலில் பயணம். மாயவரத்தில், நடுத்தர வயது அன்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் ஒரு தங்க, வைர வியாபாரி. ‘சேட்’ வகுப்பினர். அவர் திருமலையப்பனின் பக்தரில் ஒருவர். அவர் பணிவு, அடக்கம், பக்தி பற்றி சொல்வதானால் சில பக்கங்கள் தேவைப்படும். அவர் பல கோயில்களுக்கும், பல மகான்கள் சமாதி அடைந்த தலங்களுக்கும் போய் வந்தவர். திருப்பதி மண்ணை அடைந்ததும் அவர் கூறியது, ‘நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள். நானும் அப்படியே. வயதில் பெரியவரான உங்களுக்கு உதவியானவற்றை நான் செய்கிறேன்’ எனக் கூறி எனக்கு வழிகாட்டியாக இருந்து, சுவாமி தரிசனத்துக்கான உதவிகளையும் செய்தார். மேலும், அவர் கூறியது, நான் சுவாமி தரிசனம் செய்யும் முன்பாக, இங்கு இருக்கும் பசு மடத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு காலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், என கூறி தீவனத்துடன் மடத்திற்கு (ஹாதிராம் பாபா மடம்) அழைத்துச் சென்றார்.

கைசிக ஏகாதரி இரவு அங்கு நடந்த பூஜை முடிவில், சிறு கரும்பு துண்டு மட்டும் பிரசாதமாக கொடுக்க, ஏன்? என்ற கேள்விக்கு விடையாக இந்த வரலாறு முழுவதும், அன்று பின்னிரவு அவர் கூற, என் மனதில் பதிந்தது.
இது நடந்தது 2001, நவம்பர் மாதம், கைசிக ஏகாதசி அன்று. அநேக தமிழ் அன்பர்கள் அந்த மடத்தின் பெயரை பார்த்தாலும், அது வடஇந்தியர் வந்தால் தங்குவதற்கான ‘தங்குமிடம்’ என்று நினைத்திருக்கலாம். ஆனால், அந்த மடத்திற்கு இப்படி ஒரு மகான் வரலாறு இருப்பதை பலரும் அறிய வாய்ப்பில்லை. தமிழர் பலர் அறியச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மாயவரம் அன்பருக்கு செய்யும் மரியாதையும் கூட.

கைசிக ஏகாதசிக்கு முன் ஞாயிறு அன்று என் உள்உணர்வு கூறியது ஏன்? இப்போது தெரிகிறது. ‘மாயவரத்தில் என் பக்தன் ஒருவன் உனக்கு வழித்துணையாக வந்து சேர்வான். உன் எதிரில் அமர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, திருமலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னை தரிசனம் செய்ய வந்த ‘பாபா’வின் வரலாறு முழுவதையும் கூறி, பாபாவின் மடம், சமாதி என உன் கண் முன் காட்டுவார். இது பகவானின் சங்கல்பம்.

இதற்கு மேலும் முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. மூன்று மாதம் சென்றதும் அதை உணர்ந்தேன். பிப்ரவரி, 17-ம் தேதி, 2002-ல் நடந்தது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அன்று எனது தாயார் (85 வயது) இயற்கை எய்திய நாள். ‘ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்’ என திருமால் பக்தர்கள் கூறுவது. அந்த சரீரத்தில் உறைந்த ஜீவன், ஆச்சாரியன் வழிகாட்டுதலுடன் பகவான் பக்கம் போய் சேர்வதான நிகழ்வு, நம்பிக்கை. ஆமாம்1 பிப்ரவரி மாதம், தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னால் திருமலை வரமுடியாது. முடி காணிக்கை என்ற எளிமையான, பணிவான, பக்தி காணிக்கை, மன திருப்பதியுடன், சந்தோஷத்துடன் செய்ய வேண்டியது. மன அழுத்தத்துடன், ஒரு சோகத்துடன், மழித்துக் கொள்வதான செயலாய் திசை மாறாமல், திருமலை அப்பன் வழிநடத்த, கைசிக ஏகாதசி அன்று ‘திருமலை தெய்வம்’ தரிசனம் நடந்தது அவன் செயல்!

ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறு

ஸ்ரீ:
ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறு

 ‘என்றும் பதினாறு’ – உடன் மனதில் வருவது மார்க்கண்டேயர் வரலாறு. பரமேஸ்வரன் சிறுவன் மார்க்கண்டேயனுக்கு மரண பயத்திலிருந்து விடுபட அருளிய வரம்.   மார்க்கண்டேயன் தவமிருந்து பெற்ற பெயர். மார்க்கண்டேய மகரிஷி. மகரிஷிக்கு பெற்ற வரமே பாரமாக தெரிகிறது. இன்றும் என்றும் இப்பூவுலகில் இருந்து என்ன செய்வது? வைகுந்தம் ஏக வேண்டாமா?

நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டார். விஷ்ணுவிடம் வைகுந்தம் வந்தடைய வரம் கேட்பது குறிக்கோள். பகவான் பார்த்தார். பரமேஸ்வரன் அருளிய வரத்திற்கு முரணாக எப்படி வரம் தருவது? மகரிஷியின் முயற்சிக்கு, தவத்திற்கு பலன் கொடுத்தாக வேண்டுமே!
 ஸ்ரீ மகாலக்ஷ்மியை பார்த்தார். 'தேவி! உடன் சென்று மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்யும் துளசிவனத்தில் ஒரு சிறு குழந்தையாக அவதரி. அவசரமானதும் அவசியமானதும் கூட.'

மகாலக்ஷ்மி உடன் செயல்பட மகரிஷியின் தவச்சாலை அருகில், துளசிவனத்தில், சிறு குழந்தை. மகரிஷி பார்த்தார். சிறு குழந்தை. யார் பராமரிப்பது? குழந்தையை பூமியிலிருந்து வாரி எடுத்தார். மனம் முழுவதும் குழந்தையிடம். பூமாதேவி, என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தார். இந்த பெண் குழந்தையை நன்கு வளர்த்து, ஒரு வரன் தேடி மணமுடித்து, ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால் … தன் உடனடி குறிக்கோள், கடமை அது என தோன்ற, கவனம் முழுவதும் குழந்தையை பேணி வளர்ப்பதில் செல்ல, அவர் தவ முயற்சி மட்டும் மனதில் மெல்லிய இழையாக ஓடியது.

 பெண்ணுக்கு கலைகள் பல கற்பித்தார். கவனத்துடன் கற்ற பெண்ணைப் பார்த்து பெருமிதம் கொண்டார். ஆனாலும், உணவு சமைப்பதில் அந்த அளவு கவனம் காணோம். அதிதி யாராவது வந்தால் சற்று கவனம், ஏதோ சுமாரன உணவு. மற்ற நாட்களில் ஏனோ தானோ என்ற சமையில். பல நாட்கள் உப்பு சேர்த்து சமைப்பது என்பதே கிடையாது. பலமுறை சொல்லிப் பார்த்தார். கல்வி கற்பதில் கவனமாய் இருக்கும் பெண், ஏனோ உணவு சமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒருக்கால், தான் தவம் இயற்ற சுவை ஒரு தடையாக இருக்கக்கூடாது என எண்ணி, வெந்ததும் வேகாததுமான, உப்புச்சுவை இல்லாத சாப்பாடோ என்னவோ! ஏதும் புரியவில்லை மகரிஷிக்கு. உப்பு சப்பில்லாத உணவை பழகிக் கொண்டார்.

ஒருநாள் வயோதிகர் ஒருவர் அதிதியாக வந்து சேர்ந்தார். வந்தவரை உபசரித்து, வளர்ப்பு மகளிடம் வாஞ்சையுடன் கூறினார். வந்திருக்கும் அதிதிக்கும் என உணவு தயார் செய், என்று. அதிதி என்றவுடன் பெண் பக்குவத்துடன் உணவு படைப்பாள் என்ற எதிர்பார்ப்பு.

வந்த அதிதிக்கும் மகரிஷிக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஆகா! என்ன சுவை! மகரிஷி தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட பலவகை உணவு பதார்த்தங்களை சுவைத்தது என்பதே கிடையாது. தன் பெண்ணுக்கு இப்படியும் சமைக்கத் தெரியுமா! மனம் பெருமிதப்பட்டது. இவளுக்கு ஒரு வரன் தேடி மணம் முடித்தால் தன் கடமை நிறைவுபெறும் என மனம் எண்ணியது.
வந்த அததி இவர் எண்ணத்தை அறிந்தாரோ என்னவோ! வந்தவர் மகாவிஷ்ணு என சிறு பெண்ணான மகாலக்ஷ்மிக்கு தெரியாதா என்ன! சாப்பிட்டு முடித்த பிறகு வந்த வயோதிக அதிதி பேச்சை ஆரம்பித்தார்.
தான் இதுவரை இவ்வளவு சுவையான உணவு உண்டதில்லை, என்று ஆரம்பித்தார். மகரிஷியும் மனத்துள் மகிழ்ந்து, ‘ஆமாம்! என் வளர்ப்பு மகளுக்கு இவ்வளவு பக்குவமாக, சுவையாக உணவு சமைக்க தெரியும் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்’, என்றார்.

 வந்த அதிதி தொடர்ந்தார். ‘எனக்கு உமது பெண்ணை மணமுடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் உண்டாகிறது. நன்றாக, சுவையாக உணவு சமைக்கும் இந்த பெண்ணை மணந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. உமது பெண்ணை, எனக்கு, வாழ்க்கைத் துணையாக தாரை வார்த்து தருவீரா?

இது கேட்ட மகரிஷிக்கு, தன் மகள் நன்றாக சமைக்க தெரிந்திருக்கிறாளே, என்ற சந்தோஷம் போய், இன்று இவள், ஏன் மிக சிறப்பாக, விசேஷமாக உணவு படைத்தாள். இதுவே இவளுக்கு பாதகமாய் போய்விடும் போல் தெரிகிறதே. சிறு பெண்ணான இவளுக்கு இதுகாலம் சுவையாக உணவு சமைக்கத் தெரியவில்லையே என கவலைப்பட்டேன். இன்றோ, இவள் ஏன் இவ்வளவு சுவையாக சமைத்தாள் என மனம் வருந்தும்படி ஆகிவிட்டதே. அமிர்தம் போல் இனித்த உணவு, நெஞ்சம் முழுவதும் கசப்பாய் படர்ந்தது. ஆமாம்! ஒரு வயோதிகனுக்கு எந்த தந்தை தான் தன் அன்பு மகளை மணம் முடிக்க விழைவான்?

 ஒருவன் புத்திரனை பெறாவிட்டால் நரகத்தில் வீழ்வான், என சொல்லப்படுகிறது. அதேசமயம், ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, கன்னிகையாக, ஒரு நல்ல மணாளனுக்கு வாழ்க்கைத் துணைவியாக, கன்னிகாதானம் செய்யாதவன் சொர்க்கம் செல்ல முடியாது, என்றும், மறுபிறவி எடுத்து பெண்ணை பெற்று, வளர்த்து, கன்னிகாதானம் செய்த பிறகு தான் அவனுக்கு மோட்சம் எனவும் கூறப்படுகிறது.

மகரிஷி மனத்துள் நினைத்தார். ஒரு பெண் குழந்தை துளசிவனத்தில், தவச்சாலை அருகில் கிடைத்தது. நன்றாகவே வளர்த்தேன். ஏனோ எதிலும் பிடிமானம் இல்லாமலும், அதேசமயம் விரக்தியின் விளிம்பில் போய் நிற்காமலும், நன்றாக வளர்ந்தாள். என் வரை குறையேதும் தெரியவில்லை. எதிலும் ஒரு பற்றும் இல்லை, விருப்பும் இல்லை. அதேசமயம் வெறுப்பும் இல்லை. பெண்ணைப் பற்றி மனதில் கோட்டை கட்டினேனே தவிர, அவள் மணவாழ்க்கை பற்றி, சிந்தித்து செயலாற்றவில்லை. வந்திருக்கும் அதிதி, பகவான் அருளால் எனக்கு பெண்ணின் திருமணத்தை நினைவூட்ட வந்தவர் போலும். அவர் கண்ணில் தெரியும் ஒளி என்னை நிமிர்ந்து அவர் முகத்தை பார்க்க தடுக்கிறது. எடுப்பான அவர் முகம், நாசி, அவர் உறுதியானவர், உண்மையானவர் என்பதை சாற்றுகிறது.

 இருந்தும் வந்தவரின் வயோதிகம், பெரும் தடைச்சுவராக தெரிகிறதே! இப்போது ஏதோ காரணம் சொல்லி வந்தவரை ‘போய் வாரும்’ என வழியனுப்பிவிட்டால், பிறகு பெண்ணுக்கு உடனடியாக வரன் பார்த்து மணமுடித்து விடலாம். யோசித்து வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறையாக சிந்தித்து சொன்னார்.

தவசீலரே! உமக்கு என் வணக்கங்கள் பல. இன்று அதிதியாக வந்து என்னை கௌரவித்தீர்கள். என் மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்தினீர்கள். மிக்க நன்றி. உங்கள் கண்களில் காணப்படும் ஒளி, என்னை நிமிர்ந்து உம் முகம் பார்க்க தடுக்கிறது. அந்த ஒளியின் பிரதிபலிப்போ என்னவோ, தங்கள் முன் கேசம் முழுவதும் வெள்ளி இழையாக மின்னுகிறது. காதுகள் இரண்டும் பல பல வேத கோஷங்களை கேட்டு கேட்டு சிவந்த இரத்தினம் இழைத்த பாத்திரம் போல் ஜொலிக்கிறது. காதோர கேசங்களும் வைர மாலையாய் மின்னுகிறது. தங்களை மறுபடியும் வணங்குகிறேன். தங்களுக்கு உகந்த மனப்பெண்ணாக என் மகள் ஈடாவாள், என்பதும் எனக்கு புரியவில்லை. அவள் இதுவரை பல வருடங்களாக உணவு சமைப்பதில் அக்கரை காட்டியது கிடையாது. பல நேரங்களில் அது ஒரு குறையா என்ற ரீதியில் நடந்து கொள்வாள். ஞாபகப்படுத்தினாலும் பொருட்படுத்துவது கூட இல்லை. இப்படிப்பட்ட பெண் தங்களுக்கு தகுந்த துணையாவாளா என்ற என் சந்தேகம் நியாயமானது தானே? தாங்கள்தான் இது குறித்து யோசித்து சொல்லவேணும். தங்களைப் போன்ற பெரியவர்க்கு தகுந்த வரன் அமையும். சிறுகுழந்தையான இப்பெண் உப்பிட்டு கூட பிரசாதங்கள் சரியாக சமைக்கத் தெரியாதவள் என முன்பே கூறினேன். தங்களுக்கு சுவையான பிரசாதங்கள் தயாரிப்பதில் அதிக அக்கரை இல்லாத இந்த சிறு பெண் தகுந்த மனையாள் ஆகமுடியுமா?

மகரிஷி பலவாறு யொசித்து வந்த அதிதியின் காலடியில் கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு அமர்ந்தார். பெரியவரிடம் சரணடைவதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. அதேசமயம் இதுவரை பின்கட்டில் இருந்த வளர்ப்பு மகளும் அதிதியையும் மகரிஷியையும் வலமாக வந்து மகரிஷிக்கு எதிர்ப்புறம் தானும் மண்டியிட்டு கைகூப்பி அமர்ந்தாள்.

 மகரிஷிக்கு பெண்ணின் முகபாவத்திலிருந்து ஏதும் உணர முடியவில்லை. தந்தையே! தாங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி என்ற பாவத்தில் இருக்கிறாளா? அல்லது தந்தையும் மண்டியிட்டு கெஞ்சுகிறார். நானும் மண்டியிட்டு கெஞ்சுகிறேன், என்று சொல்லாமல் சொல்லுகிறாளா? ஏதும் புரியவில்லை.  வந்த அதிதியோ சிறிதும் தயங்காமல், மகரிஷியே! உங்கள் பதிலும் பணிவும் என்னை மகிழ்விக்கின்றது. நான் உதியாகச் சொல்கிறேன். இந்தப் பெண் உப்பே சேர்க்காமல் உணவு படைத்தாலும், அதை இன்று உண்ட அமுதம் போல் ஏற்பேன். கவலை வேண்டாம். திருமணத்திற்கு நான் சந்தோஷமாய் சம்மதிக்கிறேன். தங்கள் சம்மதம் தான் பூரணமாக வேண்டும்.

பணிவான வேண்டுகோள் தான். மகரிஷி மனக்கலக்கம் கொண்டார். முடிவாக, பரந்தாமனை, ஹரியை, நாராயணனை வேண்டுவது தவிர ஏதும் தோன்றவில்லை. உடன் தியானத்தில் உள்மனத்தில் உறையும் பகவானிடம் முறையிட்டார். உடன் மனத்தில் எதிரொலியையும் கேட்டார். மகரிஷியே! உம்முன் நிற்கும், அதிதியை, விருந்துண்டவரை, சற்று கண் திறந்து பாரும்.

கண் திறந்து பார்த்த மகரிஷிக்கு ஆச்சர்யம்! ஆனந்தம் ! ஸ்ரீ மகாவிஷ்ணு சங்கு சக்கரதாரியாக காட்சி அளிக்கிறார். அதே ஒளிவீசும் கண்கள். தன் கண்களுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது. சுற்றிலும் பரவும் ஒளி வெள்ளத்தின் ஊடே பகவானின் முக மண்டலத்தை முழுவதும் அனுபவித்து பார்க்க முடிகிறது. சற்று கண்களை தாழ்த்தி திருவடிகளை வணங்குமுகமாய் பார்த்தார். வந்தவர் மகாவிஷ்ணு என்றால் தன் வளர்ப்பு மகள் யார்? எதிர்ப்பக்கம் பார்க்க, ஸ்ரீமகாலக்ஷ்மி அமர்ந்த திருக்கோலம்.

 ஆகா! திவ்யதம்பதிகள் நடத்திய நாடகம். பல வருடங்களுக்குப் பிறகு இன்று நொடியில் புரிகிறது. உடன் மனத்தில் எழுந்த எண்ண அலைகளை பகவான் திருவடிகளில் சமர்ப்பித்தார்.

பகவானே! உன் திருவடிகளில் சரணம். நான் கேட்காமலேயே திருமகளை எனக்கு மகளாக தந்தீர். உரிய காலம் வந்ததும், பெண் கேட்டபோது, நான் தர மறுத்தேன். அது என் அறியாமை. ஒரு பொழுதில், திவ்விய தம்பதிகளாய் காட்சி அளித்தீர்கள். மிக மிக சந்தோஷம்.

மகரிஷியே! உமது பல நாள் தவத்தின் பலன் இது. வேண்டிய வரம் கேளும். தருகிறோம்!

மகரிஷி தொடர்ந்தார். எங்கும் நிறைந்த விஷ்ணுவே! வாசுதேவரே! என்னப்பனே! மணியப்பனே! பொன்னப்பனே! என் மகளாய் இதுகாறும் வளர்ந்த மகாலக்ஷ்மியை, நான் கன்னிகாதானம் செய்ய, நீர், உமது திருமணத்தை நடத்தித்தர அருள்புரிய வேண்டும். எனக்கு காட்சி அளித்தது போல இந்த தலத்தில், இந்த துளசிவனத்தில், அர்ச்சாமூர்த்தியாக இருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தியுடன் வணங்கும் அவர்கள் இக பர வாழ்க்கையில் வேண்டும் வரங்களையும் அருள வேண்டும்.

மகரிஷியே! வேண்டிய வரம் தந்தோம். இனி இந்த துளசிவனம், மார்க்கண்டேய ஷேத்திரம் என அறியப்படும். தாங்கள் இதுநாள்வரை உப்பில்லாத உணவை உண்டது போல், நானும் இந்த தலத்தில் உப்புச் சுவையை விடுத்து, பிரசாதங்களை அமுதமாக ஏற்கிறேன்.

‘இருக்கும் இடம் வைகுந்தம்’ என்ற சொற்படி இந்த தலத்தில் எனது வலது பக்கத்தில் பூமிதேவி அமர்ந்தும், இடது பக்கத்தில் நீர் அமர்ந்தும், அஞ்சலிசமேதராய் வணங்கிய கோலத்தில் இந்த ஷேத்திரம்விளங்கும். பூலோக வைகுந்தம் என பெயர் பெறும்.

ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறை என் மனோதர்மத்துடன் எழுதியிருக்கிறேன். குறைகளை நிறை செய்து ஸ்ரீ ஒப்பிலியப்பன் ஏற்க வேண்டும்.