செவ்வாய், டிசம்பர் 27, 2005

அமெரிக்க வீடு - இந்தியக் கண்ணோட்டதில்!

முதல் முறையாக 1997ல் அமெரிக்கா வந்து பீனிக்ஸில் என் வீட்டில் தங்கியிருந்தபோது வீட்டு சமையலறை, குளியலறை, வீட்டு அலார்ம் செட்டிங் மற்றும் கணிப்பொறியைப் பற்றி எழுதியது!

நெருப்பில்லா சமையலறை
ஜலதாரையில்லா குளியலறை
புத்தகமில்லா நூல்நிலையம்
காவலாளியில்லாக் காவல்

இதுதான் அமெரிக்கா வீடு!

வெள்ளி, டிசம்பர் 23, 2005

முகில்

முகிலே!

வெண் பொதியாய் விண்ணில் திரிவதை விட்டு
மண்ணில் மனிதர்களும் மரங்களும் வாழ
ஆழ்கடலிலிருந்து அமுதம் பெற்றது போல்
உப்பை நீக்கி உயர் நீரைப் பெற்று,
கார் முகிலாய் கருமை நிறம் பெற்றாய்!

உருவம் கருத்தாலும் உள்ளம் உயர்ந்ததென
உவந்து கண்ணனும் கார்வண்ணன் எனப்பெயர் கொண்டான்,
கண்ணனுக்கு பெயர் தந்த வள்ளல் நீ!

கார்முகிலே!

நீழ்கடலின் அலைத் துளியிலிருந்து
உவர்ப்பை நீக்கி உயிர்நீரைப் பெற்றாய்.
வெள்ளித்தட்டாய் வானில் மிதந்த நீ
கருந்திட்டாய், கடல் காடு மலை கடந்து
நாடு நகரம் செழிக்க நல்மழையாய்
உலகெங்கும் பெய்து கரைந்தாய்.

உன் உயர்குணம் கண்டு உவகை கொண்டோம்
வாரி வழங்கும் வான்மழை மேகமே
உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!

ஒரு கோடையில் பெய்த மழையைப் பார்த்து என் தந்தை எழுதியது - பத்து வருடங்களுக்கு முன்னால்.

சனி, டிசம்பர் 03, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - ஆறு

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும்

நிறைவுப் பகுதி

முதல் நாள் நடந்த சொக்கட்டான் போட்டியில், அரசகுமாரர்கள் அத்து மீறிய செயல்கள் எல்லாம் பலருக்கும் பலவிதமாக பரவி, அவையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருதராஷ்டிரன் கண்ணால் இதைப் பார்த்திருந்தால் அவன் மனம் வேறு விதமாய் கூட சிந்தித்திருக்கும். ஆனால் கண்ணில்லாத மன்னன் தான் தனியாக சிந்தித்த, அதே பாதையில் நடக்க தீர்மானித்துவிட்டான்.

திருதராஷ்டிரன்: "சபையோர்களே! நேற்று இந்த துருவம்ச சபையில் நடந்த நிகழ்ச்சிகள் எவருக்குமே சந்தோஷத்தை கொடுக்கவில்லை. துரியோதனனும், தன் மனம் வருந்தி சில காலம் வனவாசம் செய்து மன அமைதி பெற வேண்டி என்னிடம் அனுமதி கோரி வந்தான். சொக்கட்டான் விளையாட்டை, சந்தோஷத்துடன் ஆடி மகிழ்வது போக, வினையாக்கி, வீண் விபரீதமாய் யுதிஷ்டிரன் நாடு நகரங்களோடு எல்லாவற்றையும் இழந்த தனி மனிதனாகி விட்டான். நேற்றே நான் எடுத்துக்கொண்ட சில முயற்சிகள் வெற்றி பெறவில்லை. நடந்தவற்றிற்கு துரியோதனன் பங்கு என்ன? யுதிஷ்டிரன் பங்கு என்ன? யார் இந்த விளையாட்டை வினையாக மாற்றியது? என்று பல வினாக்கள் என் மனத்தில் இரவு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்ற வார்த்தைகள் போல நேற்று விளையாடிய சொக்கட்டான் ஆட்டத்தைப் போல இன்றும் ஒரு முறை சகோதரர்கள் இருவரும் ஆடி, இதில் தோற்றவரே குற்றவாளி என தீர்மானிப்பது என்ற யோசனையும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனையாக பன்னிரண்டு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை ஒரு விதத்தில் எனக்கு ஏற்படும் பெரிய பொறுப்பிலிருந்து விடுதலை தரும். ஏனென்றால் அரச குமாரர்களை விஜாரிக்கும் போது இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து, குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படலாம். சொக்கட்டான் ஆடுவது என்பதின் மூலம் விதியின் வழிப்படி நடக்க விட்டுவிடலாம். அப்படி சொக்கட்டான் ஆடுவது என்றால் தூய உலோகத்தில் தான் காய்கள் செய்து விளையாட வேண்டும் என முடிவும் செய்துவிட்டேன். மந்திரி விதுரரே! காய்களை சரிபார்த்துவிட்டு, யுதிஷ்டிரன் இதற்கு உட்படுகிறானா என்பதையும் கேட்டு, சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

விதுரர்: "ஹஸ்தினாபுரத்து மன்னரே! வணக்கம். தங்கள் மந்திரி என்ற முறையில் என்னை ஏற்பாடு செய்யும்படி பணித்துள்ளீர்கள். இப்போது காய்களைப் பார்ப்பதற்கு முன், காரண காரியங்களைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக தவறு செய்தவர்களாய்க் கருதப்படும் இந்த அரச வம்சத்தை சேர்ந்த இரு சகோதரர்களுடைய பூரண ஒத்துழைப்பயும் நான் கோர வேண்டும். அதற்கும் முன்பாக துரியோதனன் தான் தவறு செய்து விட்டோமா என்று எண்ணுவது போல யுதிஷ்டிரனும் எண்ணுகிறானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, நான் ஏதும் தொடர்வதற்கு முன்பாக ஹஸ்தினாபுரத்து அரசரான தாங்கள், யுதிஷ்டிரன் நேற்று நடந்த நிகழ்ச்சிகளுக்கும் தானும் பொறுப்பு ஏற்கிறானா? தன்பக்கமும் தவறு இருக்கிறது என ஒப்புக் கொள்கிறானா? தவறு அல்லது குற்றம் யாருடையது என்பதற்கு சொக்கட்டான் ஆடி தோல்வியின் அடிப்படையில் தண்டனையை தீர்மானிப்பதை ஏற்கிறானா? கடைசியாக பன்னிரண்டு ஆண்டு வனவாசம், ஒரு வருடம் மறைந்து வாழ்வது என்ற தண்டனையையும் ஒப்புக் கொள்கிறானா? என்பதை நேரிடையாக யுதிஷ்டிரனிடம் கேட்டு அவன் இந்த சோதனைக்கு உட்படுகிறான் என்றும் சபை அறிய செய்ய வேண்டும். அத்துடன் துரியோதனனும், தானும் இந்த சோதனைக்கு உட்படுவதாக சபையில் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்."

திருதராஷ்டிரன்: "விதுரா! நீ கூறிய வார்த்தைகள் அப்பழுக்கில்லாதவைகள். யுதிஷ்டிரா! துரியோதனா! இருவரும் விதுரர் கூறியவற்றை கேட்டீர்கள் அல்லவா? இந்த சோதனைக்கு உட்பட தயார் என்பதை சபையில் தெரிவியுங்கள்."

துரியோதனன்: "நான் சொக்கட்டான் ஆட சம்மதிக்கிறேன். தோற்றவர் வனவாசம் போக் வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்".

யுதிஷ்டிரன் முகம் மிகவும் பிரகாசமாய் மலர்கிறது.

யுதிஷ்டிரன்: "தங்கள் உத்தரவு பெரியப்பா".

சபையில் கூடியிருந்தவர்கள் பலர் முகத்திலும் கேள்விக்குறி. எந்த அரச குமாரர் காட்டில் வசிக்க வனவாசம் போகப் போகிறார் என்ற கேள்வி.

பீஷ்மர் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. அவர் மனத்துள் எண்ண ஓட்டம்: ‘இந்த அரச வம்சத்தில் எந்த கிளையை வெட்டினால் என்ன? ஆனால் துரியோதனன் ஒரு புரையோடிய கையோ? சகுனி, துரியோதனன் மனத்தில் களங்கத்தை உண்டாக்கிவிட்டான். குல ஆச்சார்யர்களும், மற்ற சான்றோர்களும் எவ்வகையான நல்ல பழக்க வழக்கங்களை கற்பித்த போதும், சகுனி ஒரு துளி விஷத்தை துரியோதனன் மனத்தில் விதையாக விதைத்து விட்டான். முடிவு? நிச்சயம் அழிவுதான். வெளியில் வளரும் விஷவிதையை முளையிலேயே அழித்து விடலாம். ஆனால் அது துரியோதனன் மனத்தில் அல்லவா வளர்கிறது? இப்போது துரியோதனனைக் காப்பது என்பது 'அரசைக் காப்பேன்' என்று தந்தைக்கு கொடுத்த சத்திய வாக்கின் படி கடமையாகிறது. தெரிந்தே விஷவிருக்ஷத்தை வளர்ப்பது தர்மமாகுமா? துரியோதனைக் காப்பது கடமையாகிறது; ஆனால் விஷவிருக்ஷத்தை அழிப்பது தர்மம். அந்த தர்மத்தை யாராவது செய்யட்டும். அதைச் செய்வதற்கு பீமன் ஒரு கருவியாக நேற்றே ஆகிவிட்டானோ?'

விதுரர்: "மன்னரே! துரியோதனன் தன் சம்மதத்தை தெரிவித்து விட்டான். யுதிஷ்டிரனோ 'தங்கள் உத்திரவு' என்ற ஒரு வாக்கியத்தில் கூறிவிட்டான். ஆனால் தாங்கள் இந்த சொக்கட்டான் ஆட்டத்தில் தோல்வி பெற்றவர் பெற வேண்டிய தண்டனையைப் பற்றி கூறி விட்டீர்கள். அதே சமயம் வெற்றி பெற்றவர் என்ன பெறுவார்கள் என்பதைப் பற்றி ஏதும் கூறவில்லையே?"

துரியோதனன்: "சித்தப்பா! அவையில் தங்களுக்கு மன்னரால் இடப்பட்ட கட்டளையை மட்டும் நிறைவேற்றுங்கள். பகடைக்காய் சுத்த செம்பினால்தான் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை மட்டும் சரி பார்த்துவிட்டு, ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விதுரர்: "துரியோதனா! அவையடக்கத்துடன் இருக்க பழகிக்கொள். சொக்கட்டான் ஆட வேண்டும், தோற்றவர் வனவாசம் போக வேண்டும் என்பது மட்டும் புரிந்தால் போதாது. யுதிஷ்டிரன் கூறிய பதிலையும் சற்று கவனி. 'தங்கள் உத்திரவு பெரியப்பா' - பெரியப்பாவின் உத்திரவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அவையடக்கத்தையும் பார்த்தாவது கற்றுக்கொள்."

துரியோதனன் கோபத்துடன் எழுந்து பேச வார்த்தைகள் தேடுகிறான்.

விதுரர்: "துரியோதனா! இப்போது குற்றம் சாட்டப்பட்ட இரு அரசகுமாரர்களில் ஒருவன் நீ; நான் இந்த அரசின் அமைச்சர். அரசின் ஆணைபடி நடப்பதற்கு அரசர் உத்திரவு எனக்கு முன்பு உள்ளது. நீ குற்றவாளியா அல்லவா என்று இந்த அவை இன்னம் தீர்மானிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் குறுக்கிட உனக்கு அனுமதியில்லை."

துரியோதனன் மறுமொழி பேச வாய் எழாது அமர்கிறான். சகுனி சற்று யோசனையுடன் எழுந்து, "மகா மந்திரி விதுரரே! துரியோதனன் சார்பில் சில விபரங்களை சபையில் எடுத்து சொல்ல எனக்கு அனுமதி உண்டா?"

விதுரர்: "விபரங்கள் வரவேற்கப்பட வேண்டியது தான். அது எந்த அளவிற்கு பிரச்சனையை தீர்க்க உதவியாக இருக்கும் அல்லது இருக்காது என்பதை அரசரும் அவையும் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கள் கருத்து எதுவானாலும் அவையில் கூறலாம்."

சகுனி: "நன்றி. துரியோதனன் வனவாசம் என்று ஆரம்பித்தது முதல் எனக்குத் தெரியும். இப்போது தோற்றவர் குற்றவாளி என்ற முடிவுடன் வனவாசம் போக வேண்டும் என்பது தண்டனை. நேற்றே இரண்டாய் இருந்த நாடு, இன்று ஒன்றாய் மாமன்னர் திருதராஷ்டிரர் கொடையின் கீழ், சூரியன் உதிக்கும் முன்பே வந்துவிட்டது. ஆக ஆட்டத்தில் யுதிஷ்டிரன் ஜெயமடைந்தால் இந்திரப்பிரஸ்தம் திரும்ப கொடுப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏதும் இல்லை. தவிர, குற்றம் சாட்டப்பட்ட இருவரில் குற்றமற்றவர் என தீர்மானிக்கப் படுபவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளி காடு செல்ல வேண்டும். விடுவிக்கப்படுபவர்களுக்கு சன்மானம் ஏதும் மன்னர் தர முடியாது. இது தங்களுக்கு தெரியாததில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இப்போது வந்ததால் சொல்கிறேன்."

விதுரர்: "காந்தார இளவரசர், குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுபவருக்கு சன்மானம் ஏதும் தரமுடியாது என்றார். எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். நேற்று சபையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி தான் இன்றைய நடவடிக்கைகள். நடந்தவைகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையது என்றாலும், நீதியின் பொருட்டு, பிரித்துப் பார்க்கையில் சில தவறுகளும், சில குற்றங்களும் தெரியும்.

யுதிஷ்டிரனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த சொக்கட்டான் ஆட்டத்தில் சில தவறுகளும் சில குற்றங்களும் நடந்துவிட்டன. அதற்கான பொறுப்பு முழுவதும் அவ்விருவர் மீது மட்டும் சார்ந்ததாய் நினைத்து இருக்கிறோம். அதே சமயம், இந்த சபையில் கூடியிருக்கும் பொறுப்பான பலருக்கும் எவ்வித பொறுப்போ, கடமையோ இல்லை என்று நினைக்க முடியுமா? நிச்சயம் அவ்வாறு இல்லை தான். பின்? அதற்கான விலையை, தண்டனையை சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் கொடுத்தோ அல்லது அடைந்தோதான் தீர வேண்டும். எப்போது? காலம் தான் பதில் சொல்லும்.

மற்ற குற்றம் திரௌபதிக்கு இழைக்கப்பட்டது. திரௌபதியின் கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை. யாரும் பதில் கூறவில்லை என்பதால் பதிலே இல்லை என்று பொருளல்ல. திரௌபதி தன் சபதத்தின் மூலம் பதிலும் தானே கூறிவிட்டாள். அதை யாரும் ஆட்சேபிக்கவும் இல்லை. தற்போது காந்தார இளவரசர் சகுனி, இந்திரபிரஸ்தம் மன்னர் திருதராஷ்டிரர் ஆளுகைக்கு உட்பட்டதாக நேற்றே வந்துவிட்டது என்றார். ஆனால் அரசரோ, 'நேற்று நடந்த விளையாட்டை வினையாக்கியது யார்?' என்ற வினாவிற்கு இன்று மறுமுறையும் காய் ஆடி தீர்மானிக்க முயலுவதிலிருந்து, நேற்று நடந்தது நேற்றே முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வரவில்லை என உணர்த்துகிறது. ஆக தற்போது துரியோதனன், ஆட்டத்தில் தோற்றால் பதிமூன்று வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்ற தண்டனையின் மூலம், இளவரச பட்டத்தையும் இழக்க வேண்டியதாகிறது.

அப்படியானால், யாருக்கு இளவரசு பட்டம் சூட்டுவது என்பதையும் இப்போது, அதாவது இந்த ஆட்டத்திற்கு முன்பே தீர்மானிக்க வேண்டியதாகிறது. மேலும், சகுனி கூறுவது போல இரு நாடுகளும் ஒன்றாக நேற்றே ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டால், இந்த அரச குடும்பத்தின் மூத்தவனான யுதிஷ்டிரன் தான் இளவரசன் ஆக பட்டம் சூட்டப்பட வேண்டியவனாகிறான். இது ஒரு வழி".

துரியோதனன் இதைக் கேட்டதும் மிகவும் பதட்டமடைகிறான். சகுனி "சற்று பொறு. 'இது ஒரு வழி' என்று விதுரர் சொன்ன போதே, இரண்டாவது வழி ஏதோ சொல்லப் போகிறார் என்றாகிறது. அது என்ன என்று தெரிந்துகொண்டு பேசலாம்", என்று துரியோதனனை அடக்குகிறான்.

விதுரர் மேலும் தொடர்கிறார்: "ஆனால், இந்திரப்பிரஸ்ததை தன் ஆளுகையில் எடுத்துக் கொண்டுவிட்டதாக இதுவரை அரசர் சபையில் அறிவிக்கவில்லை. நாடை இழந்தது போன்ற தோற்றத்தில் யுதிஷ்டிரன் இருக்கிறான். குற்றம் யாருடையது என்று தீர்மானிக்கப்படும் போது, குற்றம் துரியோதனனுடையது என்று சொக்கட்டான் ஆட்டதின் மூலம் தீர்மானிக்கப்படும் போது யுதிஷ்டிரன் நாட்டை இழக்கவில்லை என்பது தானாகவே முடிவாகிவிடுகிறது. அத்துடன் துரியோதனன் பதிமூன்று வருடம் வனவாசம் செல்ல, இளவரசன் பட்டத்தையும் துறந்துதான் செல்ல வேண்டும். தண்டனை அனுபவிக்கும் போது, எந்த பதவியும் அரசர் கொடுக்க முடியாது. பட்டத்தை யாருக்கு சூட்டுவது என்பதை அரசர் அப்போது தீர்மானிக்க வேண்டும். அந்த நிலையில், யுதிஷ்டிரன் தனது நாட்டை திரும்ப பெறுகிறான். அதே சமயம் மன்னர், ஹஸ்தினாபுரத்து இளவரசராக துரியோதனன் சகோதரர்களில் யாருக்கவது பட்டம் சூட்ட வேண்டும்.

ஆகவே, இப்போது நாடு ஒன்றாகிவிட்டதா அல்லது இரண்டு அரசாக, ஹஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்த்தம், என்று தனித்தனியாக இருக்கிறதா என்பதை முதலில் அறிந்து கொள்ளவே வேண்டும். அரசர் 'குற்றவாளி என தீர்மானிப்பதற்கு மட்டும் தான் ஆட்டத்தில் தோற்றவர் காடு செல்ல வேண்டும் என அறிவித்தார். வெற்றி பெற்றவர் என்ன பெறுவார் என மன்னர் அறிவிக்கவில்லையே?' என்ற வினாவை தெரிந்தே எழுப்பினேன். அதற்கு காந்தார இளவரசர் சகுனி தன் எண்ணத்தில் உள்ளதை உடனே சொல்லிவிட்டார். அது அவர் அபிப்பிராயம். ஆனால் மன்னர் இந்த ஆட்டத்தை சூதாக நினைக்கவில்லை என்று தெரிகிறது. இருவரில் எவருக்கு தண்டனை என்பதை தீர்மானிக்க இது ஒரு வழியாகக் கருதுகிறார்.

யுதிஷ்டிரன் தோல்வி மூலம், அவன் தன் நாட்டை, சகோதரர்களை பணயமாக வைத்து விளையாடியது தவறு என்றாகிறது. துரியோதனன் தோல்வி மூலம், அவன் விளையாட்டை வினையாக நினைத்து, நாடு நகரமெல்லாம் சூதின் மூலம் தன் சகோதரனிடமிருந்து வென்றுவிட்டதாக நினைப்பது தவறு என்றாகிறது.

இப்போது யுதிஷ்டிரன் ஆட்டத்தில் தோல்வியடைகிறான் என எண்ணிப் பார்ப்போம். அதன் மூலம் நாட்டை பணயமாக வைத்து ஆடியது தவறு என்றாகிறது. தண்டனையாக பதிமூன்று வருடம் வனவாசம் அனுபவிக்க வேண்டும். தண்டனைக்காலம் முடிந்ததும், யுதிஷ்டிரன் தனது நாட்டை திரும்ப பெறுவது தான் முறையாகும். தண்டனைக் காலத்தில் இந்திரப்பிரஸ்த்தம் மன்னரின் பாதுகாப்பில் இருக்கும். இப்போது அரசர் தான் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும்."

திருதராஷ்டிரன் ஒரு நொடியில் எல்லவற்றையும் புரிந்து கொண்டுவிட்டார். 'யுதிஷ்டிரன் ஜெயித்தால், மொத்தமாக நாடு முழுவதையும் அவனுக்கு கொடுத்துவிட்டு, துரியோதனன் வனவாசம் செல்ல தயாரா? இல்லை - இந்திரப்பிரஸ்த்தத்தை மட்டும் பிரச்சனைக்கு உரியதாக ஆக்கி, துரியோதனன் ஜெயித்தால், பதிமூன்று வருடம் பாண்டவர்கள் வனவாசம் முடித்து வரும் வரை, யுத்த பயமின்றி இரண்டு நாடுகளையும் ஆள்வதா? இரண்டில் ஒன்றை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்பதை விதுரன் சொல்லிவிட்டான். சகுனியும், துரியோதனனும் ஏதோ கூடிப் பேசி, 'நாடு முழுவதும் நம்முடையது; மறுமுறையும், ஏதோ சூது செய்து யுதிஷ்டிரனை வனவாசம் அனுப்பிவிடலாம்' என்று தாங்களே முடிவெடுத்து விட்டார்கள். விதுரன், 'முடிந்தால் யுதிஷ்டிரனிடம் இந்திரப்பிரஸ்த்தத்தை திரும்பக் கொடுத்துவிட்டு சமாதானமாய் போக முயற்சி செய். இல்லை சூதில் அவன் தோற்றால், பதிமூன்று அனுபவித்துவிட்டு நாட்டை திரும்பக் கொடுத்துவிடு' என்று கோடி காட்டி விட்டான்.

தவறு செய்தவரை, குற்றமிழைத்தவரை தீர்மானிப்பதற்கு சொக்கட்டான் ஆட்டம் என்று அறிவித்துவிட்டு, அதன் முடிவு தெரியுமுன்னே இந்திரப்பிரஸ்த்தம் எங்களுடையது என்று அறிவிக்க வழியில்லை. அத்துடன் அது மிகவும் ஆபத்தானதும் கூட. மொத்த இராஜ்யமும் யுதிஷ்டிரனுக்குப் போய் சேர்ந்து விடலாம். தவிர துரியோதனன், அந்த சூழ்நிலையில் காடு போவது என்பது, அவன் உடல் மட்டும் தான் காடு போகும் என்றாகிவிடும். உயிரை பீமன் கவர்ந்து கொண்டு விடுவான். ஜெயம் என்று ஏற்பட்டு மொத்த அரசும் யுதிஷ்டிரனுடையது என அறிவித்த உடனேயே, பீமன் சபையிலேயே துரியோதனனை பிணமாகத்தான் பார்க்க விழைவான்.

அதே சமயம், இந்திரப்பிரஸ்த்தம் மட்டும் பிரச்சனைக்குரியது என்று இருந்தால், துரியோதனன் தோற்றதும், பதிமூன்று வருடம் தண்டனை நான் கொடுத்திருக்கிறேன். அது முடியும் வரை ஏதும் பேசக்கூடாது எனக் கூறி, சமாதானம் செய்து, பாண்டவர்களை இந்திரப்பிரஸ்த்தத்திற்கு திரும்ப அனுப்பிவிடலாம். யுதிஷ்டிரனும் கட்டுப்படுவான், மற்ற பாண்டு புத்திரர்களையும் கட்டுப் படுத்துவான். தவிர, துரியோதனனுக்கு ஜெயம் என்றால் பாண்டவர்கள் வனவாசம் சென்று வரும் வரை ஏதும் பேச மாட்டார்கள்.

துரியோதனனும் இந்த பதிமூன்று வருடத்தில் திருந்துவானா? கெட்டது பெண்ணாலே என்று கூறி விடுவார்கள். பெண்தான் தாய் உருவத்தில், நம்மை உருவாக்கி உலகத்தில் அறிமுகப்படுத்துகிறாள். அவள்தான் நமக்கும் முதல் அறிமுகம். அதே பெண்வர்க்கம் தான் பின் மனைவி என்றாகி, வாழ்வில் பங்கு கொள்கிறாள். கெடுவது பெண்ணை மதிக்காததாலே என்று இருக்க வேண்டும். மதிப்பது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெண்ணுக்கு அடிமைப்படுவது கூடாது என எண்ணி, கடைசியில் பெண்ணை மதிக்காமல் போவது என்றாகிவிட்டது. இதற்கு மேலும், பெண்ணை அடிமைப்படுத்துவது பெரிய செயல் என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் துரியோதனனும் ஒருவன். காந்தாரியைப் போல் ஒரு பெண் தாயாக வாய்த்தும், இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?

இராஜ்யத்தை மட்டும் நினைத்திருந்தான் என்றால் பெரிய தவறு ஏதும் ஏற்பட்டிருக்காது. பெண்மையை மதிக்காததால் பெரும் தீங்கு இவனை சூழ்ந்து வருகிறது. இதிலிருந்து எவ்வளவு நாள் தப்பித்து வாழப் போகிறான்? என்னால் முடிந்ததைச் செய்கிறேன். பிறகு காலம் தான் வழிகாட்ட வேண்டும்.'

திருதராஷ்டிரன்: "சபையோர்களே! மாமந்திரி விதுரன் கூறிய வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். 'அபிப்பிராயங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன; ஆனால் முடிவு மன்னருடையது' என்று கூறினார். அரசர் யதேச்சையாக முடிவெடுப்பது என்றால், பின் பல கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. ஆக பல கருத்துகளை கேட்டு ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டியது மன்னனின் கடமை ஆகிறது.

நேற்று சபையில் நடந்தவற்றிற்கு பொறுப்பு துரியோதனனுக்கா அல்லது யுதிஷ்டிரனுக்கா என்று தீர்மானிக்கப்படுவதற்காக சொக்கட்டான் ஆட்டம் என்று தீர்மானித்தோம். அந்த தவறுகளுக்கு, குற்றங்களுக்கு தண்டனை வனவாசம் என்றும் கூறினோம். தவறான வழியில் இந்திரப்பிரஸ்த்தத்தை இந்த ஹஸ்தினாபுரத்து அரசு அடைய விழைகிறதா? என்ற கேள்வி எழலாம். இது பற்றி இங்கு கூடியிருக்கும் சான்றோர்களும் கல்விமான்களும் கருத்து தெரிவிக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, அரச குடும்பம் இரு பிரிவுகளாக பிரிந்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்று இருக்கலாம். இப்போது விதுரர் கூறியது போல் இந்திரப்பிரஸ்த்தம் யுதிஷ்டிரன் ஆளுகையிலும் இல்லை, திருதராஷ்டிர மன்னன் ஆளுகையிலும் இல்லை. சொக்கட்டான் ஆட்டம் முடிந்து, சபையில் இது தெரிய வரும்.

ஆட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்றால், தண்டனையாக பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அஞ்ஞாதவாசமும் உண்மையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதற்காக அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது வரை இந்திரப்பிரஸ்த்தம், ஹஸ்தினாபுரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். யுதிஷ்டிரன் திரும்பி வந்ததும், அவனிடம் இந்திரப் பிரஸ்த்தம் ஒப்படைக்கப்படும்.

அதே போல் துரியோதனன் தோல்வியடைந்தால் அவனும் இதே போல் வனவாசம் மேற்கொள்ள வேண்டும். தண்டனைக் காலத்தில் இளவரசன் என்ற முறையில் எந்த சலுகைகளும் தரப்படமாட்டாது. அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சில சலுகைகள் வழங்கப்படும். ஹஸ்தினாபுரத்தின் இளவரசாக யாரை முடி சூட்டுவது என்று பிறகு தீர்மானிக்கப்படும். இப்போது விதுரரே, காய்களை சோதித்து ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விதுரர் நினைக்கிறார்: 'மன்னர், முதல் நாள் பகடைக் காயில் சூது இருந்ததை உணர்ந்து இன்று உலோகத்தில் காய் செய்து ஆட அனுமதித்திருக்கிறேன் என்கிறார் போலும். அதே சமயம் துரியோதனன், "சுத்த செம்பினால் காய்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்று மட்டும் சோதித்து ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று அவசரப்பட்டான். காயை அரச குடும்பத்தின் கௌரவத்திற்கு ஏற்ப தங்கத்தினாலோ, அல்லது வெள்ளியினாலோ செய்யவில்லையே - ஏன்? முந்திக் கொண்டு துரியோதனன் செம்பு என்று சொன்னதின் மூலம் இவனுக்கு இது முன்பே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 'செம்பு என்று மட்டும்' என்று வேறு கூறினான். வேறு எதையோ மறைக்க நினைத்து என்னை மற்றது என்ன? என்று சிந்திக்க செய்துவிட்டான்.

ஆமாம்! செம்பில் துர்தேவதைகளை ஏவலாம். சகுனி எதையும் செய்யக் கூடியவர். என்னால் 'செம்பா?' என்று மட்டும் தான் சோதிக்க முடியும். யுதிஷ்டிரன் இதை அறிவானா? "தங்கள் உத்திரவு பெரியப்பா" என்று அவையில் அவன் கூறிய போது ஆட்டம் இழந்து வனவாசம் போவதற்கு முன்பாக "தாங்கள் உத்திரவு இட்டால் இப்போதே வனவாசம் போகத் தயார்" என்பது போலத்தான் அவன் மனநிலை இருக்கிறது என்று தெரிகிறது. எது எப்படியோ! நேற்று நடந்தவற்றிற்கு நேர்மாறாக, மன்னர் ஏனோ என் மூலம் அவை நடவடிக்கைகளை நடத்த தீர்மானித்து விட்டார். என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த தர்ம நியாயங்களை முன் வைத்து, இரு அரசுகளும் தனித்தனியாக செயல்பட ஒரு வழியை சொல்லிவிட்டேன்.

இப்போது துரியோதனன் தோற்றால் நல்லது. அவன் செய்த அக்கிரமங்களுக்கு, வனவாசம் ஒரு தண்டனையாய் அமையும். அதே சமயம் பல வருட வனவாசம், அவனை சிந்திக்க வைத்து நல்வழிப் படுத்தலாம். ஆண்டவன் சித்தம் எப்படியோ?"

விதுரர் (சபையிலிருந்த பொற்கொல்லரைப் பார்த்து): "சபை நடவடிக்கைகளை இதுவரை கவனித்திருப்பீர்கள். அரசர் பகடைக் காய்கள் உலோகத்தில் செய்ய உத்திரவு இடப்பட்டுள்ளது என்றார். அதே சமயம் இளவரசர் துரியோதனன், சுத்த செம்பில் செய்யப்பட்டுள்ள காய்கள் என்ற விபரத்தை தெரிவித்திருக்கிறார். அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் விளையாட பகடைக்காய்கள், சொக்குத் தங்கத்திலோ அல்லது சுத்த வெள்ளியிலோ செய்திருக்கலாம் என்று பொற்கொல்லரான தாங்கள் நினைக்கலாம். செம்பு இரு விதமாக உபயோகப்படும். துர்தேவதைகளை விரட்டும் யந்திரத் தகடுகள் செய்வதற்கும், ஆலயங்களில் புனித கங்கை நீரை அபிஷேக தீர்த்தமாய் கொண்டுவருவதற்கு குடங்கள் செய்யவும், உயர்வாய் மதித்து செம்பை உபயோகிப்பார்கள். இப்போது, பொற்கொல்லரே! இந்த காய்கள் சுத்த செம்பினால் செய்யப்பட்டவையா? என்று சோதித்து சபையில் அறிவித்து விடுங்கள்."

பொற்கொல்லர் (மனத்தினுள்): 'மகா மந்திரி விதுரர் ஒரு வார்த்தையில் காய்களை சோதித்து சொல்லும் என்று கூறியிருக்கலாம். ஒருக்கால் அரச சபை பொற்கொல்லரை பார்த்து செம்பை சோதிக்க சொல்லப்படுகிறதே என்று தான் எண்ணிவிடக் கூடாது என்று மந்திரி செம்பின் உயர் உபயோகங்களையும் எடுத்துக் கூறுகிறார் போலும். அரச கட்டளையை நிறைவேற்றுவது தான் எனது கடமை'.

யுதிஷ்டிரர் (மனத்துள்): 'சித்தப்பா, செம்பைப் பற்றி பொற்கொல்லருக்கு விபரம் கூற தேவை என்ன? இதில் எனக்கு ஏதோ சொல்ல விழைகிறார். செம்பு துர்தேவதைகளை விரட்டும். புண்ணிய தீர்த்தம் கொணர குடமாகும். இருவித உபயோகம் என்றாரே? துர்தேவதைகளை வயப்படுத்த செம்பு உபயோகமாகும் என்பதையும் யோசி என்று சொல்லாமல் சொல்கிறார். எனக்குப் புரிகிறது. நேற்று விளையாட்டில் வினையாக இரண்டு காய்களை சகுனி உபயோகப்படுத்தினார். அதை திரௌபதி அறிந்தே அழித்தாள். இன்றும் வினையாக செம்பில் செய்த காய்களை வைத்து விளையாடி வெல்ல நினைக்கிறார் சகுனி. இந்த வினையை எப்படி அழிப்பது?

நேற்று மாலை சகாதேவன், பார்வையைப் பற்றி அழகாகக் கூறினான். எதையும் கண்ணால் சரியாகப் பார்ப்பது; அதே சமயம் மற்றவர்கள் தங்கள் கண்ணில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் பார்ப்பது; கண்களால் மட்டும் பார்க்காமல் புத்தியோடு பார்ப்பது அல்லது மனத்துடன் சேர்ந்து பார்ப்பது என்று பார்வையின் இலக்கணம் சொல்வது போல், ஆல், இல், ஓடு, உடன் என்ற ஆரம்ப அடிப்படை இலக்கண உருவுகளைக் கொண்டே பெரிய உண்மையை சொல்லிவிட்டான். இப்போது நான், கண்ணால் பார்ப்பதோடு, துரியோதனன் சகுனி கண்ணில் பார்க்க வேண்டும். புத்தியோடு பார்க்க வேண்டும்; அத்தோடு மனத்துடன் பார்க்க வேண்டும்.

இதோ பொற்கொல்லர் காயை சோதித்து சபையில் அறிவித்து விட்டார். துரியோதனன், சகுனி இவர்கள் கண்ணில் பார்ப்பது அடுத்தது. துரியோதனன் கண்ணில் அபரிமித நம்பிக்கைதான் தெரிகிறது. அத்துடன் குதூகலமும் தெரிகிறது. ஆக அவன், 'நிச்சயம் யுதிஷ்டிரன் தோற்றுப் போவான், வனவாசம் செல்வான்; இந்திரப் பிரஸ்த்தம் நமது ஆளுகையில் வரும்' என்று தான் எண்ணி குதூகலிக்கிறான் என நினைக்கத் தோன்றுகிறது.

ஆசைப்பட்டவனுக்கு அவன் ஆசையை பூர்த்தி செய்தால் திருப்தி ஏற்படும். அதே சமயம் பொறாமையுள்ளவனுக்கு, எதிராளி படும் கஷ்டம் தான் திருப்தி தரும். வயிறு நிறைய உண்ணவேண்டும் என ஆசைப்படுபவனுக்கு, உண்ண உணவு அளித்தால் அவன் ஆசை நிறைவேறும். கண்ணில் திருப்தி தரும். அதே சமயம் வயிற்று வலிக்காரன் மற்றவனைப் பார்த்து பொறாமைப்பட்டால் என்ன செய்வான்? அவன் பொறாமை அடுத்தவன் உண்ணும் சோற்றில் மண்ணை அள்ளிப் போடும் அவன் குணத்திலிருந்து தெரியவரும். துரியோதனன் பார்வையைப் போல் தான் சகுனியின் பார்வையும் இருக்கிறது. ஆனால் சகுனி தன் கபடத்தை மறைப்பதற்காக நேராகவே பார்ப்பதில்லை.

சித்தப்பாவின் சொற்களை புத்தியைக் கொண்டு அறியும் போது துர்தேவதையை எதிர்பார்த்து ஆடு என்று கூறுகிறார் எனத் தெரிகிறது. இதோ, துரியோதனன் தன் சார்பில் மாமா சகுனி ஆடுவதற்கு காய்களை எடுத்துக் கொடுக்கிறான். காய்களின் பளபளப்பைப் பார்க்கும் போது, இப்போதுதான் புதிதாக உலைக் களத்திலிருந்து வந்தது போல் இருக்கிறது.'

சகுனியின் கையில் காய்கள். யுதிஷ்டிரர் மேலும் யோசிக்கிறார்: 'இப்போது மனத்தினால் பரந்தாமனை சிந்தித்து காய்களைப் பார்க்க வேண்டும். நிச்சயம் உண்மை கண்ணில் படும்.'

ஒரு நொடி கண்மூடி தியானித்து சகுனியின் கை காய்களைப் பார்க்கிறார் யுதிஷ்டிரர். துர்தேவதைகள் காயில் கட்டுண்டு இருப்பது கண்ணில் தெரிகிறது. யுதிஷ்டிரர் பார்வை பட்டதும் அந்த துர்தேவதைகளின் முகத்தில் ஒரு தெளிவு. யுதிஷ்டிரர் மனத்தால் அந்த துர்தேவதைகளுடன் பேச ஆரம்பிக்கிறார்.

யுதிஷ்டிரர்: 'ஏன் இப்படி?'

துர்தேவதைகள்: 'நாங்கள் என்ன செய்ய முடியும்? நல்ல மனிதர்களுக்கு, பட்டம் பதவி என்று வந்ததும், மமதையில் மனம் குழம்பி தவறுகள் பல செய்ய ஆரம்பிப்பது போல எங்களுக்கும், உபசாரங்கள் பலிகள் செய்ததும், மகிழ்ந்து மமதையின் காரணமாக நிலை மறந்து, கட்டுப் படுகிறோம். தேவதைகளாக இருந்த நாங்கள் துர்தேவதைகள் என்ற பட்டத்தையும் பெறுகிறோம். இப்போது சகுனி சொன்னபடி ஆடுவது தவிர வேறு வழி கிடையாது. தங்கள் பார்வை பட்டதும் கன்றிய உடலில் சற்று நிம்மதி. மனமும் அமைதி அடைகிறது. அவ்வளவுதான்.'

யுதிஷ்டிரர்: 'உங்கள் எல்லோரையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும்?'

துர்தேவதைகள்: 'எங்களை விடுவிப்பதற்கு தாங்கள் வனவாசம் போக வேண்டும்'

யுதிஷ்டிரர்: 'எனக்கு தெரிகிறது. வனவாசம் ஒரு பொருட்டு அல்ல. ஆனால் என் புண்யபலன்களைக் கொடுத்தால் சகுனி ஆடுவதற்கு முன்பே விடுதலை பெறுவீர்கள் அல்லவா?'

துர்தேவதைகள்: 'நாங்கள் நிரந்தர விடுதலை பெற தாங்கள் புண்யபலன்களை கொடுத்து உதவலாம். அதே சமயம் இதுவரை சகுனி செய்த உபசாரங்களுக்கு சகுனி ஆட்டத்தில் ஜெயம் பெற வேண்டும்; அதன் முடிவு தங்கள் வனவாசம். சகுனி தோற்றால் தன் கழுத்தை அறுத்து வைத்து விடுவதாய் கொடிய சபதம் செய்திருக்கிறார். அந்த இக்கட்டிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.'

யுதிஷ்டிரர்: 'நான் வனவாசம் போகிறேன். இந்த வனவாசத்தில் பல நன்மைகள் ஏற்படும். முதலில் நீங்கள் தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். இரண்டாவது சகுனி, பிராணத்தியாகம் செய்ய வேண்டியது இல்லை. கடைசியாக அதி முக்கியமாக சகோதரர்களை கொல்லும் பாபம் என் உடன் பிறப்புகளான, பீமனுக்கும், அர்ச்சுனனுக்கும் ஏற்படாது. தேவதைகளே, தவறாக கூறியதற்கு மன்னிக்கவும். பீமன் மட்டும் தான் சகோதரனைக் கொன்றவனாவான். அர்ச்சுனன், சகோதரன் நண்பனைக் கொன்றவனாவான். அவசரத்தில் வாக்கில் தவறாய் வந்துவிட்டது. என்னை மன்னியுங்கள்.'

துர்தேவதைகள் (மிகவும் நடுங்குகின்றன): 'தங்கள் உயர்ந்த குணத்திற்கு மன்னிப்பு தேவையில்லை.'

யுதிஷ்டிரர்: 'பின் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?'

துர்தேவதைகள்: 'தேவ ரகசியம் கண்முன் தெரிகிறது. நாங்கள் மௌனமாய் இருப்பதே சிறந்தது (கர்ணன் யுதிஷ்டிரனின் மூத்த சகோதரன் என்று தேவதைகளுக்கு தெரிகிறது)'

யுதிஷ்டிரர்: 'சொல்லக் கூடியது ஒன்றுதானா?'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே மன்னியுங்கள்! அதைச் சொல்ல எங்களுக்கு அனுமதியில்லை. தேவரகசியத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது.'

யுதிஷ்டிரர்: 'என் கண்முன்னே உள்ளவற்றையே சரியாக புரிந்து கொள்ள முடியாத போது நான் தேவ ரகசியத்தை அறிய முயல மாட்டேன். அதைப் பற்றி சிந்திக்கவும் மாட்டேன், கவலை வேண்டாம்.'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே! இந்த பெருந்தன்மைக்காகவாவது, நாங்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம் செய்யும் போது காட்டில் மரமாயும், செடி கொடிகளாயும் இருந்து சேவை செய்வோம்.'

யுதிஷ்டிரர்: 'ஆகா! உங்கள் வாக்கு சத்திய வாக்கு. விருக்ஷங்கள் என்பது உத்தமமான பிறவி. தனக்கென வாழாது, பிறர்க்காகவே வாழும் உயிர் என்பது மரங்கள் தான். எந்த இடத்தில் விதைக்கப் படுகிறதோ அந்த இடத்திலேயே, அந்த மண்ணிலேயே வளர்வது அவற்றின் பண்பு. தவிர காட்டுத்தீ வந்தாலும், நின்ற இடத்திலேயே நின்று, எரிந்து மடியுமே தவிர ஓடி ஓளிவதில்லை. அதன் கம்பீரமும், பிறந்த மண்ணின் மீது கொண்ட பற்றும் சொல்லி முடியாது. அதே போல் அதன் இலைகளை கால்நடைகளுக்கு உணவாகத் தருகிறது. எல்லோருக்கும், சுவை தரும் பழங்களையும் தருகிறது. யோகிகளும், ஞானிகளும் அந்த பழங்களை விரும்பி உண்டு மகிழ்கிறார்கள். கனி தரும் மரங்களில் பல ஜாதிகள் இருந்த போதும், அவற்றின் உத்தமமான, கனிதரும் குணத்தை ஒரு போதும் மாற்றிக் கொள்வதில்லை.

மனிதப் பிறவியை நினைத்தால் மனம் சங்கடப்படுகிறது. செய்யும் தொழிலின் காரணமாய் பல பிரிவுகளாய், ஜாதிகளாய் பிரித்து சொல்லப் பட்டாலும், உத்தமான குணங்களை விடுத்து, வீணாய் திரிகின்ற மனிதர்களை நினைத்தால், மனம் வெறுத்து வனத்தில் உள்ள மரங்கள் பால் செல்கிறது. ஏன் க்ஷத்திரியர்களை எடுத்துக் கொள்வோம் - மற்றவர்களைக் காப்பதற்கு தன் உயிரையும் தரத் தயாராக இருக்க வேண்டிய அவர்கள், யுத்தம் அல்லது துவந்தம் என்ற பெயரில் மற்றவனைக் கொல்வது க்ஷத்திரிய தர்மம் என்று கொண்டுவிட்டார்களே! இதை நினைத்து என் மனம் மிகவும் வருந்துகிறது. இதையெல்லம் நினைத்துத்தான், ஆட்டத்தில் இப்போது தோற்று வனவாசம் செல்வது என்று முடிவு செய்தேன். அதே சமயம் சகுனியின் சூதையும் முறியடிக்க வேண்டும். பிறகு வனவாசம் செல்ல வேண்டும். என்னை ஆசீர்வதியுங்கள் தேவதைகளே!'

துர்தேவதைகள்: 'முடியாத காரியத்தை செய்ய முயயலாமா? சகுனி ஆட்டத்தில் வென்றால் தான், தாங்கள் வனவாசம் செல்ல முடியும். காய் ஆடுவதற்கு முன்பே, தாங்கள் வனவாசம் என்று புறப்பட்டால் கூட அதுவும் சகுனியின் வெற்றிதான். தாங்கள் தோல்வியை ஆடும் முன்பே ஒப்புக்கொண்டு ஆடாமலேயே வனவாசம் ஏற்பதாகத்தான் சொல்லுவார்கள். எப்படியும் சகுனியின் சதுரங்க ஆட்ட வெற்றியும், தங்கள் வனவாசமும் ஒன்றாய் பின்னப்பட்டிருக்கின்றன. பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. தாங்களே ஏதாவது உபாயம் இருந்தால் சொல்லுங்களேன்.'

யுதிஷ்டிரர்: 'தேவதைகளே! வணங்குகிறேன். நிச்சயம் தங்களுக்குத் தெரியாத உபாயத்தை நான் கூற முடியாது. நீங்கள் கேட்டதனால் கூறுகிறேன். நேற்று இரவு, செம்பை உருக்க ஆரம்பித்தவுடன், சகுனி மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்து, அதன் பலனாய் தாங்கள் வெப்பத்தால் மிகவும் தாக்கப்பட்டு இருக்கிறீர்கள். சகுனி காய்களை செய்து முடித்தபின் மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். அவர் அவசரம், பிரும்ம முகூர்த்தத்திற்கு முன் காய்களின் மீது மந்திரப் பிரயோகம் முழுவதும் நடந்து விட வேண்டும் என்ற வேகம். அதன் பலனை சகுனி அனுபவித்தே ஆக வேண்டும். இப்போது சகுனி கையில் இருக்கும் பகடைக் காய்கள் இரண்டிலும் அந்த வெப்பத்தின் ஒரு பகுதியை உண்டாக்குங்கள். சகுனி அதைத் தாங்கிக் கொண்டால், அவருக்கு கட்டுப் பட்டு ஆட்டத்தில் அவர் ஜெயமடைய உதவுங்கள். சூடு பொறுக்க முடியாமல் அவர் காயை கீழே தவற விட்டால், 'மந்திர உச்சாடனம் செய்த காயைத் தவறவிட்டதால் பகடைக் காயிலிருந்து நாங்கள் விடுபடுகிறோம்' என்று கூறி வெளிவந்து விடுங்கள். மறுமுறை மந்திர உச்சாடனம் செய்து காயில் உங்களைக் கட்டுப் படுத்த உடன் அவரால் முடியாது. ஆட்டம் முடிந்து நான் வனவாசம் புறப்படும் போது என்னோடு வனத்திற்கு வாருங்க்கள்.'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே! எங்களுக்குப் புரிகிறது. நாங்கள் இதை நிச்சயம் செய்வோம்'.

சகுனி காயை கையில் முன்னும் பின்னுமாக உருட்டிக் கொண்டிருக்கிறான். காய்கள் திடீரென அதி வெப்பத்துடன் கையைச் சுடுகிறது. புத்தி ஏதும் யோசிக்கும்முன் சகுனி காயை கையிலிருந்து கீழே தவற விடுகிறான். யுதிஷ்டிரன் சட்டென இரு கைகளாலும் காயை ஏந்திக் கொள்கிறான்.

தேவதைகள் (சகுனியிடம்): 'சகுனி! நேற்று உலைக்களத்தில் உருகிய நிலையில் இருந்த செம்பில் எங்களை ஆவிர்க்குமாறு அவசரப்பட்டு மந்திர உச்சாடனம் செய்தீர்கள். அந்த வெப்பம் எங்களை மிகவும் தாக்கியது. மந்திரத்திற்கு கட்டுப்பட்டு அதைப் பொறுத்தோம். இன்று அந்த வெப்பத்தின் சிறு பகுதியை தங்களால் தாங்க முடிகிறதா என்ற சோதனையில் தோற்றுவிட்டீர். அதே சமயம் யுதிஷ்டிரர் வென்று விட்டார். அவருடைய தர்ம சிந்தனை எங்கள் மனதை குளிரச் செய்துவிட்டது. எங்களை நீங்கள் தவற விட்டதால் இனி யுதிஷ்டிரர் வேண்டினாலே தவிர திரும்ப அந்த காய்களில் புக மாட்டோம். அவையிரண்டும் இனி சாதாரண செப்புக் காய்கள் தான். ஆடித் தோற்றால் அதன் முழுப் பொறுப்பும் தங்களுடையது தான்.'

இந்த வார்த்தைகளை யுதிஷ்டிரரும் கேட்டுக் கொண்டிருந்தார்.

சகுனிக்கு மரணபயம் வந்து விட்டது. கண்களில் சவக்களை. துரியோதனனின் கொலைவாள், யுதிஷ்டிரன் கையில் இருக்கும் பகடைக் காய்களில் தெரிகிறது. இந்த வாளை, துரியோதனன் கையில் யுதிஷ்டிரன் கொடுத்து விடுவானா?

யுதிஷ்டிரர்: "சகுனி அவர்களே! 'தலைக்காய் போய் பழமாய் வருமா?' என்றா யோசிக்கிறீர்கள்? போகாமல் தலைப் பழம் வரும். நம்புங்கள்" என்று சகுனிக்கு மட்டும் கேட்கும் படி கூறி கைகளில் இருந்த காய்களில் ஒன்றை மட்டும் எடுத்து மேல் கீழாய் மாற்றி வைக்கிறார்.

சகுனி யோசிக்கிறான்: 'இப்போது இந்த தேவதைகள் அவையில் இருப்பவர்களோடு இன்னுமொரு சாட்சி, அவ்வளவுதான். இனி உபகாரம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், யுதிஷ்டிரன் ஏவினால் தான் செய்வோம் என்றும் தெளிவாய் கூறி விட்டன. இப்போது வெற்றி என்பது நிச்சயமல்ல. தேவதைகள் யுதிஷ்டிரன் சொற்படி ஆடுவதென்றால், யுதிஷ்டிரன் வெற்றி நிச்சயம். நான் தோற்ற அடுத்த கணம், முரடன் துரியோதனன் என் தலையை தனியாக எடுத்து மரியாதை செய்து விடுவான்; தேவதைகள் முன் செய்த சபதத்தை நான் நிறைவேற்ற வேண்டியது இல்லை. அவசரத்தில் தேவதைகளை நான் கொடுமைப் படுத்தி விட்டேன். பதிலுக்கு அவைகள் என்னை சோதித்து அதில் நான் தோற்றதோடு, யுதிஷ்டிரன் வென்று விட்டான் என்று தேவதைகள் தெரிவித்துவிட்டன.

இப்போது என் உயிர் யுதிஷ்டிரன் கைப்பிடிக்குள். காயை மாற்றி ஏதோ சொன்னானே! தலைக்காய் போய் பழமாய் வருமா? தலை போகாமல் பழம் வரும் என்று நம்புங்கள் என்கிறானோ? யுதிஷ்டிரனை நம்பினால் தலை தப்புமா? காய் தலை மாற்றி போட்டால் தலை போய் காய் பழமாகுமா? அப்படியானால் தலை போகாமல் பழம் வரும். ஆகா! யுதிஷ்டிரன் சொல்லி விட்டான் - சகுனி உன் தலை தப்பும்; என்னை நம்பு. என் தலை தப்புவதற்கு ஆட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்க வேண்டும். என்னால் ஏதும் செய்ய முடியாது. யுதிஷ்டிரன் கையில் காய்கள்! தேவதைகளும் யுதிஷ்டிரன் ஏவினால் நாங்கள் ஏதும் செய்வோம் என்று சொல்லுகின்றன. என்னை நம்பு என்கிறானே! துரியோதனனிடமிருந்து நிச்சயம் என்னைக் காப்பாற்றுவான்.

யுதிஷ்டிரனிடம் நேரிடையாக ஏதும் பேச முடியாது. நான் செய்த மந்திர, உபசார பலன், தேவதைகள் இன்னமும் என் காதில் பேசுகின்றன. அவற்றிடம் சொன்னால் யுதிஷ்டிரனிடம் சொல்லலாம். ஐயகோ! யுதிஷ்டிரனிடம் உயிர் பிச்சை கேட்க வேண்டிய நிலை வந்து விட்டதே!! ஓ! தேவதைகளே! நான் நேற்று செய்த தவறு, இன்று என் உயிருக்கு எமனாக வந்து விட்டதே. நான் காயை தவற விட்ட போதே, விட்டு விலகி விட்டோம் என்று கூறி விட்டீர்கள். எது எப்படியோ, என் சாவுக்கு காரணம் நீங்கள் தான். துரியோதனன் என் கழுத்தை அறுத்தால் என்ன? அதை நீங்கள் விலகி நின்று பார்த்தால் என்ன?'

தேவதைகள்: 'கேட்கும் முன் கொடுப்பவன் கடவுள் மட்டும் தான். அதே போல் யுதிஷ்டிரன் நீ கேட்கும் முன் உனக்கு உயிர் பிச்சை கொடுத்து விட்டான்'.

சகுனி (உடனே மனத்தில் சந்தோஷத்துடன்): "ஆட்டத்தில் நான் ஜெயிப்பேனா?"

தேவதைகள்: "உன் கெட்ட புத்தி! சாவின் பிடியிலிருந்து தப்பிக்க வழியிருக்கிறது என்ற உடனேயே மனத்தில் மமதையுடன் ஜெயம் எனக்கு என்று பேச ஆரம்பித்துவிட்டாயே சகுனி! உன் தோல்வியின் முடிவு எப்போதோ தெரிந்து விட்டது. கையில் காயை ஏந்திய போதே யுதிஷ்டிரன் ஜெயித்து விட்டான். அதன் பலன் தான் நீ உயிருடன் இருப்பது. உன் உயிருக்கு உத்திரவாதம் என்ற வாக்கின் படி யுதிஷ்டிரன் விளையாடுகிறான். சகுனி! உனக்கு தர்ம நியாயங்கள் மனத்தில் எட்டாது. ஏனென்றால், எல்லாவற்றையும் புத்தியினால் மட்டுமே பார்ப்பவன் நீ. பிறரையும் நீ நினைக்கும் புத்திசாலித்தனத்தினால் மட்டும் எடைபோடும் குணம் உன்னுடையது. அடுத்தவர் மனம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிய உனக்குத் தெரியாது. ஏனென்றால் உனக்கு மனத்தினால் சிந்திக்கத் தெரியாது. இப்போது யுதிஷ்டிரன் காயை கொடுக்கப் போகிறான். மறுபேச்சு ஏதும் பேசாமல் ஆடு. எமன் வாயில் வரை வந்து விட்ட சில உயிர்களை, பதிமூன்று வருட இடைவெளிக்கு நகர்த்திச் செல்ல யுதிஷ்டிரன் முன்பே தீர்மானித்துவிட்டான். அவற்றுள் உன் உயிரும் ஒன்று."

யுதிஷ்டிரன் சகுனியின் கைகளில் காயை கொடுத்து "ஆடுங்கள்" என்று கூறுகிறான். காய்கள் பனிபடர்ந்த பழங்கள் போல் குளிர்ந்து காணப்படுகின்றன.

சகுனி யோசிக்கிறான்: 'நான் யார் சார்பில் ஆடுகிறேன்? துரியோதனன் சார்பில் ஆடுகிறேனா? இல்லை யுதிஷ்டிரன் சார்பில் ஆடுகிறேனா? என்னைக் காத்துக் கொள்ள முடியாத நான், அபயம் அளித்த யுதிஷ்டிரன் சார்பில் தான் விளையாடுகிறேன். இது எனக்குத் தெரிந்துவிட்டது.'

சகுனி (ஏதோ எண்ணத்தில்): "எனக்கு ஒன்றுதான் தெரிகிறது."

யுதிஷ்டிரர்: "தங்கள் எண்ணிக்கை ஒன்று. அவ்வளவுதானே! நீங்கள் ஆடலாம்". யுதிஷ்டிரர் மனத்துள், 'தேவதைகளே! பகடை ஒன்றைக் கொடுங்கள்'.

சகுனி காயை உருட்டுகிறான். பகடை ஒன்று.

யார் ஜெயித்தார்கள்? யார் தோற்றார்கள்? யாருக்கும் தெரியாது! எல்லோரும் பகடை ஒன்று என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரும் சொல்வதற்கு முன்பு, சட்டென சகுனி எழுந்து, காய்கள் இரண்டையும் எடுத்து யுதிஷ்டிரன் கைகளைப் பற்றி கொடுக்கிறான். சகுனி யுதிஷ்டிரனின் கைகளை அழுந்தப் பற்றி, தன் கைகளால் நன்றியை ஒரு நொடியில் தெரிவித்துவிட்டான்.

நடந்ததைப் பார்த்த துரியோதனன் நினைக்கிறான்: 'மாமா சகுனி, ஆட்டத்தில் ஒன்று பெற்று வென்று விட்டார். யுதிஷ்டிரன் பல வருட வனவாசம் செய்யும் போது 'எப்படி இழந்தோம்?' என்பதை தினம் நினைத்துப் பார்ப்பதற்காக, காய்கள் இரண்டையும் ஏக உபசாரத்துடன் கொடுப்பதுபோல் யுதிஷ்டிரன் கைகளில் எழுந்து நின்று கொடுத்துவிட்டார். இனி இந்திரப்பிரஸ்தமும் நம்முடையது. பாண்டவர்கள் வாசம் வனவாசம்தான்.' சந்தோஷம் பொங்குகிறது அவன் மனத்தில்.

கர்ணன் நினைக்கிறான்: 'நேற்று திரௌபதி இரண்டு வித காய்களையும், அஸ்திரம் என்று கூறி முறியடித்தாள். இன்று, யுதிஷ்டிரன் இதை எதிர்பார்த்தேதான் வந்திருக்க வேண்டும். நடுவில் சகுனி காய்களை கைகளிலிருந்து தவற விட்டார். ஏதோ பொறுக்க முடியாமல் அவசரமாய் காய்களைப் போடப் போனார். அதே சமயம் யுதிஷ்டிரன் இதை எதிர்பார்த்தே இருந்தது போல், சட்டென காய்களை கையில் ஏந்தி விட்டான். மாமா சகுனியின் சூது, அவர் கைகளையே சுட்டு விட்டதோ? பின் யுதிஷ்டிரனை அது சுடவில்லை! ஏன், அவன் பொறுமை, அவன் தர்ம குணம் அவனைக் காக்கிறதோ?'

திருதராஷ்டிரன்: 'நேற்று காயில் சூது இருந்தது என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இன்று உலோகக் காய் என்று பொதுவாக சொல்லி, 'சோதியுங்கள்' என்று மாமேதையான விதுரனைக் கேட்டேன். துரியோதனன் செம்பு என்று சொல்லி, விதுரன் செம்பைப் பற்றி சிறிது சிந்தி என்று யுதிஷ்டிரனுக்கு கோடி காட்டி விட்டான். இருந்த போதும் "பகடை ஒன்று" என்று சகுனி கேட்டு பாண்டவர்கள் வனவாசத்தை உறுதி செய்து விட்டான்.

என்னால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. யுதிஷ்டிரன் உண்மையில் ஆட்டத்தில் தோற்றானா? இல்லை, இந்த வழியை தானே தேர்ந்தெடுத்தானா? எது எப்படியோ, இன்னும் பல வருடம் இடைவெளி! யுதிஷ்டிரன் பதிமூன்று வருடங்களுக்கு எதையோ ஒத்திப் போட்டு விட்டான். எதை, யாருக்காக, எதற்காக, எப்படி என்று ஏதும் புரியவில்லை.'

விதுரர் நினைக்கிறார்: 'என்னால் முடிந்த வரை யுதிஷ்டிரனை எச்சரித்து விட்டேன். சகுனியுடன் துரியோதனன் சேர்ந்து, சூது ஏதோ செய்திருக்க வேண்டும். நடந்தவற்றை வைத்து பார்க்கையில், யுதிஷ்டிரன் தெரிந்தே தேர்ந்தெடுத்து வனவாசம் செல்லுவது என்று தீர்மானித்து விட்டான் எனத் தோன்றுகிறது. ஏன்? எதற்காக யுதிஷ்டிரன் இந்த முடிவை செய்தான்? சூது எப்போதும் வெல்லுமா? பகடைக் காய்களை எடுத்து சகுனி மிக மரியாதையுடன் எழுந்து நின்று கொடுத்தார். உண்மையில் சகுனி வெற்றி பெற்றிருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டார். எதையோ கவனிக்கத் தவறி விட்டேன். நடுவில் யுதிஷ்டிரனின் கைகளில் இந்த காய்கள் இரண்டும் இருந்தன. சகுனி ஏன் கொடுத்தான்? எப்படிக் கொடுத்தான்? அதை கவனித்திருந்தால் எனக்கு எல்லாம் சரியாக புரிந்திருக்கும். இது யுதிஷ்டிரனின் வெற்றியா என்ன?'

யுதிஷ்டிரர் நினைக்கிறார்:

'நேற்று காலை முதல் இன்று மாலை வருவதற்குள் காலச்சக்கரச் சுழற்சியில், மாமன்னன் யுதிஷ்டிரன் என்ற நிலையிலிருந்து மாறி சூதாடி யுதிஷ்டிரன் என்ற பெயர் எனக்கு பாமரர் பலராலும் தரப்பட்டு விட்டது. இது பற்றி சிறிதும் வருத்தம் கூடாது. ஏனென்றால் பிறர் எதிரிபார்ப்புகளுக்காக மட்டும் வாழ்வது என்றால் முடிவே கிடையாது. தன் வழியை தானே அமைத்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் பிறர் நடந்து கொள்ளும் விதம், அது எப்படி இருந்தாலும் சரி, நமக்கு நல் வழியில் நடக்க உதவியாக இருக்கும்.

ஏன்? இந்த சொக்கட்டான் சூதில், நாடு நகரம் என்று எல்லாம் இழந்து, அற்ப பொறாமை, அழிவுப் பேராசை கொண்ட துரியோதனன் செய்த அவமானங்களையும் பொறுத்து, பன்னிரண்டு வருட வனவாசம் ஒரு வருட அஞ்ஞாத வாசம் என்று ஏற்ற என்னைப் பார்த்து இவர்கள் அறிவது என்ன? இருட்டில் முன்னே நடப்பவன் பின்னால் தொடர்ந்து வருபவனுக்கு வழிகாட்டி என்று சொல்வார்கள். அதன் கருத்து என்ன? முன்னால் நடப்பவன் தடுக்கி விழுந்தால் பின் தொடர்பவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் சூது என்னும் பாழ் இருட்டில் சிக்கி, பதிமூன்று வருட வனவாசம் அடைந்தேன். இதை சரியாக பார்த்து சிந்தித்தால் பாமரர்கள் என்ன, அரசர்கள் பலரும் சூதின் கொடுமையை உணர வழியுண்டு. இதை நான் எடுத்துச் சொல்ல முடியாது! அனைவரும் உணர வேண்டும்.

போகட்டும், சகுனி இனி சொக்கட்டான் காய்களை வைத்து சூது ஆட மாட்டார். சற்று முன், காய் இரண்டையும் என் கையில் எழுந்து வந்து கொடுக்கும் போது காதோடு காதாய் "இனி காய் ஆடமாட்டேன்; இது சத்தியம்" என்றார்.

காய் ஆடுவது குற்றம் அல்ல. சூது ஆடுவது, சூது செய்வது தவிர்க்க வேண்டும். ஏன்? தாங்கள் இப்போது என்னிடம் கொடுத்த இந்த காய்களைத்தான் இனி நான் சொக்கட்டான் ஆட உபயோகிக்கப் போகிறேன் என்று சொன்னேன். சகுனியும் "இனி சூது ஆடேன்!" என்றார். அது போதும்.

நேற்று துரியோதனன் கண்களில் விரிந்து கிடந்த பேராசை என்னும் திரையின் பின்னால் சகுனியின் சூதை பார்க்காமல் விட்டது தவறு. "மாமன்னனாய் இருக்கும் என்னை யாரும் ஏதும் செய்துவிட முடியாது" என்ற மமதையோ என்னவோ, அது நாடு, நகரம் இழக்கும் சறுக்கலில் கொண்டு போய் விட்டுவிட்டது.

நாட்டை பதிமூன்று வருடம் இழந்து இருப்பதில் எனக்கு துளியும் வருத்தம் இல்லை. செய்த தவறுக்கு இந்த தண்டனை தேவைதான். எப்படியெல்லாம் பெரியப்பாவும், தன் பங்கிற்கு துரியோதனனும் சகுனியும் நடந்து கொண்டதற்கு துணை போக இருந்தார்!

சூதாடியது தவறு என்ற வார்த்தையையும், பன்னிரண்டு வருட வனவாசம் தண்டனை என்பதையும், முன்னும் பின்னுமாக குழப்பி, "நாடு இழந்தது இழந்ததுதான்" என்று இவர்கள் கூறிய கூற்றை சித்தப்பா விதுரர், மன்னர் வாய் வழியாகவே, "சூதாடியதற்கு தண்டனை வனவாசம்; அது முடிந்ததும் நாட்டை திரும்ப தந்துவிட வேண்டும்" என்று ஒரு நீதியை எடுத்து வைத்து விட்டார்.

அப்படி அவர் செய்யவில்லை என்றால் பல தேசங்கள் உருவாவதற்கும், பலர் பெரும் தனவந்தர்கள் ஆவதற்கும், "சூதுதான் வழி" என்ற நிலை வந்துவிடலாம். மகாத்மா விதுரர், இது தவறான அணுகுமுறை என்பதை நொடியில் மன்னர் திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்லி, மன்னர் மகன் மேல் கொண்ட பாசத்தின் விளைவாய், அரச தர்மத்தையே அழித்து விடாமல், செயல்பட செய்துவிட்டார்.

கொல்லாமை உயர் தர்மம். அதுவும் சகோதரர்களுக்கு இடையே, விரோதமும் குரோதமும் ஏற்பட்டு, நாட்டிற்காக, மன்னராக வாழ்வதற்காக என்று சகோதரர்களையே கொல்வது என்பது மிக மிக அவமானம். துரியோதனன் இதுவரை செய்ததை பொறுத்தோம். ஆனால் அவன் பாஞ்சாலியிடம் நடந்து கொண்ட முறை பொறுக்க முடியாதது. அவனுக்கு பெரியப்ப தகுந்த தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அரசர் என்ற முறையில் தவறி விட்டார். நீதி தவறிய இந்த அரசு நிலைக்காது, காலம் அதன் போக்கில் வழி சொல்லட்டும்.

தண்டனை பதிமூன்று வருட இடைவெளி. இதை முழுவதும் அறிந்தே தேர்ந்தெடுத்தேன். பதிமூன்று வருட காலத்தில் ஏதும் நிகழலாம். துரியோதனனோ, அல்லது பீமனோ, ஏன் இப்போது இங்கு இதில் சம்பந்தப்பட்ட பலருமோ மீளா உறக்கத்தை அடையலாம். எனக்கென்னவோ துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற வார்த்தைபோல், துரியோதனனிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே சரி என்று தோன்றுகிறது. ஆனால் அது க்ஷத்திரியர்களின் கடமையோ அல்லது தர்மமோ அல்ல என்று சொல்லலாம். பல வருட இடைவெளிக்குப் பிறகும் பாண்டவர்கள் தான் துரியோதனனுக்கு தண்டனை தரவேண்டும் என்றிருந்தால் அதை என்னால் தடுக்க முடியாது.

மனிதன் பிறக்கும் போது பிரும்மனின் சிடுஷ்டி சூத்திரத்தின் படி அந்த சூத்திரத்தை உள்ளடக்கி, சூத்திரனாகப் பிறக்கிறான். அந்த சூத்திரத்தின் துணை கொண்டு, பகுத்து அறிந்து, தனக்காகவும், தன் சுற்றத்தாருக்காகவும், தன்னை சுற்றியுள்ளவர்களுக்காகவும், தன தான்யத்தை விருத்தி செய்து வைசியன் என்று ஆகிறான். தனதான்யத்தை விருத்தி செய்தால் மட்டும் போதுமா? அவற்றைக் காப்பதும் கடமையல்லவா? அப்படிக் காக்கும் போது க்ஷத்திரியன் ஆகிறான். உழைத்து நல்வழியில் பொருள் ஈட்டி வாழும் முறை தவறி, பிறர் தேடிய பொருள்களை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் தாழ்ந்த குணமுடைய மனிதர்களிடமிருந்து காப்பது என்பது க்ஷத்திரியர் கடமையாகிறது. இதில் பல்வேறு நிலைகளையும் உணர்ந்து, பலரும் நல்வழியில் நடந்து பொருளீட்டி வாழும் போது, சிலர் மட்டும் ஏன் தவறான முறையில் பிறர் பொருளை அபகரிக்க முயல்கிறார்கள் என்பதை சிந்திக்க, அந்த மனிதனுக்கு பிரம்ம ஞானம் வருகிறது. அவன் பிராமணன் ஆகிறான்.

ஆக மனிதனின் பல நிலைகள் தான் இந்தப் பிரிவுகள். இதை முழுவதும் உணர்ந்தவனே ஞானி. இந்த ஜாதிப்பிரிவுகள் எல்லாம் நாடகத்தில் போடப்படும் வேஷங்கள் போலத்தான். எந்த வேஷமானாலும் எல்லோரும் நடிகர்கள் தான். ஆமாம்! எல்லா மனிதர்களும் இதை உணர வேண்டும்.

மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறப்பால் கிடையாது. தன் நிலை உணராதவன், தன் கடமையை உணராதவன், தாழ்ந்த குணம் பெற்று தாழ்ந்த நிலையை அடைகிறான். பலராலும் எள்ளி நகையாடப்படுகிறான்.

அங்க தேசத்து மன்னன் கர்ணன் கூட அப்படித்தான்; தன் நிலையை அவன் உணரவில்லை. தன் கடமைகளையும் உணரவில்லை. துரியோதனன் பால் கொண்ட விசித்திரமான பிரேமை, அவனை துரியோதனனின் அடிமையாகச் செய்து விட்டது. இதையே பாஞ்சாலியும் அங்க தேசத்து முதல் அடிமை என்று சுருக்கமாய் சொல்லி விட்டாள்.

எப்போது உயர் க்ஷத்திரிய தர்மத்தை தவற விட்டானோ, அப்போதே கர்ணன் தன் நிலை தாழ்ந்தவனாகிறான். ஆனால் இவர்கள் எல்லோரும் போராடுவது, பிறரை யுத்தம் அல்லது துவந்தம் செய்து வெல்வது மட்டும் தான் க்ஷத்திரிய தர்மம், வீரம் என்று எண்ணுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும், பிரும்ம சூத்திரம் தன்னுள் அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து தான் ஒரு சூத்திரன் என்று உணர வேண்டும். அதை உணர்ந்த மாத்திரத்தில் அவனே பிரும்ம ஞானி ஆகிறான். உலக வாழ்க்கைக்கு பொன், பொருள் ஈட்டி, காத்து, பகிர்ந்து, வழங்கி வரும் போது வைசியன், க்ஷத்திரியன் என்று ஆகிறான். இவை ஒரு நிலை. உடல் அழியக் கூடியது. தேடிய பொருள்களும் காலத்தில் கடந்து நிற்கப் போவது இல்லை. பிறவிகளின் சுழற்சியும், பொருள்கள் புதிது புதிதாகத் தோன்றி, பழையனவாகி, அழிந்து மண்ணோடு மண்ணாவது தான் உண்மை, என்பதையும் உணர்ந்த மாத்திரத்தில் பிரும்மத்தை அடையும் வழியைக் காண்கிறான்.

இந்த நிலைகளை, நான்கு வகை நிலைகளை தன்னுள் அடக்கியிருப்பதை மனிதர்கள் மறந்துவிட்டார்கள் போலும். ஆனால் மாபெரும் ஞானிகள் இதை மறக்கவில்லை. "வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி" என்ற வாக்குக்கு என்ன பொருள்? விஸ்வாமித்திர மகரிஷி கோப தாபங்களைக் கடந்து "தான்" என்னும் அகந்தை, மமதை எள்ளளவும் இல்லாது உயர் நிலையை அடையும் போது வசிஷ்டர் பிரும்மரிஷி என்று அழைத்தார். அப்படி அழைக்கப்படும் போது அந்த பட்டம் விஸ்வாமித்திரருக்கு தேவையாய் இருந்ததா? விஸ்வாமித்திரர் அதை எப்படி எதிர்கொண்டிருப்பார்? பிரும்மரிஷியான பின் அவர் எல்லாம் கடந்த நிலையைத் தான் அடைந்திருப்பார்.

இந்த மனிதர்கள் எல்லோரும் எப்படி அழைக்கப்பட்டாலும் சரி, பரம் பொருளாய் உள்ள பரந்தாமனை சுற்றி வரும் வட்டத்தில் உள்ளவர்கள். தான் ஓடும் பாதையை சற்று மறந்து உள்ளே பார்த்தால் அவர்கள் பரந்தாமனைக் காண முடியும். வட்டப் பாதையில் யார் எங்கிருந்தாலும், எல்லோரும் பரந்தாமனிடமிருந்து ஒரே தூரத்தில் தான் சுற்றி வருகிறார்கள். ஆக இவர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை. ஆமாம்! பரந்தாமனை சிந்திக்க ஆரம்பித்த நொடியில் எல்லோரும் ஒன்றுதான்.

நாடகத்தில் மன்னன் வேடம் போடுபவன் பகட்டான ஆடை அணிகலனோடு ஆசனத்தில் அமர வேண்டும். அதே சமயம் பெரும் தனவந்தனான ஒருவன், சேவகனாக வேடமிட்டால் மிக சாதாரணமான உடையுடன் தான் வருவான். "என்னிடம் சரிகை பட்டாடை உள்ளது; நான் அதைத்தான் உடுத்தி வருவேன்" என்று அந்த தனவந்தன் கூற முடியாது. அப்படி வந்தான் நாடகம் சோபிக்காது. அதே சமயம், ஆடை அணிகலங்களுக்கு மேலாக, அவன் எந்த சிறு வேடம் தாங்கினாலும், அவன் நடிப்பிற்கு மதிப்பு உண்டு.

அதே போல், வாழ்க்கையில் மனிதன் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, அவன் எந்த பிரிவை சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, பரம் பொருளை மனத்தில் கொண்டு, தன் கடமையை மட்டு சரி வர செய்து, பலனைத் தான் அனுபவிக்க வேண்டும் என்றெண்ணாது, பலன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற அபிலாஷை ஏதுமில்ல்லது வாழ்ந்தால், அவனே உயர் குணம் உடைய தர்ம நெறியுடைய மனிதனாவான்.

இதை அந்த பரந்தாமனே, தானே நேரில் வந்து, தன் வாயால் சொன்னாலும், இவர்கள் மௌடீகத்தை விட்டு கடமை என்ன என்று உணர்ந்து செயல்பட்டு, பலன் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று உணர்வார்களா?'

'யுதிஷ்டிரர் தன் நிலை மறந்து, சூதாட்டத்தில் எல்லாம் இழந்து வனவாசம் சென்றார்', என பலரும் எண்ணிய நேரத்தில் தன் தவறுக்கு இந்த தண்டனை சரிதான் என்ற மன நிறைவுடன், கொல்லாமை மிக உயர்ந்த தர்மம்; துரியோதனன், சகுனி சூதிற்கு மன்னர் திருதராஷ்டிரர் துணை போயும் போகாமலும் இருந்து, பல வருட இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்து விட்டதை நினைத்து வனவாசம் மேற்கொண்டார் யுதிஷ்டிரர்.

'தர்மம் வெல்லும்' என்ற கூற்றுப்படி, பின் யுத்தத்தில் பாண்டு புத்திரர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் பட்டாபிஷேகத்துடன் இந்த இதிகாசம் நிறைவு பெற்றது, நாம் அறிந்தது தான்.


முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

வெள்ளி, டிசம்பர் 02, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - ஐந்து

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும்

பகுதி ஐந்து

முதல் நாள் மாலை அரச அவையை விட்டு பாண்டவர்கள் வெளியேறியது பற்றி சற்று பார்ப்போம்.

யுதிஷ்டிரர் முன் செல்ல பின் தொடர்கிறாள் பாஞ்சாலி. அவள் இருபுறமும் பீமனும், அர்ச்சுனனும் செல்கிறார்கள். நகுல ச்காதேவர்கள் பாஞ்சாலியை பின் தொடர்கிறார்கள்.

அவர்கள் தங்குமிடத்திற்கு வந்ததும், யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்கிறார். பீமனும், அர்ச்சுனனும், நகுல ச்காதேவர்களும் இருபுறமும் உள்ள ஆசனங்களில் அமர்கிறார்கள். திரௌபதி நடுவில் நிற்கிறாள்.

அர்ச்சுனன் பீமனைப் பார்த்து ஏதோ பேச விழைகிறான். யுதிஷ்டிரர் சைகையினால் சற்று பொறு என்று கூறி "பாஞ்சாலி! வெகு நேரமாக நின்று கொண்டிருந்தாயே. சற்று அமர்ந்து கொள்ளலாமே?"

திரௌபதி: "சரி பாண்டு புத்திரரே! என்னால் முடிந்த வரை நிற்கிறேன். முடியாத போது தரையில் தான் உட்காருவேன். இங்குள்ள ஆசனங்களைப் பார்த்ததும், பாபி துரியோதனன் நண்பன் கர்ணன் 'பட்டு மெத்தை சுகம் பிறகு கிடைக்காது’ என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது. மன்னிக்க வேண்டும்".

யுதிஷ்டிரர் பதில் ஏதும் கூற விழையவில்லை. அவர் அர்ச்சுனனை பார்த்து 'ஏதோ பீமனிடம் கேட்க விரும்பினாயே? கேள்' என்று கண்ணால் பேச,

அர்ச்சுனன்: "சகோதரர் பீமன் கதையை தோளிலிருந்து கீழே வைக்கவில்லையே என்று கேட்க நினைத்தேன், பதில் தெரிந்துவிட்டது".

யுதிஷ்டிரன் என்ன பதில் என்று கண்ணாலேயே கேட்கிறார்.

அர்ச்சுனன்: "நான் கேட்டால் 'என் கதை துரியோதனின் துடையில் தான் இறங்குவேன் என அடம்பிடிக்கிறது என்பார். (பீமன் பக்கம் திரும்பி) என்ன? நான் கூறுவது சரிதானா?"

பீமன்: "புரிந்தவரை சரி தான். அண்ணா என்ன சொல்கிறார் என்று கேட்போம். பாஞ்சாலி சற்று தரையில் உட்கார். நீ நடுவில் இருப்பது எங்கள் எல்லோருக்கும் நல்லது."

பாஞ்சாலி நடுவில் வந்து அமர சற்று இறுக்கம் குறைகிறது ஐவர் மனத்திலும்.

யுதிஷ்டிரர்: "சகாதேவா! ஏதோ சொல்ல வேண்டும் என நினைக்கிறாய் போல் தெரிகிறதே?"

சகாதேவன்: "தாங்கள் சொல்ல நினைக்காததை சொல்ல எனக்கு அனுமதி உண்டா? இன்று சபையில் நடந்தவற்றை நாம் எல்லோரும் பார்த்தோமா? யார் யார் எப்படிப் பார்த்தார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டால், நாளை சபையில் நடக்கவிருப்பதை எதிர் கொள்ளமுடியும்."

பீமன்: "நான் பார்த்ததை மறுமுறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீ, நாங்கள் பார்க்காததை, பார்த்து அதைச் சொல்ல விரும்புகிறாய் போல் தெரிகிறது. முதலில் நீ சொல்".

சகாதேவன்: " சரி! (சற்று யோசனையுடன்). பார்வை என்பது விசித்திரமானது. நல்ல மனம் கொண்டவர்கள் பார்வை நம்மீது பட்டால், அதுவே நமக்கு சுகந்தம். கபடமானவர்கள் பார்வையைப் பற்றி பேசவே வெண்டாம். இன்று அரச சபையில் முதலில் துரியோதனன், யுதிஷ்டிரரைப் பார்த்தான். பின் அண்ணா அவனைப் பார்த்தார். இதை நான் பார்த்தேன். அர்ச்சுனனும் பார்த்தான்"

பீமன்: (குறுக்கிட்டு) "சகாதேவா! நானும் பார்த்தேன். நகுலனும் பார்த்தான். தயவு செய்து நீ என்ன பார்த்தாய் என்பதைச் சொல்".

யுதிஷ்டிரர்: "சகாதேவா! பீமனின் பொறுமையை சோதிக்காதே"

சகாதேவன்: "மன்னிக்க வேண்டும் சகோதரரே! இதோ கூறுகிறேன்".

ச்காதேவன் சற்று நிமிர்ந்து இரு கைகளையும் இரு கால்களின் மீது வைத்துக் கொண்டு கண்மூடி சொல்ல ஆரம்பிக்கிறான். அவன் ஆரம்பித்த விதம் ஏதோ நிமித்தக்காரன் குறி சொல்ல ஆரம்பிப்பது போல இருக்கிறது.

"இதோ, யுதிஷ்டிரர் சொக்கட்டான் மேடையில் துரியோதனுக்கு நேர் எதிர்புறம் அமர்கிறார். துரியோதனனின் கண்களில் தெரியும் ஆசை அவருக்கு தெரிகிறது. அவருக்கு, துரியோதன் மீது பச்சாதாபம்தான் வருகிறது. இவன் ஏன் பல நாள் பட்டினி கிடந்தவன் அன்னத்தைக் கண்டதும், கண்கள் விரிந்து, பார்வையினாலேயே உண்ண முயலுவது போலக் காணப்படுகிறான்? அரச குடும்பத்தை சேர்ந்த இவன், விருந்துக்குப் பின் விளையாட்டாய் சொக்கட்டான் ஆடி வந்த இவன், ஏன் இப்படி இருக்கிறான்?

இதோ கழுத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த முத்து மாலையை சூதில் தோற்றது போலக் கொடுப்போம். ஆகா! கொடுக்க கொடுக்க, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வார்க்கும் நெய் அதை இன்னும் வளர்ப்பது போல இவன் பேராசை வளர்கிறது. இவன் கண்கள் ஏன் ஒரு பாழ்வெளி போல் எதைக் கொடுத்தாலும் திருப்தி அடையவில்லை. பாழும் கிணற்றில் மேலும் மேலும் கல்லையும் மண்ணையும் கொட்டினால் எப்படியும் அது தூர்ந்து போய்விடும். ஆனால் இவன் மனம் திருப்தி அடையாது போல் தெரிகிறதே! இன்னம் பொன் பொருளோடு கூட, எனது இராஜ்யத்தின் சில கிராமங்கள், பல கிராமங்கள் என்று கொடுத்தும், மேலும், மேலும் கேட்கிறானே! என் இராஜ்யம் முழுவதும் கொடுத்தாலும் இவன் அமைதி அடைவானா?

விளையாட்டுதானே, கொடுக்கிறேன் என்று சொன்னதும், இவன் திருப்தி அடைவானா? இராஜ்யத்தையும் கேட்டான், கொடுத்தேன். மேலும் சகுல சகாதேவனையும் கேட்டான், கொடுத்தேன். பின் அர்ச்சுனனையும் பீமனையும் கேட்டான், கொடுத்தேன். ஏன் என்னையும் கேட்டான், விளையாட்டில் எல்லாம் கொடுத்தேன். திரௌபதியையும் கொடு என்றான், சரி என்றேன்.

விளையாட்டில் என்னிடம் ஏதும் இல்லை என்ற நிலையிலாவது இவன் திருப்தி அடைந்தானா? இல்லையே! விளையாட்டை வினையாக நினைத்து, திரௌபதியை தாசி என்றழைத்து, தன் தாயின் கோபத்தையும் அல்லவா மேலும் சம்பாதித்துக் கொண்டான்!

இவன் மனம் ஒரு பாழும் கிணறு; இதில் கல்லும் மண்ணும் இட்டு நிரப்பப் பார்த்தேனே? இல்லை, இவன் பேராசை என்னும் நெருப்பிற்கு, என் பொன் பொருள் என்று எல்லாவற்றையும் நெய்யாக ஊற்றி விட்டேனா? இதில் விளையாட்டு எது வரை? வினை எப்போது ஆரம்பித்தது? இதில் துரியோதனன் பங்கு என்ன? என் பங்கு என்ன? விளையாட்டோ, வினையோ, எல்லாம் என்னுடையது என்று சபையில் இவன் கூற, இல்லோரும் மௌனமாக இருந்தார்கள். ஆக, வந்தவரை ஆதாயம் என்று இவன் இருந்து விட்டான்.

ஆனால், தன் தாய்க்கு சமமான பாஞ்சாலியை, இவன் தாசி என்று விளித்து சபையில் நடந்து கொண்ட விதம் மன்னிக்கக் கூடியது இல்லைதான். தர்மத்திற்கு இவ்வளவு சோதனையா? என்று நான் எண்ணும் முன்பே, பாஞ்சாலி அவள் பெண்மையின் மானத்திற்காக சபதம் செய்து விட்டாள். அதுவும் நியாயம்தான். அது தர்மமாகுமா என்று யோசிக்கும் முன்பாக, இரு சகோதரர்களும் பெண்மைக்கு செய்ய வேண்டிய நியாயத்தை மனதில் கொண்டு அந்த சபதத்தை உறுதி செய்து விட்டார்கள். எது நியாயம், எது தர்மம்? நாலை சபையில் நான் என்ன செய்வது? எனக்கு உயர் தர்ம வழி ஒன்றுதான் தெரிகிறது, அதை என் குடும்பத்தார்கள் ஐவரையும் உணரச் செய்ய முடியுமா?"

சகாதேவன், சட்டென கண்களை திறந்து, எழுந்து நின்று, கைகூப்பி யுதிஷ்டிரனை வணங்குகிறான். "நான் இதுவரை நடந்ததை, பார்த்ததை, பார்த்தபடி சொன்னேன். நாளையைப் பற்றி நான் ஏதும் கூறுவது தர்மமில்லை. தமையனார் தாங்கள் தான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், சொல்ல வேண்டும்".

யுதிஷ்டிரர்: "சகாதேவா! நீ சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாய். பாஞ்சாலி! உன் எண்ணத்தை நாங்கள் அறியலாமா? உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நான் உடன் ஏதும் பதில் சொல்லிவிட முடியாது. காலம் சரியான பதில் சொல்லும். இருந்தாலும் உன் மனத்தில் பட்டதை சொல்".

திரௌபதி: "இங்கு வந்தவுடன் கேட்டிருந்தால் உடன் பதில் கூறியிருப்பேன். ஆனால் தங்கள் பார்வையில் பட்டது, மனத்தில் நினைத்தது என்று சகாதேவர் விபரமாய் எல்லோருக்கும் விளக்கிய பிறகு, என் மனத்தில் பட்டதை கூற யோசிக்க வேண்டியிருக்கிறது. வந்தவுடன் கேட்டிருந்தால் நாம் ஹஸ்தினாபுரத்துக்கு வெளியே இன்று இரவு முதல், வனாந்திரத்தில், மரத்தடியில் தங்குவதுதான் உசிதம் என்று கூறியிருப்பேன். நாளை சபையில் என்ன செய்வது என்ற தங்கள் எண்ணத்தை தெரிந்து கொண்ட போதே, தாங்கள் நாளை வரை இங்கு இருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டீர்கள் என்றும் தெரிகிறது.

மேலும் 'எனக்கு உயர் தர்ம வழி ஒன்றுதான் தெரிகிறது', என்று கூறியதின் மூலம், நாளையை இன்றே எதிர்பார்த்து அங்கு ஒரே ஒரு தர்மவழிதான் தெரிகிறது என்று கூறிவிட்டீர்கள். தங்கள் மற்ற சகோதரர்களும் தங்கள் வழியை பின்பற்றும் போது நானும் அந்த தர்ம வழியைத்தான் நினைக்க வேண்டும், அதன் படிதான் நடக்க வேண்டும். எனக்கு வேறு எண்ணம் ஏதும் கிடையாது. இருந்தாலும் என் மனம் 'பெண்ணின் மானத்திற்காக சபதம் செய்துவிட்டாள் திரௌபதி. அதுவும் நியாயம் தான்' என்ற வார்த்தையில் சற்று சமாதானம் ஆகிறது. அவ்வளவுதான்."

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)