புதன், நவம்பர் 30, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - நான்கு

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும்
பகுதி நான்கு


எப்போதும் போல் அன்று இரவும் வந்தது. மறுநாள் பொழுதும் புலர்ந்தது. துரியோதனன் மன்னன் திருதராஷ்டிரனிடம் காலையிலேயே சென்று மாமா சகுனி சொன்னது போல் சொல்கிறான்.

மன்னன் திருதராஷ்டிரன் ஒன்றும் முழுமூடன் அல்ல. அவன் மனம் எண்ணுகிறது: 'துரியோதனன் சகுனியின் கையில் மற்றும் ஒரு காய்தான். இதை இவனிடம் எடுத்துச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. நாட்டை பிரிப்பது கூடாது. கிடைத்ததை வைத்து திருப்தி அடையலாம் துரியோதனன். அவன் காந்தாரி பிள்ளையாய் இருந்தால் இப்படி இருக்க மாட்டான். என் பிள்ளையல்லவா?

எனக்கு கண்கள் இல்லாமல் கிடைத்த இராஜ்யம் இவனுக்கு கண்கள் இருந்த்தும் கிடைக்காமல் போய்விடும் போல் தெரிகிறது. பேராசையோ அல்லது குரோதமோ. எது எப்படியோ. யுதிஷ்டிரனின் இராஜ்யத்தை சூதின் மூலம் கவர்ந்துவிட்டதாக இவனும் சகுனியும் நம்புகிறார்கள். யுதிஷ்டிரனைப் பற்றி இவர்கள் இருவரும் என்னதான் நினைக்கிறார்கள். தோற்றால் வனவாசம், ஜெயித்தாலும் ஒன்றும் கிடைக்காது. இது கூடவா புரியாது யுதிஷ்டிரனுக்கு? ஆனல் அவன் பெரியப்பா சொன்னால் சரி என்று சொன்னாலும் சொல்லி விடுவான். அப்படி சரி என்று யுதிஷ்டிரன் சொன்னாலும் சபையில் மற்றவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்? நேற்று மௌனமே சிறந்தது என்று பலரும் இருந்து விட்டார்கள். இன்றும் அப்படியே இருந்துவிடுவார்களா? யுதிஷ்டிரன் இந்த சூதாட்டத்திற்கு சரி என்று சம்மதம் கூறிவிட்டாலும், மற்ற பாண்டு புத்திரர்கள், அதுவும் பீமன் இதை ஒப்புக் கொள்வானா? ஆனால் சபையில் யுதிஷ்டிரன் பேசும் போது சகோதரர்கள் நால்வரும் மௌனம் அனுஷ்டிப்பார்கள். நான் யுதிஷ்டிரனைப் பற்றி நினைப்பது இருக்கட்டும். துரியோதனன் என்னதான் நினைக்கிறான் யுதிஷ்டிரனைப் பற்றி?'

திருதராஷ்டிரன்: "துரியோதனா! யுதிஷ்டிரன் இந்த சோதனைக்கு உட்படுவானா?"

துரியோதன்: "தாங்கள் சொன்னால் நிச்சயம் யுதிஷ்டிரன் ஒப்புக் கொள்வான் - உடன் சரி என்று சொல்வான், என்று மாமாதான் சொன்னார்"

திருதராஷ்டிரன்: "ஓகோ! மாமாவிற்கு அவ்வளவு நம்பிக்கையா? எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆனால் உனக்கு அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறதே?"

துரியோதன் சங்கடத்துடன் ஏதோ முனகுகிறான்.

திருதராஷ்டிரன்: "சரி, சரி. துரியோதனா! சபைக்கு வா. யுதிஷ்டிரனைப் பற்றி கவலை வேண்டாம்”

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

செவ்வாய், நவம்பர் 29, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - மூன்று

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்

பகுதி மூன்று

சபையை விட்டு தனியாக வெளியேறிய சகுனி, நதிக்கரையை அடைகிறான்.  நதிக் கரையில் அமர்ந்து சொக்கட்டான் காய்களை வைத்த துணியை பிரிக்கிறான்.  தான் இதுவரை போற்றி பாதுகாத்த காய்களை ஒருமுறை, கடைசியாக ஒரு முறை, பார்த்துவிட்டு நதியில் விட்டு விட வேண்டும் என்று எண்ணம். காய்கள் இரண்டும் சுடுகாட்டு சாம்பல் போல் உதிர்ந்து காணப்படுகிறது.  திரௌபதி காலால் சிறிது நேரம் சபையில் மூடிய போது தகித்த வெப்பம் காய்களை பஸ்பமாக்கியிருக்கு வேண்டும்.  பின் எழுந்த குளிர்ச்சியில் இவை ஈர மாவுப் பண்டம் போல் இருந்திருக்கின்றன.  இப்போது எல்லாம் தவிடு பொடி.  நதியில் எடுத்துப் போட்டு விட்டு தானும் மூழ்கி எழுந்து, துரியோதனன் இருப்பிடம் வருகிறான் சகுனி.

துரியோதனனும் கர்ணனும் அமர்ந்திருக்கிறார்கள்.  சோகமாய் சகுனி தளர் நடையில் வருவதைப் பார்த்த கர்ணன் எழுந்து வரவேற்கிறான்.  துரியோதனனும் வேண்டா வெறுப்பாய் "அமருங்கள் மாமா!" என்கிறான்.

துரியோதனன்: "என்ன மாமா?  காலால் இட்டதை தலையால் செய்வது போல், காலால் எடுத்துப் போடப்பட்ட பகடைக்காய்களை, அவள் சொன்னபடி பத்திரமாய் சுருட்டி எடுத்துக்கொண்டு, நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றீர்களே?  அவற்றுக்கு ஈமக்கிரியை செய்து முடித்து விட்டீர்களா?".

சகுனி எண்ணுகிறான்: 'இவன் தோற்ற காய்கள், இறந்த காய்கள் என்ற அர்த்தத்தில் ஈமக்கிரியை என்கிறான்.  திரௌபதியோ, இவை முன்னோர்கள் எலும்பு என உணர்ந்தே தங்கள் உசிதப்படி மற்ற காரியங்களைச் செய்யுங்கள் என்று அழகாய்ச் சொன்னாள்'.

சகுனி: "துரியோதனா!  இது என்னுடைய மானம், அவமானம் கலந்தது.  சந்தோஷத்தை சிறுவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முடியும்.  ஆனால் எனது துக்கத்தை, வயதில் என்னில் பெரியவர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகையால் இது பற்றி ஏதும் பேச வேண்டாம்."

கர்ணன்: "மாமா, தாங்கள் மிகவும் களைப்படைந்து காணப்படுகிறீர்கள்.  சற்று ஓய்வெடுங்கள்."

சகுனி: "கர்ணா! இனி ஓய்வென்பது கிடையாது.  என்னைப் பொருத்தவரை நமக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.  எப்போது ஆரம்பமானது என்பது குறித்து மட்டும் தான் சந்தேகம்.  ஓய்வுக்கு நேரம் ஏது?"

கர்ணன்: "மாமா, நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்.  நான் நண்பன் துரியோதனனிடம் யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது என்றேன்.  தாங்கள் ஆரம்பித்தது எப்போது என்பது தான் சந்தேகம். யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பது உறுதி என்கிறீர்கள்.  ஆனால்..."

சகுனி: "ஏன்? துரியோதனன் வேறு விதமாய் கூறுகிறானா?  துரியோதனா, உன் கருத்துதான் என்ன?"

துரியோதனன்: "கர்ணன் யுத்தம் வரப் போகிறது என்றான்.  தாங்களோ யுத்தம் வந்தே விட்டது என்கிறீர்கள்.  அவமானப்பட்ட திரௌபதி ஏதோ புலம்பினாள்.  பீமனும், அர்ச்சுனனும் முனகினார்கள்.  இதை வைத்து நீங்கள் இருவரும் மிகவும் குழம்பி விட்டீர்கள்".

சகுனி: "துரியோதனா!  நீதான் மிகவும் குழம்பியிருக்கிறாய்.  கர்ணனும் நானும் தெளிவுடன் தான் பார்க்கிறோம்.  எல்லாவற்றையும் எப்போதும் பார்க்கக் கற்றுக் கொள்.  பாண்டவர்கள் தோற்று இராஜ்யத்தை உன் கையில் கொடுத்துவிட்டு புறப்பட்டு போய் விட்டார்கள் என்று எண்ணாதே.  திரும்பி வராமல் அவர்கள் சென்று விடுவார்கள் என்றும் எண்ணாதே.  நாளை சபையில் என்ன நடக்குமோ?"

துரியோதனன்: "மாமா, இப்போது சொன்னீர்களே, இது வார்த்தை.  யுத்த பயத்தை விட்டு யோசிப்போம்.  நாளை மன்னர் இராஜ்யத்தை திரும்ப தந்துவிட்டேன் என்று அறிவித்தால் என்ன செய்வது என்று தான் நான் யோசிக்கிறேன்."

கர்ணன்: "நண்பா! இது வீண் கவலை.  மன்னர் தந்தேன் என்றாலும், யுதிஷ்டிரன் சம்மதித்தாலும், மற்ற பாண்டவர்கள் இதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  திரௌபதியே இதற்கு அவையில் ஒரு கோடி காட்டி விட்டாள்.  'மன்னர் தந்து பெற வேண்டுமா?  அல்லது தாங்கள் வென்று பெற வேண்டுமா? என்பதை ஐவரும் தீர்மானிக்கட்டும்' என்று திரௌபதி கூறியது உனக்கு ஞாபகம் இல்லையா?  இந்நேரம் அவர்கள் ஐவரும் திரௌபதியின் பேச்சுக்கு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்."

சகுனி: "கர்ணா! சரியாகச் சொன்னாய்.  மன்னர் அவையில் 'நெருப்பை யாரவது கட்டிப் போட முடியுமா?' என்று திரௌபதியைப் பார்த்து கேட்டார்.  ஆனால் இந்த நெருப்பு பாண்டவர் ஐவரையும் ஒன்றாக சேர்த்து ஒரு பலமான வார்ப்பாய்ச் செய்து விடும்.  இதுதான் என் கவலை.  யுதிஷ்டிரன் நியாயத்தை மறந்து விடுவான். அவன் தர்மத்தை - சாசுவதமான தர்மத்தை - மட்டும் தான் பேசுவான்.  நியாய வாதங்களை முன் வைத்து பாஞ்சாலி என்ன செய்வாள் என்று தெரியாது.  ஏற்கனவே பீமனும், அர்ச்சுனனும் அவள் பக்கம் என்று சபையில் தெரிந்துவிட்டது.  ஆக அவள் பக்கம் மூன்று பேர் என நிச்சயமாகிவிட்டது.  நகுல சகாதேவன் யார் பக்கம்?  அவர்களும் திரௌபதி பக்கம் என்றால் யுதிஷ்டிரனும் வேறு வழியின்றி அவர்களுடன் ஒத்துப் போக வேண்டியதுதான்.  ஆக அவர்கள் ஆறு பேரும் ஒன்று என்று கொள்ள வேண்டியதுதான்.

துரியோதனன்:  "மாமா!  பாண்டவர் ஐவரும் ஒரு பக்கம் என்று கூறுங்கள்.  போயும் போயும் திரௌபதியையும் சேர்த்து அறுவர் நமக்கு எதிரி என்று கூறாதீர்கள்.  ஒரு பெண்ணையும் கணக்கில் சேர்த்து, யுத்தத்திற்கு வியூகம் வகுக்க வேண்டுமா என்ன?"

சகுனி:  "யுத்தம் என்று வந்த பிறகு ஒவ்வொரு உயிர் உள்ள ஜீவனையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.  ஏன்?  யார் கையில், என்ன என்ன அஸ்திரங்கள் இருக்கின்றன என்பதையும் கணக்கிடுவது இல்லையா?  இன்னும் காடு, நதி, மேடு, பள்ளம் என்று எல்லாவற்றையும்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.  ஏன் சிறு துரும்பு கூட நமக்கு பாதகமோ அல்லது சாதகமோ செய்யும்.  போர் என்றால் வெற்றி, வீர மரணம் என்பது மட்டுமில்லை."

கர்ணன்: "மாமா! தங்கள் கருத்துகள் மிகவும் யோசிக்க வைப்பவையாய் இருக்கின்றன.  சபையிலேயே நான் அர்ச்சுனனை எதிர்த்திருப்பேன்.  நண்பன் துரியோதனன், பீமனின் வார்த்தைகளை ஒரு பொருட்டாய் கொள்ளவில்லை.  நான் மட்டும் அவசரப்பட்டு ஏதும் ஆரம்பிக்கக் கூடாது என்று பொறுமையை கடைபிடித்தேன்.  நாம் பலமுறை சிந்தித்து செயல் பட வேண்டும்.  சரி, நாளை சபையில் நமது நிலை என்ன?"

சகுனி: "கர்ணா! சபையிலிருந்து நான் வெளியேறிய போதே அடுத்த ஆயுதம் என்ன, எப்படிப் பிரயோகிக்க வேண்டும் , என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  துரியோதனா! கவனமாய்க் கேள்.  தயவு செய்து குறுக்கே கேள்விகள் கேட்காதே.  முழுவதையும் கேட்டுவிட்டு பிறகு உன் மாமாவை எது வேண்டுமானாலும் கேள்.  நாளை சபையில் மன்னர் அனேகமாய் இந்திரபிரஸ்த்தத்தை பாண்டவர்களுக்கு திரும்ப கொடுத்து விட்டு சமாதானமாகப் போக விழைவார்."

துரியோதனன் ஒரு உறுமலுடன் குறுக்கிட ஆரம்பிக்கிறான்.  உடன் சகுனி மிகவும் அழுத்தமான குரலில், "துரியோதனா! முழுவதையும் கேட்டுவிட்டு பிறகு உன் மாமாவை எது வேண்டுமானாலும் கேள்.  ஏன்? உன் மாமாவின் தலையே வேண்டுமானாலும் கேள்.  முதலில் காது கொடுத்துக் கேள்"

கர்ணன் (சமாதானமான குரலில்): "மாமா நீங்கள் கூறுங்கள்.  நண்பா! நெருப்பு என்றால் பற்றி எரிகிறது என்று அர்த்தமில்லை.  முதலில் முழுவதையும் கேட்போம்.  பிறகு மாமா யோசனையை ஏற்பதா, வேண்டாமா என்று யோசிக்கலாம்.  மாமா இவ்வளவு மனக் கஷ்டத்துடன் 'ஏன் - என் தலையே வேண்டுமானாலும் கேள்' என்று கூறுகிறார் - சற்று யோசி."

சகுனி: "என் யோசனை முழுவதையும் கேட்டால் துரியோதனன் நிச்சயமாக என் தலையைத் தான் முதலில் கேட்பான்.  அதை முன் வைத்தே நான் கூறுகிறேன்.  கவனமாய் இருவரும் கேளுங்கள்.

துரியோதனா! நாளை காலை உன் தந்தையைப் போய் பார். இன்று இரவு முழுவதும் அவர் தன்னையும் உன்னையும் பற்றிய சிந்தனையில் தான் இருப்பார்.  ஆகவே காலையில் முதல் வேலையாக, நீ அவரைப் போய் பார்க்க வேண்டும்.  அவரிடம், 'தந்தையே! நேற்று அவையில் நடந்தவைகள் தங்களுக்கு மிக மன வருத்தத்தை கொடுத்து விட்டன.  தங்கள் மகன் என்ற முறையில் நானும் மிகவும் வருந்தினேன்.  மன நிம்மதிக்காக சில வருடங்கள் காட்டில் சென்று தனித்து இருப்பது என்று முடிவு செய்தேன்.  ஆனால் மாமா சகுனி, "நடந்தவெற்றுக்கெல்லாம் நீயோ, மன்னரோ மட்டும் காரணம் என்று கூற முடியாது. இதில் யுதிஷ்டிரன் பங்கு என்ன?  ஏன் விளையாட்டை வினையாக அவன் ஆக்கினான்.  எப்படிப் பார்த்தாலும் யுதிஷ்டிரனுக்கு அதிக பொறுப்பு உண்டு.

ராஜசூய யாகம் எல்லாம் செய்து விட்டு அரசனாய் விளங்கிய அவன், சொக்கட்டான் விளையாட்டை வினையாக செய்து, நாடு நகரமெல்லாம் இழந்து, எப்படியோ அடிமை என்றில்லாமல் தனி மனிதனாய் போய்விட்டான்.  எப்படிப் பார்த்தாலும், அவன் தான் காட்டில் போய் தனித்து வாழ வேண்டும்.  சிறு பிள்ளையான உன் மனம் குழம்பியிருக்கிறது.  யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது எப்படி?  யுதிஷ்டிரனா அல்லது நீயா? எந்த குற்றவாளியும் தானே முன் வந்து தான் தான் குற்றமிழைத்தேன் என்று கூற மாட்டான்.  ஆனால், உன் வெள்ளை மனம், விளையாட்டை நாம் தானே ஆரம்பித்தோம்; நாம் தான் குற்றவாளி என்று கருதுகிறது.  இன்னம் ஒரு முறை, ஒரே ஒரு முறை காய் ஆடி, அதில் யார் தோற்கிறார்கள் என்று பார்த்து, குற்றவாளியை நமக்குள் தீர்மானித்து, தோற்றவர் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, பின் ஒரு ஆண்டு யார் கண்ணிலும் படாது மறைந்து வாழ வேண்டும் என்று கூறு.  மறுமுறை நீயும் யுதிஷ்டிரனும் சொக்கட்டான் ஆட அரசர் அனுமதி பெற்று ஆடு.  இதில் தோற்றவரே குற்றவாளி.  அவர்கள் தான் காட்டில் தனித்து இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்று சொன்னார்.  

தந்தையே! தாங்கள் அனுமதி கொடுத்தால் நான் ஒரே ஒரு முறை ஆடி, ஜெயித்தால் நாட்டில் இருக்கிறேன்.  யுதிஷ்டிரன் தோற்றால் காட்டில் வாழலாம்.  இல்லை அனுமதி கொடுக்க விரும்பவில்லை என்றால், இதோ, இப்போதே நான் மனநிம்மதியுடன் காட்டிற்கு புறப்படுகிறேன்! தங்கள் உத்திரவு'
துரியோதனா! இவ்வாறு மன்னரிடம் நீ மன்றாட வேண்டும்.  நீ காட்டிற்கு புறப்பட்டு விட்டாய் என்று மன்னர் எண்ண வேண்டும்.  அதை தவிர்ப்பதற்கு ஒரு முறை காய் விளையாடுவது, அதில் தோற்றவர் தான் குற்றவாளி என்ற முடிவிற்கு மன்னர் வர வேண்டும்.  அது முக்கியம்.

நாளை காலை அரச அவைக்கு வரும்போது மன்னர் ஒரு முறை காய் ஆடி தோற்றவரை தீர்மானிக்கும் எண்ணத்துடன் வர வேண்டும்.  பிறகு மற்றவைகளுக்கு நான் பொறுப்பு."  சகுனி எழுந்து புறப்பட தயாரானான்.

துரியோதனன்: "மாமா! யுதிஷ்டிரன் காட்டிற்கு போவது குறித்து எனக்கு மிக சந்தோஷம் தான்.  ஆனால் ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டால் நான் அல்லவோ காடு போக வேண்டும்.  பிறகு இராஜ்யம் முழுவதும் யாருக்கு?  நேற்று திரௌபதி தங்கள் சிகப்பு வெள்ளை காய்கள் இரண்டையும் வெற்றி கொண்டு விட்டாள்.  நாளை தோல்வி நமக்கு வராது என்பது என்ன நிச்சயம்.  'துரியோதனன் தலையைத்தான் கேட்பான்' என்று சொன்னீர்களே, அது சரிதான்.  இந்த யோசனையைக் கேட்டதும், தங்கள் தலையை மட்டும் தனியாக எடுத்து மரியாதை செய்தால் என்ன? என்று தான் எண்ணம் வருகிறது.  மாமா என்னை மன்னியுங்கள்"

சகுனி: "நீ கேட்பதற்கு முன் நான் தருகிறேன் என்று கூறிவிட்டேனே.  நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்று நினைக்கிறாய்?  மறுமுறை சென்நிறக் காயையோ அல்லது வெள்ளைக் காயையோ நாடப் போவதில்லை.  தக தக என ஜொலிக்கும் செம்பு உலோகத்தில் காய்களை இனிப் போய் செய்வேன்.  நான் வணங்கும் தேவதைகளிடம், 'இந்த முறை தோல்வி ஏற்பட்டால், உடனேயே என் தலையை காணிக்கையாக காலடியில் சமர்ப்பித்து விடுவேன்.  இது நாள் வரை செய்து வந்த பூஜைகள் தொடர்வதற்காகவாவது எனக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், என்னையே பலியிடுவதன் மூலம் பேயாக திரிந்து வருவேன்.  தேவதைகளே!  உங்களுக்கு உபசாரங்கள் செய்வது இனி நிற்கப் போவதுடன் அல்லாது, பேய் உருவில் பெரும் தொந்திரவும் கொடுப்பேன்', என்று சபதம் செய்து பின் விளையாட வருவேன்.  வெற்றி நிச்சயம்.  துரியோதனா! தவிர தோல்வி உனக்கு வந்தால் தான் என்ன?"

கர்ணன்: "மாமா! பெரும் தோல்வியை எதிர்பார்த்து ஆடலாமா?"

துரியோதனன்: "தோல்வி என்றால் சாதாரண தோல்வியா இது?  பன்னிரண்டு வருடம் காட்டில் வாசம்.  ஒரு வருடம் தலை மறைவு வாசம்.  கேட்கவே அருவருப்பாய் தெரிகிறதே?  எப்படிப் பொறுப்பது மாமா?  தோல்வி என்று ஏற்பட்ட உடனே தலையை தேவதைகள் முன் எடுத்து வைத்துவிட்டு வீர சொர்க்கம் போய்ச் சேருவீர்கள்.  என் பாடு?  இராஜ்யமும் இழந்து காட்டு வாசியாக பல வருடம் திரிய வேண்டியது தான்."

சகுனி:  "துரியோதனா!  உயிரையே பணயமாய் வைத்து உன் வெற்றிக்காகப் பாடுபடப் போவது நான்.  அதில் மிகவும் கருத்தாய் இருக்க மாட்டேனா?  ஏன் இப்படி சோர்வடைகிறாய்?  தோல்வி என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு.  உன் பக்கம் தோல்வி என்றால் காட்டு வாசம் சரி.  நீ ஏன் இராஜ்யத்தை இழக்க வேண்டும்?  இது வரை நான் பேசிய பேச்சில் இராஜ்யத்தைப் பற்றி நான் ஏதாவது கூறினேனா?  எதை எப்போது பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை எப்போது தான் நீ தெரிந்து கொள்ளப் போகிறாயோ?

குற்றவாளி யார் என்பதை தீர்மானிப்பதற்கு இந்த ஆட்டம் ஒரு வழி.  தோற்றவர் காடு செல்ல வேண்டும் - அவ்வளவுதான்.  யுதிஷ்டிரன் தோற்றால் அவன் காடு செல்லப் போகிறான்.  நடுவில் அரசைப் பற்றி என்ன பேச்சு? இந்த நாடு முழுவதும், அதாவது இந்திரப் பிரஸ்தம் உட்பட்டு, மன்னர் திருதராஷ்டிரர் அவைக்கு உட்பட்டது.  பதிமூன்று வருடங்களையும் பதிமூன்று நாட்கள் போல் வனவாசத்தை, வன போஜனத்திற்கு போய் வருவது போல், நீ கழித்து விட்டு திரும்பி வந்துவிடலாம்.  அப்போது ஒரு மாறுதல் மட்டும் தான்.  உன்னை வரவேற்க மாமா சகுனி உயிருடன் எதிரில் நிற்க மாட்டார். அவ்வளவுதான்."

துரியோதனன் (ஆச்சர்யமும் அவநம்பிக்கையும் கலந்த குரலில்): "மாமா! இதற்கு யுதிஷ்டிரன் சம்மதிப்பானா?"

சகுனி: "துரியோதனா! இப்போது தான் நீ சரியாக யோசிக்க கற்றுக் கொண்டுவிட்டாய் என்று தெரிகிறது. 'யுதிஷ்டிரன் சம்மதிப்பானா?' - நிச்சயம் யுதிஷ்டிரன் அரச சபையில் மன்னர் கேட்டால் உடன் 'உத்திரவு பெரியப்பா' என்று மட்டும் தான் சொல்வான்.  மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி நமக்கு கவலை இல்லை.  யுதிஷ்டிரன் சம்மதத்தை முதலில் பெற்று விட்டால் பிறகு தடையேதும் இல்லை, நிச்சயம் வெற்றி நமக்குத்தான்."

கர்ணன்: "மாமா!  நானும் இராஜ்யத்தைப் பற்றி ஏதும் சரியாக சிந்திக்கவில்லை.  துரியோதனன் பயந்தது போல இராஜ்யம் போய்விடுமோ என்று பயந்தேன்.  ஆனால் முழு இராஜ்யத்தையும் கண்முன்னால் மறைத்து விட்டீர்கள்!  மாமா!  நீங்கள் மிகவும் தந்திரசாலி.  தோல்வி பெற்றவர் வனவாசம் போக வேண்டும், யுதிஷ்டிரன் வென்றாலும் இராஜ்யம் திரும்பக் கிடையாது. துரியோதனன் வென்றால், எதிரி பாண்டவர்கள் வனவாசம்.  எனக்கு இது தாங்கள் சொன்ன பிறகு தான் புரிகிறது.  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  யுதிஷ்டிரன் நிச்சயம் ஏமாந்து போவான், அத்துடன் தோல்வியுடன் வனவாசம் போவான்."

சகுனி: "கர்ணா!  மிகவும் மகிழாதே.  யுதிஷ்டிரன் ஏமாற மாட்டான்.  பின் நமக்கு வெற்றியா என்றா கேட்கிறாய்?  நிச்சயம் யுதிஷ்டிரன் வனவாசம் போவான்.  ஆனால் தோல்வி என்று எண்ணி வனவாசம் போக மாட்டான், தன் வெற்றி என்றெண்ணித்தான் போவான்.  அது எனக்குத் தெரியும்.  ஆனால் அதை உனக்கோ, துரியோதனனுக்கோ எடுத்துச் சொல்லி இப்போது புரிய வைக்க முடியாது.  'எதிரியின் பலம், பலவீனம் என்ன?' என்பதை அறிபவனே மிக புத்திசாலி.  எனக்கு, பலவான் யுதிஷ்டிரனை நன்றாகத் தெரியும்.  நேரம் பொன் போன்றது.  காலத்தை வீணாக்கக் கூடாது.  

துரியோதனா! ஞாபகம் இருக்கட்டும், உன் தந்தையின் உத்திரவு, நாளை யுதிஷ்டிரன் அரசவையில் மறுபடியும் சொக்கட்டான் ஆடுவது.  எனக்கு நேரம் ஆகிறது.  இனி நான் புதிதாக செம்பை உருக்கி வார்த்து, காய் செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து என் இஷ்ட தேவதைகளிடமிருந்து சக்தி பெற வேண்டும்.  நான் வருகிறேன்."



முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

திங்கள், நவம்பர் 28, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - இரண்டு

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்

பகுதி இரண்டு

திரௌபதி: "'மகளே!' என்று என்னை அழைத்து பெரியப்பா வரங்கள் தருவதற்கு முன்னால், சில விஷயங்களை யோசிக்க வேண்டும். தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்து விட்டு, அவர்கள் மனைவியை மட்டும் 'மகளே' என அழைத்து வரம் தருவது முரணாய் இல்லையா? பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை, மொத்த பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும், இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள், அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? அவமானப்பட்டிருக்கும் திரௌபதி நீதி கேட்டு, மன்னர் திருதராஷ்டிரர் முன்னால், மற்றவர்கள் வாய்மூடி மௌனமாய் இருக்கும் போது தன் பக்கத்தைத் தானே எடுத்துச் சொல்லும் நிலையில் நிற்கிறாள். முதலில் 'என்னை இழந்து தன்னை இழந்தாரா?' என்ற என் கேள்விக்கு பதில் என்ன? தன்னை இழந்த பிறகு, என்மீது என்ன உரிமை இருக்க முடியும்? ஆக, நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும். பிறகு..."

திருதராஷ்டிரன்: "ஆமாம் மகளே! நீ சுதந்திரமானவள்தான். நெருப்பை யாராவது கட்டிப் போட முடியுமா?"

திரௌபதி: "இது போதும் மன்னரே, இது போதும். இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளட்டும். பாஞ்சாலி, பாண்டவர் ஐவர் அன்புக்கு மட்டும் அடிமை. மற்றபடி அவள் சுதந்திரமானவள், என்பதை. தாத்தா பீஷ்மர் 'மனைவியின் மீது கணவனுக்கு உரிமை உண்டல்லவா?' என்று வினா எழுப்பினார். பாவம்! தந்தைக்கு செய்யும் கடமையாய் நினைத்து தன் உரிமைகளை அடிமைப்படுத்தியவர் அவர். கணவன், மனைவி இவர்கள் உரிமை என்ன? கடமை என்ன? என்று அவர் அறிய வாய்ப்பில்லை. அது அவர் தவறல்ல. மன்னரே! நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் இவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள். இதுவரை இவர்கள் பணய பொருட்களைக் கேட்டதுபோல் நான் இருமுறை கேட்டு ஆட எனக்கு அனுமதி தாருங்கள்."

காந்தாரி: "மகளே! நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்றுதான் எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி, மகளே!"

திரௌபதி: "சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று நிச்சயம் உணர்த்துவேன் ஹஸ்தினாபுரத்து அரசியே!"

காந்தாரி: "அரசி என்றழைக்காதே மகளே! நடப்பது எல்லாம் மேலும் மேலும் அச்சத்தையே உண்டு பண்ணுகிறது. அரசி அஞ்ச மாட்டாள். தாய் என்ற முறையில் மிகவும் அச்சப்படுகிறேன், மகளே!"

திரௌபதி: "தாயே! அரச சபைக்கு அவமானம் என்று மட்டும் நினைத்துத்தானே சூதாட்டகளமாக்காதே என்று என்னிடம் கூறினீர்கள்? தன் மருமளுக்கு இந்த பாதகர்கள் கூடி அரச சபையில் செய்த தீராத அவச்செயல், அதைக் காட்டிலும் நான் சூதாடுவது தவறா? தாயே! நான் சாபம் இடுவதை தடுத்ததின் மூலம் அழிவை ஒத்திப் போட்டுவிட்டீர்கள். ஆனால் என் அவமானத்தை துடைக்கவில்லையே? என்னை அனுமதியுங்கள்."

காந்தாரி: "உன்னைத் தடுக்க வேண்டும் என தோன்றவில்லை என்று முன்னே கூறிவிட்டேன். முடிவு உன்னுடையதுதான் மகளே!"

திரௌபதி மனத்துள் எண்ணுகிறாள்.

'பரந்தாமா! உன் அருளால் என் வஸ்திரம் வளர்ந்து மானத்தைக் காத்தது. இந்த துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நீ முடிவு செய்யவில்லை. காரணம் கேட்டதைத் தரவேண்டும் என்று இருக்கலாம். கேட்காமல் தருபவனும் நீயேதான். உன் எண்ணத்தை யாரறிவார்? உன்னருளால் வளர்ந்த வஸ்திரம் எனக்காக, என்னுடனேயே இருக்க அருள்புரி. துர்த்தன் துச்சாதனன் கைசோர வளர்ந்த வஸ்திரம் என்னுடலோடு ஒட்டிவர அருள் புரி. (தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, திரௌபதி வஸ்திரத்தை உடலில் சுற்றிக் கொள்கிறாள்). இருமுறை ஆடுவேன் என மன்னனிடம் அனுமதி பெற்றுவிட்டேன். உன் அருளால் வெற்றி நிச்சயம். உன் சித்தம் எப்படியோ? என்னால் ஆன முயற்சி ஒருமுறைக்கு இரு முறை முயலுவது என்று இருமுறை ஆடுவேன்.

முதல் முறை தோற்றுவிட்டால் 'அடிமை ஆட அனுமதி இல்லை' என்று துரியோதனன் மற்றும் சகுனி விவாதம் செய்யலாம். இரண்டாம் முறை ஆட அரசர் அனுமதி முன்பே பெற்று விட்டேன். அடிமையானாலும் சுதந்திரத்திற்கு முயற்சி செய்ய அனுமதி உண்டு என வாதிடலாம். அப்படியே இரண்டாம் முறையும் தோற்றால் என்ன செய்வது? இந்த அடிமை முயன்றது போல் மற்ற ஐவரும் முயலலாம் என்ற கருத்தை அவை நடுவே எழுப்புவேன். அவர்கள் சூதாடி வெல்வார்களோ அல்லது போராடி வெல்வார்களோ, எனக்குத் தெரியாது. கோபாலா! உன்னிடம் வேண்டிக் கேட்கிறேன். எனக்கு ஆட்டத்தில் ஜெயம் உண்டாக அருள்புரி. பாண்டவர்கள் இப்போது போராடித்தான் பெற வேண்டும் என நினைத்தால் அதை எனக்காக தயவுசெய்து மாற்றிக் கொள். பிறகு வேண்டுமானாலும் போராடட்டும். இந்த அவையில் நடந்த இந்த இழிசெயல், பாரத பூமியெங்கும் இதோ பரவியிருக்கும். பெண்மையை மதிக்காமல் அவமதிப்பது, அதை பெண்ணான நானும் வாயைமூடி பொறுப்பது என்பது கூடாது. காந்தாரி நான் சாபமிடுவதைத் தடுததின் மூலம், இவர்களுக்கு உடனடி உயிர் பிச்சை கொடுத்துவிட்டார். நான் இபோது வெல்வது மொத்த பெண் குலத்திற்கே ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காக்க உன்னிடம் வேண்டி நிற்கிறேன், உன் சித்தம் என் பாக்கியம்'. இம்மாதிரி எண்ணி திரௌபதி மனத்துள் கண்ணனைத் துதிக்கிறாள்.

கர்ணன் துரியோதனன் பக்கம் திரும்பி: "நண்பா, மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம்."

சகுனி, துரியோதனன், துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் 'ஆட்டத்திற்கு நாங்கள் தயார்' என்று கூறுகிறார்கள்.

திருதராஷ்டிரனும் தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஆகட்டும் என அனுமதி கொடுக்கிறான்.

திரும்பிய திரௌபதியைப் பார்த்து கர்ணன் "ஐந்து அடிமைகளின் மனைவியே! என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். இந்த பட்டு மெத்தையில் உட்காருகிறாயா? அடிமையான பின்பு இந்த சுகமெல்லாம் கிடைக்காது" என்று கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தோள்கள் வேகமாய் குலுங்கியது. பீமனின் பெருமூச்சு பெரிய பாறைகளை உருட்டிச் செல்லும் நதியோசை போல வருகிறது. இருவரையும் கைகளால் தடவி சாந்தப்படுத்துகிறார் யுதிஷ்டிரர்.

கண்களில் கோபத்துடன் திரௌபதி, கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்துக் கூறுகிறாள்: "அங்க நாட்டு முதல் அடிமையே! ஐவருக்கு நான் அடிமையா, இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. பானுமதியுடன் சூதாடி, கைவளையோசை கேட்டுக் கேட்டு, அடிமையான புத்தி அப்படித்தான் பேசும். பாஞ்சாலி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால்தான் உருட்டுவாள் - இது சத்தியம். இதை எல்லாரும் அறியட்டும்".


தன் நண்பன் கர்ணனை 'முதல் அடிமை' என்று திரௌபதி விளித்ததை துரியோதனன் ஆட்சேபிக்க விழைந்தான். சூதையும் பானுமதியையும் அவள் சேர்த்துக் கூற, பேசாமல் இருந்துவிட்டான்.

துரியோதனன்: "நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு."

திரௌபதி: "சூதின் கருவான காந்தார இளவரசர் ஆட்டத்தை முன்பு துவக்கினார். இப்போது நான் தான் ஆட்டத்தை துவக்கப் போகிறேன். தாங்கள் காயை என் காலடியில் வந்து வைக்கிறீர்களா? நான் கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன்."

துரியோதனன் (அவசரமும் ஆத்திரமும் கலந்த குரலில்): "மாமா காயை உன் காலடியில் வந்து வைக்கமாட்டார். அவர் இங்கு சூதாட்ட மேடையில் வைப்பதை உன் ஐந்து கணவர்களில், அதாவது இந்த அடிமைகள் யாரையாவது எடுத்து வந்து உன் காலடியில் வைக்கச் சொல்."

திரௌபதி பெரிதாகச் சிரிக்கிறாள். அந்த சிரிப்பு அங்கு கூடியிருந்த பலருக்கும் பெருத்த அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அது சாதாரண பெண்ணின் சிரிப்பாய் தெரியவில்லை. ஆயிரம் கரம் கொண்ட காளியின் சிரிப்பாய் தெரிகிறது. சபையில் நிசப்தம்.

சகுனி, தனது வலது மடியில் இருந்த காயை சற்று கலக்கத்துடன் சூது மேடை ஓரத்தில் வைக்கிறான்.

பாஞ்சாலி தன் விரித்த கூந்தலுடன், பரந்தாமன் அருளால் வளர்ந்த வஸ்திரத்தை மேலும் நான்கு சுற்று தன் மீது சுற்றிக் கொண்டு, மெதுவாய் மேடையை நோக்கி வருகிறாள். அரசசபையில் ஏற்பட்ட அவமானத்தில் வெளுத்த அவள் முகம் இன்னம் வெளிரி கணப்படுகிறது. கண்கள் சிவந்திருக்கின்றன. சபையில் நன்கு படர்ந்த வஸ்திரம், பரந்தாமனின் கருணையில் வளர்ந்த நீர்பொழியும் மேகம் போல் அங்கும் இன்கும் நீண்டு கிடக்கிறது. தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று, வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான்.

திரௌபதி: "அடிமை மன்னரே, சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் 'ஆமாம்' அல்லது தவறென்றால் 'இல்லை' என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி, 'நான் மோட்சத்திற்கு பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லை, சிறுவண்டு இல்லையா?', பதில் கூறும் சகுனி அவர்களே."

சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டம். தான் சிறுவண்டை 'அகஜ்ஜுவாலா' என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை, தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் எற்றிய வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் பூடகமாய் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் 'சிறுவண்டு இல்லையா' என்று கேட்டு பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டினாலும் காட்டுவாள். தான் சங்கேதமாய் சொல்லியபடி காயின் உள்ளே நகர்ந்து சிறுவண்டுகள் பகடை எண்ணிக்கையை விழும்படி இதுவரை செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது?

நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று 'ஆமாம்' என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான். துரியோதன், துச்சாதனன் முதலியோர்க்கு, சகுனியின் இந்த செயல் மேலும் பிரச்சனையை வளர்த்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

ஆனால் கர்ணன் சிந்தனை மட்டும் வேறு விதமாய் இருந்தது. திரௌபதி காயை காலால் எட்டி உதைத்ததை கண்ட துரியோதனன் கலக்கம் கொண்டான். ஆனால் தன்னை அடிமை என்று அவள் இருமுறை கூறிய போதும் காணாமல் இருந்துவிட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையாய் நடத்தப் படுகிறோமா அல்லது தான் அடிமையாக நடந்து கொள்கிறோமா? ஏதும் தோன்றவில்லை கர்ணனுக்கு. 'ஆமாம்! தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தை ஆள்கிறோம், அல்லது எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தை கட்டியாள்கிறோம்? துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?' கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.

திரௌபதி: "காந்தார தேசத்து மன்னரே! ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?"

சகுனி ஆசனத்தை விட்டு எழ ஆரம்பிக்கிறான்.

துரியோதனன்: "மாமா! சற்று அமருங்கள். இவள் காயை எட்டி உதைத்தாள். ஏதோ கேட்டாள். ஆமாம் என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டீர்கள். தற்போது காயை எடுத்துவந்து அவள் காலடியில் வைக்கப் போகிறீர்களா? கூடாது. இந்த ஐந்து அடிமைகளில் ஒருவர் அதைச் செய்யட்டும்."

திரௌபதி (திருதராஷ்டிர மன்னரைப் பார்த்து): "நல்ல வார்த்தை மன்னரே! காய்கள் தங்கள் காலடியில் இருக்கின்றன. குந்திபுத்திரர் காய்களை எடுத்து வர அனுமதி தருகிறீர்களா?"

மன்னன் திருதராஷ்டிரன் அரை குறையாய் நடந்தவற்றை கேட்டு மிகவும் கலங்கியிருந்தான். 'ஏதோ நமக்கு நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது. திரௌபதி தான் நினைத்ததை நடத்தப் போகிறாள். இந்த சபையில் நானும் ஒரு காய்தான். விதுரன் இது சவங்கள் வீற்றிருக்கும் சபை என்று முன்பே கூறிவிட்டான். பொருளில்லாமல் அவன் பேச மாட்டான். எது செய்யக்கூடியது, எது செய்யக்கூடாதது என்று ஏதும் புரியவில்லை. திரௌபதி காய்களை என்னை நோக்கித்தான் உதைத்தாளா? செய்த காரியத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் 'மன்னரே!'என்று அழைத்துக் கூறும் வார்த்தைகள் மரியாதையாய் தெரிகிறது. எது எப்படியோ! நடப்பது நடந்தே தீரும்', என்றவாறு அவன் சிந்தை ஓடியது.

திருதராஷ்டிரன்: 'யுதிஷ்டிரா! காய்களை நீயே எடுத்துக் கொடுக்கலாமே".

யுதிஷ்டிரர் மௌனமாய் நடந்து வந்து மன்னர் காலடியில் கிடக்கும் பகடைக்காய்களை இரு கைகளாலும் எடுக்கிறார். திரௌபதியும் பாதி வழி வரை யுதிஷ்டிரரை பின் தொடர்ந்து நின்று விடுகிறாள். திரும்பி வந்த யுதிஷ்டிரர் திரௌபதி முன்னால் காய்களை கையில் ஏந்தி நிற்கிறார். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீரால், யுதிஷ்டிரர் கைகளில் உள்ள காய்கள் மீதும், அவர் கால்களிலும் இரு கைகளாலும் ஏந்தி தெளிக்கிறாள் திரௌபதி. தன் வலது காலை அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, யுதிஷ்டிரரும் காலை மண்டியிட்டு, காய்களை அவள் வலது கால் மேல் வைக்க குனிகிறார். யுதிஷ்டிரர் குனிவதற்கு முன்பே திரௌபதி இன்னம் ஓரடி வந்து தன் வலது காலை சற்று மேலாகத் தூக்குகிறாள். யுதிஷ்டிரரும் தன் கைகளுக்கு நேரே தெரியும் அவள் காலின் மேல் காய்களை வைத்து தன் இரு கைகளாலும் அவள் பாதத்தை பற்றி பூமியில் படும்படி வைக்கிறார். யுதிஷ்டிரர் ஓரடி பின்னே நகர்ந்து நிற்க, திரௌபதியும் தன் வலது காலை சற்று மேலே தூக்கி முன்னும் பின்னுமாக ஆட்டி, காய்களை கைகளினால் உருட்டுவது போல உருட்ட ஆரம்பிக்கிறாள்.

சபையில் உள்ளவர்கள் யாவரும் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் இருக்கிறார்கள். திரௌபதி யுதிஷ்டிரரை அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை.

திரௌபதி: 'காந்தார மன்னரே! நான் ஆட்டத்திற்கு தயார். சூதிலும் ஒரு தர்மம் வேண்டும். நான் ஒரு எண்ணிக்கையைச் சொல்லி அது விழுந்தால் நான் வெற்றி பெற்றதாக வைத்துக் கொண்டால் எனது வெற்றி வாய்ப்பு பனிரெண்டில் ஒரு பாகம் தான். அதே சமயம் தங்கள் வெற்றி வாய்ப்பு பதினோரு பாகம். இதேபோல் தாங்கள் ஒரு எண்ணிக்கையை சொல்லி நான் காய்களை உருட்டினால் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு குறைவு, எனக்கு மிக அதிகம். ஒருவருக்கு மிக குறைவாகவும் மற்றவருக்கு அதிகமாகவும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இருவருக்கும் சரி சமமான வெற்றி வாய்ப்பு வேண்டும். சூதில் தேர்ந்தவரான தாங்கள் இதை சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இப்போது நான் ஒரு எண்ணிக்கையும், தாங்கள் ஒரு எண்ணிக்கையும் வெற்றிக்காக சொன்னால், இருவருக்கும் சம வெற்றி வாய்ப்பு உண்டு. இதில் ஏதாவது ஆட்சேபம் உண்டா?'

சகுனி: (மனதிற்குள்) 'இவள் புத்திசாலித்தனத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாது போல் தோன்றுகிறதே. தானாக பாதி, தன்னால் பாதி என்று இதுவரை நடந்த பாதகங்கள் யாவும் நம் பக்கத்திலிருந்து தான் வந்தவை. கர்ணன் குறுக்கிட்டு பேச, அவள் காலால் ஆடுவேன் என்றாள். துரியோதனனும் காலென்ன கையென்ன என்று கூறிவிட்டான். தவிர காயை அவள் காலடியில் வைத்திருந்தால் அதை அவளும் அவ்வளவு தூரம் மன்னர் சிம்மாசனம் வரை உதைத்திருக்க முடியாது. அதை கொலுமண்டபத்தின் முதல் படி வரை தான் எத்தியிருக்க முடியும். அப்போது காயில் உள்ள சிறு வண்டுகள் இறக்க வழியில்லை. மெத்தென இருக்கும் பட்டு மெத்தையின் மேல் வைத்த காய்களை அர்ச்சுனன் பாணம் போல் அரசர் காலடியில் விழச் செய்து விட்டாள். இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. கர்ணன் மட்டும் ஏதோ முனகினான். அவளும் பதிலுக்கு அங்க தேசத்து முதலடிமையே, அமரும் என்று கூறி அதையும் முடித்துவிட்டாள்.

போகட்டும்! காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வரும் சாக்கில் சிறுவண்டு உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா? இறக்காமல் இருந்தால், வண்டின் துணையோடு ஆட்டத்தை வெல்ல முயலலாம். இறந்து விட்டாலும் பாதகமில்லை. கையில் காயை எடுத்ததும் சிறுவண்டு எந்நிலையில் இறந்திருக்கின்றன என்பதை நொடியில் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் எண்ணிக்கையை நாமே முன்னால் கேட்டு ஏதாவது சூது வாது செய்யலாம். இதையும் துரியோதனன் இடத்தை விட்டு நகராதே இன்று கூறிக் கெடுத்தான். வண்டு பிழைத்திருக்க வழியில்லை. திடீரென இவள் உதைத்ததால், எப்போதும் அவை இருக்கும் நிலையில் இறந்து போயிருக்கும். அப்படியென்றால் ஐந்து தான் நிச்சயமான எண்ணிக்கை. இவள் ஒரு நொடி காயை உருட்டுவதை நிறுத்தினாலும் ஏதாவது சூசகம் கிடைக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்து இவள் காயை உருட்டுவதை நிறுத்த வைத்தால், காயைப் பார்த்து நிச்சயமான ஒரு முடிவிற்கு வரலாம்'. இவ்வாறு சிந்தித்து சகுனி மறுபடியும் எழுந்தான்.

துரியோதனன்: "மாமா! ஆசனத்தில் அமருங்கள். இவள் சொல்லும் யோசனையும் இவளைப் போலவே அழகாய் அல்லவா இருக்கிறது. முதல் ஆட்டத்தில் இவள் ஜெயித்தாலும் நமக்கு இரண்டாவது ஆட்டம் இருக்கிறது. அமர்ந்த படியே இவளுக்கு பதில் கூறுங்கள்".

சகுனி (மனதிற்குள்): 'இவனுக்காக விளையாடும், போராடும் நான் நம்பிக்கை குறைந்து, எப்படியோ என்னை நானே தேற்றிக் கொண்டு முயலுகிறேன். அவளும் காலிலுள்ள காயை சற்று நிறுத்துவதாகவும் தெரியவில்லை. இவனும் என்னை சற்று சுதந்திரமாய் விடுவதாய் இல்லை. என் கை, கால் இரண்டையும் கட்டி விட்டு, கழுத்தை மட்டும் நீட்டி யுத்தம் செய் என்கிறான் இந்த மூடன். அவளோ மத யானையைப் போல் பெரிதாகத் தெரிகிறாள். காயை மட்டும் பார்த்தால், மத யானையின் துதிக்கையில் இருக்கும் சிறு கரும்புத் துண்டு போல் தெரிகிறது. யானை எந்த நொடியிலும் வாயில் போட்டுக் கொண்டு விடும். பின் யானை வாய் கரும்பு போல் தான்! காலை ஆட்டும் திசையைப் பார்த்தால் என் தலையை நோக்கி முன்னும் பின்னும் ஆட்டுவது போல் தெரிகிறது. இந்த மூடன் சொன்னதும் சரிதான். கிட்டே போனால் நம் தலை தப்புமே என்னவோ! இருக்கும் இடத்திலிருந்தே ஏதாவது யுக்தி செய்ய வேண்டியது தான்'. எழ நினைத்த சகுனி ஆசனத்தில் அமருகிறான்.

திரௌபதி: "மாமா அவர்களே! தாங்கள் அங்கு அமர்ந்தபடியே பேசலாம். எனக்கு சரி சமமாய் குந்தி மைந்தர் மட்டும் நின்றால் போதுமானது. தாங்கள் நிற்பது அவ்வளவு கௌரவமாகாது. ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை வெற்றிக்காக சொன்னால் வாய்ப்பு சமமாகும் என்றேன். அதேபோல் காயை நான் உருட்டுவதால் தாங்கள் முதல் எண்ணிக்கையை கூறுங்கள். எனது வெற்றிக்கான எண்ணிக்கையை அடுத்துக் கூறுகிறேன்".

சகுனி (மனதில் சந்தோஷத்துடன்): "எனது எண்ணிக்கை ஐந்து".

திரௌபதி: "எனக்குப் பேராசையில்லை, என் எண்ணிக்கை ஒன்று".

எங்கும் நிசப்தம். சபையில் உள்ள பலரிடம் பலவித அபிப்பிராயங்கள், எண்ணங்கள், ஆசைகள். திருதராஷ்டிரன் மனத்திற்குள் எண்ணிக்கை ஐந்து என்று ஐயாயிரம் முறை சொல்லி முடித்திருப்பான்.

எல்லோரும் திரௌபதியையே பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் அறிவிக்கிறாள்: "எனது வெற்றிக்கான எண்ணிக்கை ஒன்று. இதற்காக நான் விரும்பி கேட்பதும் ஒருவரைத்தான்".

பாண்டவர் ஐவரையும் கேட்பாள் என்று நினைத்த பலர் மனத்திலும் யார் ஒருவரை இவள் கேட்கப் போகிறாள் என்ற துடிப்பு.

திரௌபதி: "மன்னர் திருதராஷ்டிரர் அவர்களிடம் நான் விண்ணப்பிப்பது, பகடை ஒன்று விழுமானால் குந்தியின் மைந்தர், எனக்கு முன்னால் எனக்கு சரியாக நிற்பவர் இவரை, மன்னர் சுதந்திர புருஷர் என்று அறிவிக்க வேண்டும். தோற்றால் நானும் பாண்டவர் ஐவருடன் அடிமை".

திருதராஷ்டிரன்: "பாஞ்சாலி, நீ பாண்டவர் ஐவரையும் வரமாய் வேண்டிக் கேட்டிருந்தாலும் உடனே தந்து விட வேண்டும் என்றிருந்தேன். ஆனால், வெற்றி தோல்வி இரண்டையும் சரி சமமாய் எதிர்கொள்ளும் சித்தத்துடன் கேட்கிறாய். உன் இஷ்டப்படி ஆகட்டும். பகடை ஒன்று விழுந்தால் இச்சபைக்கு வந்தவுடன் யுதிஷ்டிரன் எங்கு அமர்ந்தானோ அங்கு அமர்வான். உனக்கு என் ஆசிகள்".

திரௌபதி: "மன்னருக்கு வணக்கம். நான் கேட்கும் முன்பே கொடுத்த ஆசிகளுக்கு மறுமுறை வணங்குகிறேன். தர்மத்தின் துணையை நாடும் சபையோர்களே நானும் தர்மத்தையே விரும்புகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்".

கையிரண்டையும் கூப்பி, இதுவரை வலது புறங்காலில் ஆட்டிக்கொண்டிருந்த பகடைக்காய்களை தனக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே போடுகிறாள். பகடை ஒன்று!

பக்கத்தில் இருந்த விகர்ணன் ஆவலாய்ப் பார்த்து: "மன்னரே! பகடை ஒன்று. மந்திரி விதுரரே, பகடை ஒன்று. தாத்தா பீஷ்மரே பகடை ஒன்று. எல்லோரும் பாருங்கள் பகடை ஒன்று" என சந்தோஷ மிகுதியால் கூவுகிறான்.

துரியோதனன் முதல் ஆட்டம் தனக்கு தோல்வி என ஏனோ தீர்மானித்துவிட்டான். அவன் மனம் 'திரௌபதி பகடை ஒன்று என்று கேட்டு யுதிஷ்டிரன் ஒருவனை மட்டும் பெற்றுவிட்டாள். அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரில் ஒருவரையோ இல்லை நால்வரையுமே கேட்டு இவள் வெற்றி கொண்டாலும் பாதகமில்லை. எப்படியும் இந்திரபிரஸ்தம் நம்முடையது தான். இவளை அவையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். துச்சாதனன் கூந்தலைப் பற்றி தரதரவென்று இழுத்து வந்து அதைச் செய்து விட்டான். நல்ல வேளை அந்த கண்ணனின் மாயையோ அல்லது இவள் தந்திரமோ ஆடை வளர்ந்து ஒரு மாதிரியாக நடந்து முடிந்து விட்டது. தாய் காந்தாரி கூட அரசவையில் இதற்காக கோபத்தைக் கொட்டிவிட்டாள். வேறு ஏதாவது நடந்திருந்தால், தாயாருடன் மற்ற பெண்கள் என்ன, சபையில் உள்ள பலரும் சேர்ந்து நிச்சயம் என்னை காலால் துவைத்து பிண்டமாய் உருட்டி வைத்திருப்பார்கள்', என் நினைத்ததோடு, அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரையும் சந்தோஷமாய் கொடுக்க தயாராகி விட்டான்.

திருதராஷ்டிரன்: "விதுரரே! யுதிஷ்டிரனை அழைத்து அவனுக்குரிய ஆசனத்தில் அமர்த்துங்கள். மகளே திரௌபதி! மறுமுறை நீ ஆட வேண்டாம். மற்ற நால்வரையும் அடிமையல்ல என இதோ அறிவித்து விடுகிறேன். ஏன்? இந்திரபிரஸ்தத்தையும் திரும்பக் கொடுத்து விடுகிறேன். உன் சம்மதத்தை சொல்."

திரௌபதி: "மகளே! என மன்னர் அழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இருமுறை ஆடுவது என முதலிலேயே அறிவித்து விட்டேன். தங்கள் சம்மதத்தையும் பெற்றிருக்கிறேன். எந்த ஆட்சேபமும் இல்லது ஆட சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. தோல்வி ஏற்பட்டிருந்தால், மகளே! என்றழைத்த மன்னரே 'ஐவரோடு நீயும் அடிமை' என்றே அறிவிக்க நேர்ந்திருக்கும். அடிமை இரண்டாவது ஆட்டம் ஆடலாமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பலாம். ஆனால் இப்போது ஆடக்கூடாது என தடுப்பதற்கு குந்தி புத்திரர் மட்டும் தான் உரிமை பெற்றவர் ஆகிறார். ஏனெனில் கணவனுக்கு கட்டுப் பட்டவள் மனைவி. தர்மம் தெரிந்த அவர் என்னை இப்போது தடுக்க மாட்டார். அவருக்கு தெரியும் மனைவி தொடங்கிய நற்செயலை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டுமென்று. சற்றுப் பொருங்கள் மன்னரே! சித்தப்பா விதுரர், யுதிஷ்டிரரை அவர் ஆசனத்தில் அமர்த்த அழைத்துச் செல்கிறார். முதலில் யுதிஷ்டிரரை வணங்கி பிறகு பதில் கூறுகிறேன். மன்னியுங்கள் மன்னரே!"

திருதராஷ்டிரன்: "திரௌபதி! என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது. உன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கு, நீ சொன்ன பதிலென்ன? 'மொத்த பெண்மையின் சார்பில் மன்னரை மன்னிக்க நான் யார்' என கூறி விட்டாய். இங்கு யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். நான் உன்னை மன்னிப்பதா? என்னை யார் மன்னிப்பது?"

யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்ந்ததும் திரௌபதி அவரை வணங்குகிறாள்.

திரௌபதி: "குந்தி புத்திரரே! என்னை மன்னியுங்கள். தனியாக நின்ற அபலை அவசரத்தில் இருமுறை சூதாடுவேன் என அறிவித்துவிட்டேன். என்னை முதல் ஆட்டத்திற்கு பணயமாய் வைத்தேன். முதல் ஆட்டத்தில் வென்றால், தர்மத்தை உணர்ந்த தாங்கள் தடையேதும் சொல்ல மாட்டீர்கள் என திடமாய் நம்பியிருந்தேன். பகடைக் காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வந்து, தாங்கள் என் காலில் காயை வைத்த போது பலரும் தங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை என்றே நினைத்திருக்கக் கூடும். அந்த நிலையில் வேறு வழி ஏதும் தெரியவில்லை. மாமா சகுனியின் ஆயுதமான பகடைக்காயை மன்னர் காலடியில் வைத்து ஆசி பெற நினைத்தேன். கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்ததால், காலால் வேகமாய் உதைத்து, போர் புரியும் வீரன் குருவின் காலடியில் பாணம் விடுவது போல செய்யும்படி ஆயிற்று. அவமரியாதை செய்யும் எண்ணம் தங்களை கணவராகப் பெற்ற எனக்கு இல்லை. மாமா சகுனிக்குத் தெரியும் அவர் ஆயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென்று. ஆடுவதற்கு முன்பு அதன் வீர்யத்தைக் குறைக்க அது ஒன்றுதான் வழி. தவிர எதிர்பாராத மரணம் நேர்ந்தால், காரணமானவர் அதற்குரிய சடங்குகளையும் செய்யலாம். தங்களிடம் எடுத்துச் சொல்ல வழியில்லை. மோட்சத்திற்கு வழி என்று நான் சொன்ன போதே மரணம் நிகழ்ந்து விட்டது. அதை மாமா சகுனி மட்டும்தான் அறிவார். பின் அஸ்தி கரைப்பது, தங்கள் கையால் நடக்க வேண்டும் என நான் விரும்பியபடி, காய்களை தாங்கள் ஏந்தி வந்தீர்கள். கண்ணில் வழியும் கண்ணீரை கங்கையாக பாவித்து, தங்கள் கையில் தெளித்து அதையும் தாங்களே செய்து முடிக்கும்படி செய்தேன். இது மாமா சகுனிக்கு முழுவதுமாய் புரிந்திருக்கும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

பின்பு தாங்கள் என் கால்களில் காயை வைத்து, கைகளால் பற்றி பாதம் தரையில் படும்படி வத்ததை இங்கு சில மூடர்கள், நான் தங்களுக்கு செய்த அவமரியாதை என நினைத்து அகமகிழ்ந்தார்கள். கற்றோரும் சான்றோரும் சற்று புரிந்தும் புரியாமலும் குழம்பினார்கள், அவர்களுக்காக இதைச் சொல்கிறேன். ஒரு ஆணும் பெண்ணும் மணமுடித்து கணவன் மனைவியானதும் குடும்பம் தோன்றுகிறது. கணவர் மனைவி என இருவர் ஆனாலும் குடும்பம் ஒன்றுதான். இரு உடல்களும் ஓர் உயிரும் என வழக்குப்படி, கை கால்களை, கணவனுடையது மனைவியுடையது என தனித்தனியாக பார்க்காமல் யுதிஷ்டிரர் தன் கையால் தன் காலைப் பிடித்ததாய் எண்ணிப் பார்த்தால் அதில் தவறு ஏதும் தெரியாது. யுதிஷ்டிரரே! தாங்கள் என் கால்களைப் பற்றி பாதம் பூமியில் படியும்படி வைத்ததின் மூலம் சொக்கட்டான் ஆட தாங்கள் சம்மதமும் வெற்றி பெற ஆசியும் கொடுத்ததாய் கொண்டேன். என்னை மணம் புரிந்தவரே! நான் இப்போது தர்ம சங்கடத்தில் இருக்கிறேன். எனது கணவர் என்ற முறையில் எனக்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும். முதலில் நான் தனியாக இருந்த போது, அந்த இக்கட்டான சமயத்தில் என்னையே பணயமாய் வைப்பதைத் தவிர வழி ஏதும் தென்படவில்லை. ஆனால் தற்போது நிலமை வேறு - நான் இப்போது தங்களில் பாதி. சுதந்திர புருஷனாக கணவன் பக்கத்தில் இருக்கும் போது, என்னால் என்னையே பணயமாய் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதே போல் மனைவியும் தன் மறு பாதியான கணவனையும் பணயமாய் வைக்க முடியாது. இப்போது நான் இருமுறை ஆடுவேன் என்ற சொல்லின் படி, இரண்டாம் ஆட்டம் ஆட வழி கேட்டு தங்கள் முன் நிற்கிறேன். இந்த காரணத்தினால் தான் மன்னரிடம் என்னை மன்னியுங்கள் என்று சொன்னேன். தர்மத்தை உணர்ந்த தாங்கள், எனக்கு இரண்டாம் முறை ஆட அனுமதியையும் பணயம் வைப்பதற்கு வழியையும் காட்டுங்கள்.”

யுதிஷ்டிரர்: "பாஞ்சாலி, உன்னை நன்கு உணர்வேன். நாம் இருவரும் பணயமாய் இரண்டாம் ஆட்டத்திற்கு உட்படுவதை தவிர எனக்கு வழி ஏதும் தெரியவில்லை. சூதில் ஒன்றுக்கு இரண்டாய் வெற்றி பெருவாய், என் ஆசிகள்!"

திரௌபதி யுதிஷ்டிரரை வணங்கி, திருதராஷ்டிரர் பக்கம் திரும்பி, "மன்னரே! இரண்டாம் முறை ஆடுவேன் என்று கூறி தர்ம சங்கடத்தில் இருந்த எனக்கு யுதிஷ்டிரர் அனுமதி கொடுத்து, பணயத்திற்கு தன்னையும் என்னையும் காட்டி விட்டார். அவர் சொன்ன வார்த்தைப்படி ஒன்றுக்கு இரண்டு என்ற படி எங்கள் இருவரையும் பணயமாய் வைத்து, மற்ற நால்வரையும் சுதந்திர புருஷர்களாய் எல்லோரும் பார்ப்பதற்கு, இரண்டாம் ஆட்டத்திற்கு நான் தயார்".

திருதராஷ்டிரன் உண்மையில் விசனம் அடைந்தான். 'பாண்டவர் ஐவர் மட்டும் அடிமை என்ற நிலையில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடாது. பாஞ்சாலி என்ற நெருப்பை அடிமை என்ற பெயரில் மடியில் கட்டிக் கொண்டால் என்னவாகும்? இரண்டாம் ஆட்டத்தில் தோற்பதே நமக்கு மிகப் பெரிய வெற்றி. ஆனால் துரியோதனனும் சகுனியும் என்ன செய்யப் போகிறார்களோ?' இரண்டாம் ஆட்டத்தில் திரௌபதி வெல்ல வேண்டும் என திருதராஷ்டிரன் மனம் புலம்ப ஆரம்பித்துவிட்டது.

துரியோதனனுக்கு தான் நினைத்தபடி பாண்டவர் மீதி நால்வரை மட்டும் தான் இவள் கேட்கிறாள். இந்த முறை மாமா தோற்றாலும், நமக்கு வெற்றிதான். நாடு முழுவதும் நமக்குத்தான், என்று மனம் குதூகலித்தது.

சகுனி மனத்தில் கலக்கம். 'திரௌபதி மற்றவர்களுக்கு என்ன புரிய வைத்தாளோ என்னவோ, எனக்கு விபரமாய், "சிறுவண்டை கொன்றேன்; மன்னர் காலடியில் மூண்டிருக்கும் அரசுப் பேராசை என்னும் நெருப்பில் சுட்டெரித்து சாம்பலாக்கினேன்; என் கணவர் யுதிஷ்டிரர் கையினால் அதையும் கரைத்துவிட்டேன்; உன் அஸ்திரத்தின் சுவடு கூட இல்லாமல் செய்துவிட்டேன்" என்று சொல்லிவிட்டாள்.

இப்போது என் இடது மடியில் இருக்கும் பகடைக்காயை, முன்பு மாண்ட என் முன்னோர்கள் எலும்பில் செய்து வைத்திருக்கிறேன். அதில் துர்தேவதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உட்செலுத்தி, என் எண்ணப்படி ஆடும்படி செய்திருக்கிறேன். இதை எடுத்து ஆடலாம். ஆனால் திரௌபதி அதோ அனாதையாய் கிடக்கும் அந்த கட்டொழிந்த செந்நிற காய்களை வைத்து மறுமுறையும் ஆடுவேன் என்று சொல்லிவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு என்ன வழி?' சகுனியின் சூதுமனம் எண்ணமிட்டது.

திரௌபதி அவை நடுவே குவிந்திருந்த வளர்ந்த வஸ்திரத்தை மேலும் மேலும் தன் உடலில் சுற்றிக் கொள்கிறாள். அவள் வஸ்திரம் உடலோடு ஒட்டியதாகவும், அதே சமயம் மாலை சூரியன் மஞ்சள் கிரணங்கள் போலும் ஜொலிக்கிறது.

திரௌபதி: "மாமா அவர்களே! இரண்டாவது ஆட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன். சொக்கட்டான் ஆட்டத்தில், தங்கள் செந்நிற காய்கள், அதாவது சொக்கட்டான் போரில் தங்கள் முதல் அஸ்திரம் தோற்றுவிட்டது. இந்த இரண்டாம் ஆட்டத்திற்கு இரண்டாம் அஸ்திரம் இருந்தால் அதை எடுத்து தாங்கள் பிரயோகிக்கலாம். அது மற்றொரு செந்நிற காயானாலும் சரி அல்லது தந்தம் போன்ற வெண்ணிற காயானாலும் சரி, தங்கள் சௌகரியம்."

கர்ணன் மனம், 'போர்', 'தந்திரம்', 'அஸ்திரம்' என்ற வார்த்தைகளை கேட்டதும், 'திரௌபதி நிச்சயம் சொக்கட்டான் காயை வைத்து விளையாடவில்லை. மாமா சகுனி அடிக்கடி சொல்வது போல் அவர் அஸ்திரங்கள் முழுவதையும் தவிடு பொடியாக்கப் போகிறாள்' என்று எண்ணமிட்டது. 'முதலில் வைத்த சிகப்பு மரக்காய், வெறும் சொக்கட்டான் காய் என்றால் அதையே ஏன் எடுத்து ஆடக்கூடாது? மாமா அவர்கள் இப்போது வெள்ளைக் காய்களை எடுத்தால் அது நிச்சயம் ஒரு அஸ்திரம்தான். திரௌபதி அதை வைத்து ஜெயித்தால் நிச்சயம் அவள் இந்த ஐந்து வீரர்களின் வீரமனைவிதான்.' திரௌபதியின் வீரத்தை, விவேகத்தை பற்றி எண்ணமிட ஆரம்பித்தான் கர்ணன்.

துரியோதனன் மனத்தில் 'இவள் யுத்தம், அஸ்திரம் என்று மாமாவைப் போல் பேசினாலும், கையடக்கமான இந்த காய்களில் விசேஷமாய் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. மாமா காயை உருட்டினால் ஏதோ சூதுவாது செய்து வெற்றி பெற்றுவிடுவார். அதைத்தான் இவள் நான் ஆடுவேன் என்று கூறி தடுத்துவிட்டாள். இரண்டாம் முறையும் இவள் ஜெயித்தாலும் மோசமில்லை. தான் எண்ணியபடி மற்ற நால்வர்களை மட்டும்தான் இவள் மீட்க முடியும். அரசு முழுவதும் நமக்குத்தான்' என்று எண்ணங்கள் கொப்பளிக்க ஆரம்பித்தன.

ஆட வந்த சகுனி ஆடிப்போய்விட்டான். 'இவள் யுத்தத்தில் எதிர்வரும் அஸ்திரத்தைப் பார்த்து, அதை முறியடிக்கும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வீரனைக் காட்டிலும், அடுத்த அஸ்திரமான உன் வெள்ளைக்காயை எடு, என சூளுரைக்கிறாள். இதையும் இவள் வென்றுவிடுவாளா? எப்படியோ அடுத்த அஸ்திரத்தை எடு என்று கூறி, இடது மடியில் உள்ள காய்களை எடுத்துவிட சம்மதம் கொடுத்துவிட்டாள். இதை எடுத்து முன் போல் சூதுமேடையில் வைத்தால் முன் செய்தது போல் இவள் மன்னர் காலடியை நோக்கி மறுமுறையும் உதைத்தால் இதில் உள்ள துர்தேவதைகள், மன்னரையே தாக்கினாலும் தாக்கும். காலால் ஏவினால் இன்னமும் மூர்க்கமாய்த் தாக்கும். இவள் காலடியில் வைத்தால், இதைத் தொடும் பண்டவர்களை செயலிழக்கச் செய்யலாம். பிறகு நடப்பதை வைத்துத் தான் நாடகத்தைத் தொடர முடியும்'. சகுனி யுத்த வியூகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான்.

திரௌபதி (கம்பீரமாக): "மாமா அவர்களே! காய்களை எடுத்து எங்கே வைப்பது என்று யோசிக்கிறீர்களா? முன்பு சொன்னதையே திரும்ப சொல்கிறேன். என் காலடியில் வந்து வைக்கிறீர்களா? அல்லது சூது மேடையில் வைக்கிறீர்களா?"

சகுனி உடனேயே தன் இடது மடியில் இருந்த வெள்ளைப் பகடைக் காய்களை எடுத்து, வேகமாய் வந்து திரௌபதியின் காலடியில் வைக்கிறான்.

கர்ணன் சற்று துணுக்குருகிறான். 'அஸ்திரம் என்று திரௌபதி சொன்னதை, காலடியில் வைப்பதன் மூலம் இவை வெறும் காய்கள்தான் என அவையோருக்கு உணர்த்த விரும்புகிறாரா என்ன?' கர்ணன் யோசனை அப்படி.

துரியோதனன் எண்ணமிடுகிறான். 'மாமா அவர்கள் மேடையில் வைத்தால், இவள் மறுபடியும் எட்டி உதைத்து மன்னர் காலடியில் விழச் செய்யும் சாகசத்தை தவிர்ப்பதற்காக, தன் கௌரவத்தையும் விட்டுக் கொடுத்து அவள் காலடியில் வைத்து அவள் திட்டத்தை முறியடித்துவிட்டார்'.

சகுனி எண்ணுகிறான்: 'மேடையில் வைத்தால் மன்னரைத் தாக்க வாய்ப்பு உண்டு. காலடியில் வைத்தால் அஸ்திரத்தை காலடியில் வைக்க மாட்டேன் என்று எண்ணி இவள் ஏமாற வாய்ப்பு உண்டு. நடப்பதை வைத்து என்ன நடக்குமென்று பிறகு யோசிப்போம்'. எதிர்நோக்குகிறான் சகுனி.

திரௌபதி: "மாமா அவர்களே! காலடியில் சரணமாய் வந்தவர்களுக்கு அனுகூலம் செய்ய வேண்டியது கடமையாகிரது. என்னால் முடிந்த வரை நிச்சயம் அதைச் செய்வேன். தவிர காக்கும் தெய்வங்களையும், தேவதைகளையும் வேண்டி, வேண்டியதைச் செய்வேன். இது நிச்சயம். இப்போது பகடை எண்ணிக்கையை தாங்கள் கேட்கிறீர்களா அல்லது நான் கேட்கட்டுமா?"

சகுனி (மனத்துள்): 'நிச்சயம் இவள் பஞ்ச பாண்டவர்களை அல்லது மீதி நல்வரை மனத்துள் கொண்டு நான்கு அல்லது ஐந்து என்று தான் எண்ணிக்கையை கேட்பாள். சதுர் வேதங்களை இந்த தேவதைகளுக்கு பிடிக்காது. பஞ்ச பூதங்களிடம் ஒரு பயம். நான்கு, ஐந்து இவை இரண்டும் இவள் கேட்டால் விழாது. நான் மிகவும் உற்சாகப் படுத்தினால் தான் இந்த இரண்டு எண்ணிக்கையும் விழும். ஆக திரௌபதியை முதல் எண்ணிக்கையை கேட்க வைத்தால் நல்லது'. இவ்வாறு எண்ணி சகுனி கூறுகிறான்: "முதல் முறை நான் கேட்டு விட்டேன். இந்த இரண்டாம் ஆட்டத்தில் எண்ணிக்கை என்னுடையது இரண்டாவதாய் இருக்கும். முதல் எண்ணிக்கை உன்னுடையதாக இருக்கட்டும்".

திரௌபதி: "நல்லது மாமா அவர்களே! தங்களுக்கு நன்றி. நான் எண்ணிக்கையில் சற்று குழம்பியிருக்கிறேன். இதோ பகடைக்காயை இடமாக வந்து கேட்கிறேன்" என்று கூறி இடது பக்கமாக காயை சுற்றி வருகிறாள். பலமுறை இடமாக வந்த திரௌபதி சட்டென யுதிஷ்டிரரைப் பார்த்தபடி நின்று விடுகிறாள். அவளுக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையில் காய்கள்.

யுதிஷ்டிரரைப் பார்த்து திரௌபதி: "குந்தி புத்திரரே! ஆசீர்வதியுங்கள். முதல் முறை ஆட்டத்தில் வெற்றிபெற காலில் காயை வைத்து வாழ்த்தினீர்கள். இப்போது பலர் விமோசனத்திற்காக என்னை ஆசீர்வதியுங்கள். இதற்காக திரௌபதி வேண்டி நிற்கிறேன். நான்கு வேதங்களையும் முறைப்படி உணர்ந்து ஓதும் சான்றோர்களே! பஞ்ச பூதங்களையும் வழிபடும் நல்லோர்களே, பெரியோர்களே! எனக்கு அருள் புரியுங்கள். பல வருடங்களாக, விமோசனம் வேண்டி நிற்பவர்கள் சார்பில் கேட்கிறேன், விமோசனம் தரும் புண்ணிய பலத்தை எனக்குத் தாருங்கள்", எனக் கூறிக் கொண்டே தன் இடது காலை எடுத்து பகடைகள் மேல் கூப்பிய கரங்களுடன் வைக்கிறாள்.

அந்த சில நொடிகளில் அவையில் ஒரே வெப்பம்; எதோ எரிவது போல் எல்லோர் மனத்திலும் எண்ணம். பிறகு குளிர் காற்று. கண் பார்வை இல்லாத திருதராஷ்டிரன் முதல் கண்மூடி நிற்கும் பாண்டவர் மீதி நால்வர் வரை எல்லோரும் இதை உணர்கிறார்கள்.

திரௌபதி இடது காலை காய்களை விட்டு எடுக்கிறாள். அவை இன்னும் சற்று வெளுத்து, வெண்சாம்பல் நிறத்தில் தெரிகின்றன. மெதுவாக இடது கால் விரல்களால் எடுத்து வலது பாதத்தின் மேல் வைத்து, நான்கு அடி நடந்து சூது மேடையை நோக்கி வந்து நின்று கொண்டு, சகுனியைப் பார்த்து, "மாமா அவர்களே! என் வெற்றிக்கான எண்ணிக்கை ஐந்து. தங்கள் எண்ணிக்கை என்ன?" எனக் கேட்கிறாள்.

சகுனி: "என் எண்ணிக்கை ஒன்று"

திரௌபதி: "நல்லது. நான் முதல் ஆட்டத்தில் ஒன்றைக் கேட்டேன். யுதிஷ்டிரர் ஒருவரை அடைந்தேன். இந்த முறை நால்வருக்காக நான்கு என்று கேட்கலாம். ஆனால் என் கணவர்கள் ஐவரும் சமம் என்று எல்லோரும் அறிந்து கொள்வதற்காக ஐந்து என்று கேட்கிறேன். மேலும் பாழும் கிணற்றில் விழுந்த ஐவரை மீட்க வேண்டிய நிலையில் உள்ளவர், கடைசியாக விழுந்த ஒருவரை மீட்பது நல்லது. மீட்ட அவர் உதவியுடன் மற்ற நால்வரையும் மீட்கலாம்.

ஐவரையும் ஒரே முறையில் மீட்பேன் என எண்ணுவது, ஆணவம் ஆகலாம். அதே சமயம் முடியாமல் போய், நானும் பாழும் கிணற்றில் விழ வழி வகுக்கலாம். ஆகையால் தான் முதல் முறை யுதிஷ்டிரரை மீட்டு அவர் ஆசியுடன், அருளுடன் மற்றவர்களை மீட்பது என்ற முடிவிற்கு வந்தேன். ஐவரும் சமம் என்பதை எல்லோரும் அறிவதற்காக பகடை ஐந்து நான் வேண்டுகிறேன். இதோ! மாமா சகுனி அவர்களே! சொக்கட்டான் மேடையில் விரித்திருக்கும் இந்த சிறு சொக்கட்டான் துணியைப் பாருங்கள். இதன் நடுவே நான் காய்களைப் போடப் போகிறேன். பகடை ஐந்து விழுந்தால் உடனே நான்கு முனைகளாலும் அதை மூடி எடுத்துக் கொண்டு நீங்கள் அரச அவையை விட்டு உடன் போக வேண்டும். தங்கள் விருப்பப்படி, உசிதப்படி மற்ற காரியங்களைச் செய்யுங்கள். அநேகமாய் நான் கூறியது அனத்தும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். தாங்கள் அவையை விட்டு வெளியேறியதும் தான் மற்றபடி ஏதும் நடக்க முடியும். தங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்."

ஒரு நொடியில் திரௌபதி காயை ஒரே ஒரு முறை முன்னும் பின்னும் ஜாக்கிரதையாக ஆட்டி, பகடைக் காயை சொக்கட்டான் விரிப்பின் நடுவில் போடுகிறாள்.

சகுனி சற்றும் தாமதியாது "பகடை ஐந்து துரியோதனா!" என்று கூறி இரு கைகளாலும், நான்கு முனைகளையும் பற்றி காயை மூடி எடுத்துக் கொண்டு சபையை விட்டு வெளியேறுகிறான்.

சபையில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. விதுரர் மட்டும் நடந்ததை எதிர்பார்த்தவர் போல் உடன் எழுந்து மன்னர் திருதராஷ்டிரரிடம் நடந்ததை விளக்கி, பாண்டவர் நால்வரையும் அவர்கள் ஆசனத்திற்கு அழைத்து வந்து அமர வைக்க வருகிறார்.

திரௌபதி சபை நடுவே நிற்கிறாள். அவள் உடலோடு ஒட்டிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வஸ்திரம், கொழுந்து விட்டு எரியும் தீயின் நாக்குகள் போல் தெரிகிறது. ஆனால் தீயில் மேலே எழும் புகை மட்டும் ஏன் கீழ் நோக்கி ஆடுகிறது? அது புகையில்லை; திரௌபதியின் விரிந்த கருங்கூந்தல்தான் அது.

சகுனி, தன் முன்னோர்கள் அஸ்தியை கரைக்க நதிக்கரைக்கு சென்றுவிட்டான். கர்ணன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். துரியோதனன் ஆட்டம் இரண்டிலும் தோற்றபோது, இந்திரப் பிரஸ்தத்தை வென்றுவிட்டதாக எண்ணி, மனத்துள் மகிழ்கிறான்.

திருதராஷ்டிரன் சபையில் இருந்த சஞ்சயனை அருகில் அழைத்து, "நான் காதால் கேட்கக் கூடியவற்றை எல்லாம் கேட்டேன். திரௌபதி நடுவில் ஒரு உண்மை சொன்னாள். 'மன்னர் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், நல்ல கண்கள் படைத்த நல்லவர்கள், பார்த்ததை எடுத்துக் கூற உண்மையை அறிய முடியும்' என்று சொன்னாள். அந்த வார்த்தை எனக்கு ஒரு தெளிவை தந்தன. இப்போது நீ சபையில் யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்ததை பார்த்தபடி சொல். அத்துடன் உன் மனம் எப்படிப் பார்க்கிறது என்பதையும் கூறு", என்றான்.

சஞ்சயன் ஒவ்வொருவர் நிலைமையையும் எடுத்துக் கூறுகிறான். “சகுனி குனிந்த தலையுடன் சொக்கட்டான் காய்களை பத்திரமாய் மூடி எடுத்துக் கொண்டு அவையை விட்டு வெளியேறிவிட்டார். நடந்ததை வைத்து ஊகிக்கும் போது அவர் தனக்கு வேண்டிய முக்கியமானவர் அஸ்தியைத்தான் எடுத்துச் செல்கிறாறோ என நினைக்கத் தோன்றுகிறது. பின் சபையை விட்டு வெளியேறிய பிறகு தான் மற்றவை நடக்க முடியும் என்று திரௌபதி கூறியதின் பொருள் என்ன? தங்கள் மைத்துனர் சகுனியும் சப்தமில்லாமல் சென்று விட்டார். கர்ணன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். ஆனால் எதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என எனக்குப் புரியவில்லை. பாண்டவர்கள் ஐவரும், முகத்தில் எவ்வித சலனமும் இன்றி, திரௌபதியின் கால்களை மட்டும் பார்த்தவாறு இருக்கிறார்கள். சபையில் உள்ள மக்கள் முகத்தில் வெறுப்பும், அருவெறுப்பும் தான் தெரிகிறது".

திருதராஷ்டிரன்: "சஞ்சயா! திரௌபதி எப்படி இருக்கிறாள்?"

சஞ்சயன்: "மன்னரே! பார்பதற்கு கண் கூசும்படி திரௌபதி ஜ்வலிக்கிறாள். சபை நடுவே நிற்கும் அவள் இதுவரை வளர்ந்த வஸ்திரத்தை, நடக்கும் போதும், பேசும் போதும் இடைவிடாது தன் மீது சுற்றிக் கொண்டு வந்தாள். இராம காதையில் அனுமன் வால் முதலில் வளர்ந்து, பின் சுருங்கி, வைத்த தீ இலங்கையை அழித்தது. அதுதான் உடன் மனதில் வருகிறது. இந்த வார்த்தை தங்களுக்கு விசனத்தைத் தரலாம். அபசகுனம் இல்லையா என்றும் தோன்றலாம். ஆனால் திரௌபதி அப்படித்தான் தோன்றுகிறாள். ஆமாம், அவள் உடுத்தியிருக்கும் சிகப்பு மஞ்சள் கலந்த வஸ்திரம் தீ நாக்குகள் போல் ஜ்வலிக்கிறது. தன்னைத்தானே சுற்றி அவையை அவள் நிமிர்ந்து பார்க்கும் போது தெரியும் அவள் வெளிர் முகம் தீ நடுவே தெரியும் வெளிர் சுடர் போல் மின்னுகிறது. அவள் நிமிர்ந்த பார்வையை சந்திக்க முடியாத சபையில் உள்ளவர் அனைவரும் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்..."

திருதராஷ்டிரன்: "என்ன ஆனால்..."

சஞ்சயன்: "ஆனால் அவள் விரிந்த கூந்தல் தீயின் நடுவே எழும் கரும் புகை போல் தெரிகிறது. அது துச்சாதனன் கைகளால் தீண்டி இழுத்ததாலோ என்னவோ, அது கீழ் நோக்கியே அசைகிறது. புகை எவ்வழியோ அவ்வழியே நெருப்பின் ஜ்வாலையும் வரும். இந்த சபையில் நெருப்பு எப்போது இறங்கப் போகிறதோ தெரியவில்லை."

திருதராஷ்டிரன் நெருப்பின் ஜ்வாலையையோ புகையின் கருமையையோ பார்த்தது இல்லை. ஆனால் நெருப்பின் உஷ்ணத்தையும் புகையின் கமரலையும் உணர்ந்தவன் தான். புகை சுடாமலே மூச்சு முட்ட வைத்து கொன்று விடும் என்ற அச்சம் அவனுக்கு உண்டு.

திருதராஷ்டிரன் மனத்தில் ஏதோ நினைத்து "சஞ்சயா!" என்றழைத்தான்.

சஞ்சயன்: "சற்று பொறுங்கள் மன்னரே! திரௌபதி கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஏதோ சொல்ல விழைகிறாள். அதை முதலில் கேட்போம்".

திரௌபதி: "சபையோர்களே கேளுங்கள்! எந்த துச்சாதனன் என் கூந்தலை பிடித்து சற்றும் யோசியாது இழுத்தானோ அந்த கைகளை சகதி எது சந்தனம் எது என்று தெரியாத அகப்பையை யார் எங்கு எப்படி எடுத்துப் போட்டர்களோ, அங்கு அப்படி விழுந்து கிடப்பது போல தரையில், சகதியில் இற்று விழ நான் பார்க்க வேண்டும். எந்த துரியோதனன் தன் துடைகளை தானே தட்டிக் கொண்டு அரச அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை இச்சபையில் பேசினானோ அந்த துடைகளை முறித்து கூழாக்கி அதை என் விரிந்த கூந்தலுக்கு நறுமண சாந்தாகப் பூசவேண்டும். இது பாஞ்சாலியின் விருப்பம், சபதம்".

பீமன் எழுந்து சொன்னான்: "பாஞ்சாலியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம். இது சத்தியம்".

அர்ச்சுனன்: "பாஞ்சாலியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து நேராகப் புறப்படும், பல வளைவுகளை உடைய பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன்".

முன் சஞ்சயன் கூறியதை கேட்டு மிகவும் விசனித்து இருந்த திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் என்ற எண்ணத்துடன், "பாஞ்சாலி, உனக்கு வரம் தருகிறேன் என்றேன். அதை பெரியப்பவிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லையா?" என்றான்.

திரௌபதி: "பெரியப்பா! எனக்கு என் கணவர்கள் வேண்டும். இந்த சபையில் சூதிடமிருந்த அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். தவிர க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் அதை வென்று பெறப் போகிறார்களா? அல்லது தாங்கள் தந்து பெறப் போகிறார்களா? என்று எனக்கு தெரியாது".

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு, "யுதிஷ்டிரா! இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும், பாஞ்சாலியும் சென்று ஓய்வெடுங்கள்", என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் அனேகமாய் பலரும் தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

ஞாயிறு, நவம்பர் 27, 2005

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும் - ஒன்று

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்

பகுதி ஒன்று

மூன்று முறை முயற்சித்தும் பதிவு பிளாக்கருக்குள்ளே தொலைந்து போனதாலே இந்த மீள் பதிவு! இந்த முறையாவது பதிவு நிலைக்கும் என்று நம்பிக்கை!

இயற்கையாகவே துரியோதனன் பொறாமை கொண்டவன். யுதிட்டிரனின் ராஜசூய யாகம் சென்று வந்தபின் அதில் அசூயையும் சேர்ந்து கொண்டது. பாண்டு புத்திரர்களின் ஐஸ்வர்யத்தை முழுவதையும் அபகரிக்க வேண்டும், என்ற எண்ணம் பெருகிப் பெருகி, மாமா சகுனியிடமும், நண்பன் கர்ணனிடமும் வாய்விட்டு புலம்பும்படி செய்துவிட்டது.

சகுனியும் பல நாட்கள் தீவிரமாக சிந்தித்து, ஒரு நாள் துரியோதனையும் கர்ணனையும் தன் இருப்பிடத்திற்கு வரச் சொன்னான்.

சகுனி: “துரியோதனா! சில நாட்களாக, எங்கள் இருவரிடமும் உன் எண்ணத்தை வாய்விட்டு சொல்லி வருகிறாய். நான் யோசித்து ஒரு வழி உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலம் பாண்டவர்கள் ஐஸ்வர்யம் அனைத்தையும் அவர்கள் நாட்டையும் வென்று விடலாம். அதற்கு ஒரு நாடகம் நடத்த வேண்டும். நாடகம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டுமானால் ஒரு முறையாவது ஒத்திகை பார்க்க வேண்டும்.”

துரியோதனன்: “நாடகமா? போர் இல்லாத வெற்றியா?”, அவநம்பிக்கை தொனிக்க விழைகிறான்.

சகுனி: “என்ன நாடகம் என்று சொல்லுகிறேன். அதைக்கேள்! யுதிட்டிரனையும் மற்ற பாண்டு புத்திரர்களையும் இங்கு விருந்துக்கு அழைக்க வேண்டும். பிறகு நிதானமாக சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யுதிட்டிரனை ஆட அழைக்க வேண்டும். ஆட ஆரம்பிக்கும் முன் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருப்பதற்காக சில பொற்காசுகள் வைத்து விளையாடலாம் என்று ஆரம்பித்து அதற்கு யுதிட்டிரன் சரி என்று சொன்னதும், வலை விரிப்பது போல் பகடைப் பாயை விரிக்க வேண்டும். பிறகு பகடை அஸ்திரத்தை எடுப்பதற்குமுன், ஒவ்வொரு முறை காயை உருட்டும் போதும் சில பல பணய பொருள்கள் வைக்கலாம் என்று ஆரம்பித்து, ஆட்ட முடிவில் யாரிடம் பணயம் வைக்க ஏதும் பொருள் இல்லையோ அவர்கள் நாட்டை - இராஜ்யத்தை வைத்து ஆட வேண்டும் என்று முடிக்க வேண்டும்.”


துரியோதனன்: “'மாமா, புரிகிறது! சொக்கட்டான் ஆடி வெல்லலாம் என்று சொல்கிறீர்கள். நாடகத்தில் நீங்களும், நானும், கர்ணனும் வேண்டுமானால் நடிக்கலாம். யுதிட்டிரன் வந்து நடிக்க வேண்டும். அவன் வந்தாலும், அதற்கு மேலாக பகடைக் காய்கள் நடிக்க வேண்டும். போகாத ஊருக்கு வழி என்பார்கள். இப்போது போகாவிட்டாலும், எப்போதாவது போகும் போது கேட்ட வழி உபயோகப்படும். ஆனால் தங்கள் யோசனை 'கிட்டாத பழத்திற்கு கொட்டாவி' என்று தான் முடியும். பழமே கிட்டாத போது வாயைத் திறந்து மூடினால் என்ன பயன்? இவ்வளவு நாட்கள் யோசித்து இப்படி ஒரு வழி. ஆட்டம் முழுவதும் அனைத்தும் தோற்று யுதிட்டிரன் நாட்டை வைக்கும் போது, நான் எதிர் பணயமாக எந்த நாட்டை வைப்பது? இந்த நாடு இன்னும் என் கைக்கே வரவில்லை! வரும் முன்பே பணயம்? இது சரிப்படாது. வேறு வழி உண்டானால் கூறுங்கள்!”

சகுனி: "துரியோதனா! நீ கேட்பது சரிதான். நானும் இப்படித்தான் ஆரம்பிப்பேன் - நீயும் இப்படித்தான் கூறவேண்டும். 'என்னிடம் நாடு இருந்தால் வைத்து விளையாடுவேன். இல்லாததால் இதுவரை வென்ற பொருள் அனைத்தும் பணயமாக வைத்து விளையாடுகிறேன்' என்று சொல். யுதிட்டிரனும் சரி என்பான்".

துரியோதனன்: "நாட்டுக்கு ஒரு சாக்கு சொல்லிவிட்டீர்கள். முதலாவதாக யுதிட்டிரன் பொருள் அனைத்தும் இழக்க வேண்டும். கடைசியாகத்தான் நாடு. நான் முன்பே கேட்டேன். நாம் நடிக்கலாம். பகடைக் காய்கள் நம் பக்கம் நடிக்க வேண்டுமே?"

சகுனி: "புரிகிறது துரியோதனா! காய்கள் தன்னிச்சையாகத்தானே விழும். வேண்டிய எண்ணிக்கை எப்படி விழும் என்று தானே கேட்கிறாய். இதோ பார்! இரண்டு விதமான பகடைக்காய்கள் வைத்திருக்கிறேன்." மடியிலிருந்து ஒரு ஜோடி மரத்தால் ஆனதும், மற்றொரு ஜோடி தந்தம் போன்ற வெள்ளை காய்களையும் எடுத்து வைத்தான் சகுனி. "துரியோதனா! முதலில் இந்த மரக்காய்களின் சக்தியைப் பார். நீ முன்று எண்ணிக்கைகளை சொல்".

துரியோதனன்: "ஒன்று, ஐந்து, பன்னிரண்டு"

சகுனி மூன்று முறை காய்களை உருட்ட, ஒன்று, ஐந்து, பன்னிரண்டு விழுகிறது. துரியோதனனும், கர்ணனும் கண்கள் அகல விரியப் பார்க்கிறார்கள். சகுனி, அருகில் அமர்ந்த கர்ணன் காதில் ஏதோ சொல்லிவிட்டு, துரியோதனைப் பார்த்து, "நீ இப்போது இந்த காய்களை எடுத்து மூன்று முறை உருட்டு" என்று கூற, துரியோதனன் உருட்டுகிறான். பன்னிரண்டு, ஐந்து, ஒன்று விழுகிறது. துரியோதனன் சந்தேகமாய்ப் பார்க்கிறான்.

கர்ணன்: "நண்பா! மாமா என் காதில் 'பன்னிரண்டு, ஐந்து, ஒன்று என்று விழும் பார்' என்று தான் கூறினார். ஆக மாமா காய்களை நடிக்க வைப்பார் என்று தான் தோன்றுகிறது.

துரியோதனன்: "மாமா, இந்த வெள்ளைக்காய்கள்?"

சகுனி: "இந்த காய்கள், மரக்காய்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. முதல் ஆட்டத்தில் நான் வெள்ளைக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவேன், யுதிட்டிரன் மரக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவான். பிறகு இரண்டாவது ஆட்டத்தில் காய்களை மாற்றி ஆடலாம் என்று கூறி இந்த வெள்ளைக்காய்களை யுதிட்டிரனிடம் கொடுப்பேன். அவன் தோற்பான்.

கர்ணன்: "மாமா! அதிக சக்தி உள்ள காய்களை யுதிட்டிரன் கையில் கொடுத்தால்...எனக்குப் புரியவில்லையே?"

சகுனி: "சக்தி உள்ளது என்றால், என்னிடமிருந்து விலகி இருந்தாலும் , நான் சொன்னபடி கேட்கும் என்பதுதான். புத்திசாலி, அதிபுத்திசாலி இருவரில் அதிபுத்திசாலி பக்கத்தில் இல்லாது எதிரில் எங்கோ இருந்தாலும் குறிப்புணர்ந்து காரியம் செய்வான். அதுபோலத்தான் வெள்ளைக்காய்கள். புரிகிறதா?"

துரியோதனனும் கர்ணனும் வாய்பேசாது தலையை ஆட்டுகிறார்கள்.

துரியோதனன்: "மாமா! நீங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது உறுதியான பின், இரண்டாவது ஆட்டம் ஏன்? முதல் ஆட்ட முடிவில் நாடு முழுவதும் நம் கையில். பின் என்ன?"

சகுனி பெரிதாகச் சிரிக்கிறான்.

சகுனி: "துரியோதனா! செல்வமும் நாடும் நம் கைக்கு வந்ததும் பகையை மறந்து விடுவதா? பாண்டு புத்திரர்களை அப்படியே விட்டுவிடலாமா? அடுத்த ஆட்டத்தில் ஐவரையும் அடிமைப்படுத்த வேண்டும்."

கர்ணன்: "ஐயோ! அடிமைப்படுத்துவதா?"

சகுனி: "துரியோதனா, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொற்படி நீதான் கலவரப்பட வேண்டும். ஆனால் கர்ணன் 'ஐயோ' என்று துடித்துவிட்டான். இதோ பார்! கர்ணன் வாயாலேயே பாண்டவர் ஐவரும் அடிமை என் கூற வைக்கிறேன்....ம்...இரண்டாவது ஆட்ட ஒத்திகையை ஆரம்பிப்போமா? கர்ணா! நீ இங்கு என் எதிரில் வந்து அமர். நீதான் யுதிஷ்டிரன். நான் துரியோதனன் சார்பில் ஆடும் சகுனி. துரியோதனா - நீ துரியோதனன் தான்."

கர்ணன்: "எனக்கு மட்டும் வேறு வேடமா, அதுவும் யுதிஷ்டிரன் வேடம்?"

சகுனி: "என் பங்கை நான் தான் செய்ய வேண்டும். அதுபோல துரியோதனனும் தான். யார் இப்போது யுதிஷ்டிரனை அழைத்து வர முடியும்? அதற்காகத்தான் நீ!"

கர்ணன் எழுந்து எதிர் பக்கம் அமர்கிறான். துரியோதனன் சகுனியையும் கர்ணனையும் மாறி மாறிப் பார்க்கிறான்.

சகுனி: "இது துரியோதனன் பேசும் வசனம் - 'யுதிஷ்டிரா! முதலில் இரண்டு ஆட்டம் சொக்கட்டான் ஆடலாம் என்று சொன்னோம். எதிர்பாராத விதமாக முதல் ஆட்டத்திலேயே நீ நாட்டை இழக்கும் படி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் ஆட என்ன செய்வது? முதல் ஆட்டத்தில் இந்த வெள்ளைக் காய்கள் மாமா சகுனிக்கு அபரிமிதமான வெற்றியை கொடுத்தது. இரண்டாவது ஆட்டத்தில் அதன்மூலம் உனக்கு வெற்றி கிடைக்குமோ என்னவோ! யாருக்குத் தெரியும்? இரண்டாவது ஆட்டம் ஆடாது போனால் நான் ஏதோ இந்த வெள்ளைக்காய்களில் சூது செய்து வெற்றியைப் பெற்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லுவார்கள். ஆகையால் அவசியம் ஆட வேண்டும்.

இந்தமுறை பணயமாக பெரிதாக ஒன்றும் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர், நம் சகோதரர்களை மாற்றிக்கொண்டால் போதுமானது. அதாவது உன் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் என் சகோதரர்கள் எண்ணிக்கையில் இருபதுபேர் சமம். நீ முதல் தடவை காய்கள் உருட்டுவதில் வெற்றி பெற்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை சொல்லி அது விழுந்தால் என்பக்கம் இருந்து இருபது பேர் உன்பக்கம் வந்து விடுவார்கள். உனக்கு அடிமை செய்வார்கள். நான் வென்றால் நகுல, சகாதேவன், இருவரில் ஒருவரை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.”

கர்ணன் தன்னை முழுவதுமாக யுதிஷ்டிரனாக பாவித்து யோசிக்கிறான்.

"யுதிஷ்டிரா, உன் பதில் என்ன?" என்று வாஞ்சையோடு சகுனி வினவுகிறான்.

"துரியோதனா! உன் வார்த்தைகள், எந்த தவறும் இல்லாதவை. இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்."

கர்ணன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் சகுனி உற்சாக மிகுதியில் பலமாக படபடவென கை தட்டுகிறான். கர்ணன் திடுக்கிட்டு விழிக்கிறான். "என்ன?", கர்ணன் வினவ, துரியோதனன், "கர்ணா! நீ சொன்ன வார்த்தைகள் உனக்கே தெரியவில்லை. ஆட்டமிழந்து தோற்றால் நாங்கள் ஐவரும் அடிமை என்றுதான் சொன்னாய். 'என்ன?' என்று இப்போது கேட்கிறாயே?"

கர்ணன் நடந்ததை முழுதும் கேட்டு மனம் துடிக்கிறான். ‘யுதிஷ்டிரனாக பாவித்த மாத்திரமே சகோதரர்கள் நூற்றியைந்து என்று கூறியிருக்கிறானா? யுதிஷ்டிரன் அப்படிப்பட்டவனா?' கர்ணன் சிந்தனை தடைபடுகிறது.


சகுனி மறுமுறை முதலிலிருந்து எப்படி யுதிஷ்டிரனை சொக்கட்டான் ஆட்டத்திற்கு அழைப்பது, வலைவிரிப்பது, பிடிப்பது என்று உற்சாகமாய் கூறலானான். 'தூண்டிலில் புழுவை வைத்து பெரிய மீன்களை பிடிப்பது போல, பாசம் சகோதர பாசம் என்னும் தூண்டிலில் யுதிஷ்டிரனைப் பிடித்து விடலாம்' என்று முடித்தபோது, துரியோதனன் மிகவும் திருப்தியடைந்தவன் ஆனான்.

அதே சமயம், கர்ணன் மட்டும் சற்று மனம் கலங்கி குழம்பினான். தூண்டில் புழுவாக சகுனி உபயோகிக்க, துரியோதனன் தன் சகோதரர்களையே தர தயாராகி விட்டானோ என்ற பயம் ஏற்பட்டது. அந்த நொடி நேர தடுமாற்றமும் துரியோதனனுக்கு சகுனி கூறிய உற்சாகமான வார்தைகளில் மறைந்து போனது. சகுனி சற்று மௌனமானான்.

அதே நேரத்தில் துரியோதனன் கர்ணன் இருவரும் பாண்டவர்கள் ஐவரையும் வெற்றி கொண்ட கனவை அசை போட்டு அமர்ந்திருந்தனர்.

சகுனி மனத்துள் எண்ணினான். பாண்டவர் ஐவரையும் சூதாட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட அழித்துவிடலாம். அடிமையாக்கி விடலாம். ஆனால் திரௌபதி? திரௌபதி? … மேற்கொண்டு சகுனியால் சிந்திக்க முடியவில்லை. கர்ணனும், துரியோதனனும் அவர்களுக்கே உண்டான வெறுப்பு, ஆத்திரத்துடன் 'பாண்டவர்களை ஒடுக்கிவிட்டோம்; ஆனால் திரௌபதி? திரௌபதி? … மேற்கொண்டு அவர்களாலும் சிந்திக்க முடியவில்லை.

மூவரும் ஏக காலத்தில் திரௌபதியை நினைத்து நினைத்து, அழிவுவர வேண்டும் என்று வேண்டினர். ஆக பாண்டவர்களோடு திரௌபதிக்கும் கேடு வர வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் முடிவாக திரௌபதி, திரௌபதி ... அழிவு வேண்டும் என தங்களுக்கே கேடு வெண்டி நின்றனர்.

பலமுறை பல சந்தேகங்களை, துரியோதனனும் கர்ணனும் கேட்டுக் கேட்டு ஆட்டத்தில் வெற்றி என உறுதி செய்து கொண்டனர். வழி அனுப்பும் முன்பாக சகுனி துரியோதனன், கர்ணன் இருவரையும் பார்த்துக் கூறினான்.

"இந்த நாடகம் இத்துடன் முடிந்து விட்டது என்று எண்ணாதீர்கள். பாண்டு புத்திரர்கள் ஐவரையும் வென்ற பிறகு மிக முக்கியமான பகுதி இந்த நாடகத்தில் உண்டு. அதை இப்போது உங்களுக்கு கூற மாட்டேன். ஒத்திகை ஏதும் இல்லாமல் நான் நடத்தப் போகும் பகுதி அது. துரியோதனா! அந்த நேரத்தில் நீ மிகவும் பொறுமையாகவும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். அதிலும் அதற்கு அடுத்த வெற்றிக்கும் பிறகு கூட மிக மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியமானது. என்னிடம் இப்போது ஏதும் கேட்காதீர்கள். அந்த சந்தர்பத்தில், துரியோதனா! ஏதும் யோசியாது நான் சொல்வதற்கு 'சரி' என்று மட்டும் நீ சொல்ல வேண்டும். பிறகு பண்டவர்கள் வாசம் வனவாசம். போய்வாருங்கள்!" என விடை கொடுத்தான் சகுனி.

நாடகத்தின் கடைசி பகுதி என்னவென்று சகுனி முன்பே முடிவு செய்துவிட்டான். சகுனியின் நினைப்பு இப்படிப் போனது! ‘கடைசிப் பகுதியை இப்போதே சொன்னால் துரியோதனன் தயக்கம் காட்டுவான். கர்ணனும் கூட உற்சாகப் படுத்த மாட்டான். ‘பாண்டவரை அடிமைப்படுத்த வேண்டும்' என்ற உடனேயே கர்ணன் கையைச் சுட்டுக்கொண்டவன் போல 'ஐயோ!' என்று கூவிவிட்டான்.

யுதிஷ்டிரன் எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னையும் இழந்து நிற்கும் போது 'யுதிஷ்டிரா! உன்னிடம் விலை மதிப்பில்லா மாணிக்கம் ஒன்று உள்ளது. அது உனக்கு எப்போதும் சகல சௌபாக்கியத்தையும் தரவல்லது. அதை எதிர் நிறுத்தினால் நிச்சம் வெற்றி உனக்கு உண்டாகும்', என பலவாறு வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசி, திரௌபதியை பணயமாய் எதிர் நிறுத்தி, இதுவரை இழந்த பொன், பொருள், நாடு, நகரம் முதலியவற்றை எதிர்வேண்டி ஆடு எனச் சொல்ல வேண்டும். திரௌபதியை தாராளமாய் புகழ வேண்டும்; துதிக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்குபவன் சிறு மரத்துண்டு மிதந்தாலும் அதைப் பற்றுவான். அதுபோல், கலங்கி நிற்கும் யுதிஷ்டிரன், புத்தி, மனம் ஏதும் செயல்படாது. பிரமித்து, திரௌபதியையும் வைத்து விளையாடுவான். தவிர தோற்றாலும் 'நீங்கள் அனைவரும் உள்ள இடத்திற்குத்தான் அவளும் வருவாள்' என புரிந்தும் புரியாமலும் வேகமாய் முன்னும் பின்னும் சொல்லி ஏதாவது குழப்பம் செய்து, ஆட வைத்து, வெற்றி கொண்டு, பிறகு யுதிஷ்டிரன் செய்தது அனைத்தும் தவறு, குற்றம், என குறைகள் கூறி, பாண்டவர்கள் வனவாசத்திற்கு வழி வகுத்துவிட வேண்டும்.

இந்த சாகசத்தில் துரியோதனன் ஒத்துழைப்பும் வேண்டும். 'நாட்டை வென்ற பிறகு இரண்டாவது ஆட்டம் ஏன்?' என்று கேட்டவன் அல்லவா? சிறு பொறியே, பெரு நெருப்புக்குக் காரணம் ஆகும். திரௌபதியோ அணையா நெருப்பு. அவளையும் அடிமை என்று கடைசியில் சொல்லி, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும். பாண்டவரை வென்ற வெற்றிக் களிப்பில், துரியோதனன் இருக்கும் போது இதைச் சொல்லி, சொல்லியபடி செய்து, எல்லோரையும் வனவாசத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

துரியோதனன் தன் புஜபலத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவன். பாண்டவர்களை எப்படியோ வெற்றி கொண்டு வனவாசம் அனுப்பிவிட்டால் போதும்; திரௌபதியால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணுவான். எனக்குத் தெரியும் அவளால் பெருந்தீயை உருவாக்க முடியும் என்று. சட்டியில் இட்ட தீயைப் போல, அவளையும் அடிமை என்று கூறி, நாட்டை விட்டு எட்டி வைத்துவிட வேண்டும். அப்படி செய்யாமல் போனால், திரௌபதி நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் தீதுதான்.’

சகுனி தனிமையில் அமர்ந்து மேலும் சிந்தித்தான். 'துரியோதனன் ஒன்று, ஐந்து, பன்னிரண்டு என்ற காய்களை உருட்டுதல் மூலம் வெற்றி என நினைக்கிறான். நாடகத்தில் காய்கள் ஒரு சிறு அங்கம். "காய்கள் நடிக்குமா?" என்றும் கேட்டான்! நடிக்க வைப்பேன் என நம்பவைத்தேன். இது ஆரம்பம்; அவ்வளவுதான்.

முதலில் யுதிஷ்டிரனை வரவழைக்க வேண்டும். காய் ஆட வைக்க வேண்டும். பிறகு ஆட்ட முடிவில் நாடு எங்களுடையது என்று முடிக்க வேண்டும். இது நாடகமோ அல்லது நிஜமோ. இந்த அங்கம் எதிர்பாராது கடைசியில் தான் வர வேண்டும். இந்த வனவாசத்தை முதலிலோ அல்லது ஆட்ட நடுவிலோ சொன்னால் எல்லாம் குலைந்து போய்விடும். துரியோதனன் ஒரு முரட்டுக் குதிரை. நாடு என்னும் புல்லை காட்டி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

யாருக்கும் துளி சந்தேகம் கூட ஏற்படாதவாறு என் சொக்கட்டான் வலை பின்னப்பட வேண்டும். பாண்டவர்களோ, அல்லது விதுரர், பீஷ்மர் போன்றவர்களோ சற்று சந்தேகப் பட்டுவிட்டால், நான் என்ன சாமர்த்தியம் செய்தாலும் காரியம் கைகூடாது.

முதலில் சிறு எண்ணிக்கையில் பொற்காசுகள் பணயம். அப்போது, துரியோதனன் கைப்பொருள் மட்டும் தான் ஆட உபயோகப் படுத்தப்படுகிறது - என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அரசாங்க கருவூலத்திலிருந்து அரைக்காசு கூட துரியோதனன் பெறவில்லை என்று விதுரர் முதலில் நம்ப வேண்டும். பிறகு யுதிஷ்டிரன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும்படி செய்ய வேண்டும்.

மன்னன் என்பவன் தனக்கு பிரியமானவர்களுக்கு சந்தோஷ மிகுதியால் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைத்தான் தருவான். துரியோதனனும் முதலில் யுதிஷ்டிரனின் முத்து மாலையைத்தான் கேட்க வேண்டும். யுதிஷ்டிரன் கண்ணில் சூது மறைந்து, தம்பி துரியோதனன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற மன ஆவலை உண்டாக்க வேண்டும். பிறகு பசு மந்தைகள், சில கிராமங்கள், பல கிராமங்கள் என வலையைப் பெரிதாக்க வேண்டும். ஒரு நிலையில் பல பிரதேசங்களை வென்று, கடைசியில் இந்திரப்பிரஸ்தம் என்று கேட்க வேண்டும். அப்போது யுதிஷ்டிரனின் நாட்டின் பல பகுதிகள் துரியோதனன் கையில் வந்திருக்கும். அந்த நிலையில் யுதிஷ்டிரனால் ஏதும் செய்ய முடியாது. வென்ற பகுதிகளை பணயமாய் காட்டி, இந்திரப்பிரஸ்தம் கவர வேண்டும். குரங்கு ஆப்பம் பிட்ட கதைதான் - நாடு முழுதும் நம்வசம்!

"ஐயோ!" என்று கூவிய கர்ணன் வாயால், "இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்" எனக் கூற வைத்தது போல், நாடகத்தின் மறுபகுதியை நடத்திவிட வேண்டும்'.

சகுனி யோசித்து திட்டமிட்ட நாடகம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் திரௌபதியையும் தோற்றான் என்றவுடனேயே, சகுனியின் பிடிப்பை மீறி, துரியோதனனும், அவன் சகோதரர்களும் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். சற்றும் எதிர்பாராமல் கர்ணனும் கூட அல்லவா, திரௌபதியிடம் தன் துவேஷத்தை, தாசி என விளித்து அவையில் கொட்டி விட்டான்.

ஆக, இதுவரை, ஆற அமர பல நாட்கள் ஒத்திகை பார்த்து நடத்திய நாடகத்தின் முடிவில் எது நடந்துவிடக் கூடாது என சகுனி நினைத்தானோ அதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் துரியோதனனும் அவன் கூட்டமும்.

சகுனி பாண்டவர் ஐவரையும் அடிமையாய் காட்டி, பாஞ்சாலியையும் கூட நாட்டைவிட்டு எட்டி வைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் பஞ்சபூதங்களின் துணையுடன் பட்டினப்பிரவேசம் புறப்பட்டதுபோல், பாஞ்சாலி அரச அவையில் விரித்த கூந்தலுடன் வளர்ந்த வஸ்திரத்துடன், ஊழி கூத்து நடத்தும் மாகாளி போலே நின்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

சூதும் சதியும் அறிந்த சகுனியே கலங்கிவிட்டான். இனி நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. நடப்பது நடந்தே தீரும் - என்று எதிர்பார்த்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் சகுனி.

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

புதன், நவம்பர் 23, 2005

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும் - முன்னுரை

இருபது வருடங்களுக்கு முன்னால் என் தந்தையாரால் எழுதப்பட்டது இது. அவர் தன் தாயிடம் கேட்ட ஒரு விஷயத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதினார்.

என் பாட்டி என் தந்தைக்கு பாரதக் கதை சொல்லும் போது, திரௌபதி அரசவையில் வாதிட்டு ("என்னை இழந்து தன்னை இழந்தாரா? அல்லது தன்னை இழந்து பின் என்னை இழந்தாரா?"), கையால் காய்களைத் தொடாமல், கால்களால் ஆடி, பாண்டவர்களை திரும்ப வென்றதாகவும், சகுனியின் சூதினால் யுதிஷ்டிரன் இரண்டாம் முறையும் விளையாடி, ஆட்டத்தில் தன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று தெரிந்தும், தர்மத்திலிருந்து வழுவாதிருப்பதற்காக தெரிந்தே தோற்றதாகவும் சொல்லியிருக்கிறார்.

தான் கேட்ட கதையை 'தர்மரின் பொறுமையும், திரௌபதியின் பெருமையும்' என்ற தலைப்பில் ஒரு கதையாக என் தந்தை எழுதினார். இது பின்னால், என் பாட்டி மறைந்தபின், முதலாவதாண்டு அஞ்சலியின் போது புத்தகமாகவும் வெளி வந்தது. அதை இங்கே ஆறு பாகங்களாகத் தருகிறேன்.